― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைவெளிச்சம் படாத வேர்: பசு ராகவன் எனும் பண்பாளர்!

வெளிச்சம் படாத வேர்: பசு ராகவன் எனும் பண்பாளர்!

- Advertisement -

மயிலாடுதுறை குத்தாலம் அருகில் உள்ள ஊர் வில்லியநல்லூர். திருமணஞ்சேரிக்கு அருகில் உள்ள மிகச் சிறிய கிராமம்.

இந்த ஊர் பெருமாள் கோவில் பட்டாசாரியாராக இருந்தவர் சேஷாத்ரி. இவரின் மகன் ராகவன். பசு ராகவன் என்றால் பலருக்கும் தெரியும்.

பள்ளிப்படிப்பை குத்தாலம் Board High Schoolல் முடித்தார். அப்போதைய பள்ளி கூட தோழர் மாயவரம் முன்னாள் MLA ஜெக. வீரபாண்டியன். பள்ளிப்படிப்பை முடித்த ராகவன் வேலை தேடி சென்னை வந்து திருவல்லிக்கேணியில் கெல்லட் ஹை ஸ்கூல் எதிர்புறம் உள்ள Mansionல் தங்கியிருந்தார். இடதுசாரி சிந்தனை கொண்டவராக இருந்தார். பக்கத்து ரூமில் பூபதி என்ற ஸ்வயம் சேவக் இருந்தார்.

அந்தப் பகுதி பிரசாரக்காக அண்ணன் வெங்கடாத்ரி இருந்தார். ராகவனை சந்தித்து பேசும் போது கம்யூனிஸ்ட் சித்தாந்தமே உயர்ந்தது, உங்களிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று தட்டிக் கழித்தார். மனம் தளராத வெங்கடாத்ரி உங்கள் கேள்விகளுக்கு விடை சொல்ல ஒருவர் இருக்கிறார், என்னுடன் வாருங்கள் என்று சேத்துபட்டு சங்க காரியாலயத்திற்கு அழைத்து வந்து சுப்பா ராவ்ஜியை சந்திக்க வைத்தார்.

பல மணி நேர விவாதத்திற்குப் பிறகு சங்க கொள்கையை ஏற்றுக் கொண்டார் ராகவன். பின்னர் நடந்த குரு பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் வைத்திருந்த பணத்தை குரு தட்சினையாக கொடுத்து விட்டு, பூபதிஜியிடம் பஸ்ஸுக்கு காசு வாங்கி கொண்டு சென்றார்.

பின்னர் அப்பா அம்மாவையும் சென்னைக்கு அழைத்து வந்து பெரம்பூரில் வீடு பார்த்துக் குடியேறினார்.

பல வேலைகள் செய்தவர் screen printing தொழில் கற்றுக் கொண்டு business ஆரம்பித்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக முதல் போட பணம் இல்லை.

எந்த அளவுக்கு குடும்பத்தில் பொருளாதார பிரச்சினை என்பதை அவரே ஒரு முறை சொன்னது “Printing விஷயமாக customer ஒருவரை 4 நாளில் மூன்று முறை சந்தித்தேன். Customer கேட்டார் என்ன ராகவன் ஒரே சட்டையில் தினமும் உங்களை பார்க்கிறேன் ” என்றார். காலை போட்டுக் கொண்டு போகும் சட்டையை இரவில் தோய்த்து காயவைத்து பின்னர் அடுத்த நாள் போட்டு கொண்டு போவேன் என்றார்.

RSSல் ஒரு முக்கிய நபர் சில சுயம் சேவகர்களை அழைத்து ராகவன் நிலையை விளக்கி சொல்லி தலைக்கு ஆயிரம் ரூபாய் வீதம் கொடுங்கள். அவன் வியாபாரம் நல்ல முறையில் போனால் திருப்பி கொடுப்பான் என்று சொல்லி மூலதனம் திரட்டிக் கொடுத்தார். கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப நல்ல முறையில் வியாபாரம் செய்து வாங்கிய ஒவ்வொருவருக்கும் பணத்தை திருப்பிக் கொடுத்தார்.

முதல் முதலில் ஓம் ஸ்டிக்கர் போட்டு வீடு தோறும் ஓட்ட வைத்தார். 50பைசா போன்று மிக குறைந்த விலையில் ஓம் ஸ்டிக்கர் போட்டு பார்ப்பவர்கள் எல்லாரிடமும் கொடுத்து ஓட்ட வைப்பார். இது பற்றி ஒரு முறை நான் கேட்டதற்கு “நான் ஒரு Pride இந்து” என்று அனைவரும் சொல்லிக் கொள்ளவும், இந்து என்ற உணர்வை ஏற்படுத்தவும் இது உதவும்” என்றார். சில மாதங்களில் நான் பார்க்கும் பல வீடுகளிலும் ஓம் ஸ்டிக்கர் இருக்கும். அப்படி இல்லாத வீடுகள் மிகவும் குறைவு. இந்த ஒரே காரணத்தால் ஸ்டிக்கர் ராகவன் என்று காலப்போக்கில் அழைக்கப் பட்டார்.

அயோத்தி போராட்டத்தின் போது வடபழனி பகுதியில் ஒரு ரதம் ஏற்பாடு செய்து ராமர் ரத யாத்திரை நடத்தினார்.

1989ம் ஆண்டு அக்டோபர் மாதம் அயோத்தி கரசேவைக்கு நாடு முழுவதும் இருந்து சென்றார்கள். தமிழகத்தில் இருந்து ராகவனும் சென்றார். மத்திய பிரதேசம் சித்திர கூடத்தில் கைது செய்யப் பட்டார்.

திருமணம் நடை பெற்றது. மனைவியும் businessக்கு மிகுந்த பக்க பலமாக திகழ்ந்தார். வீட்டை பெரம்பூரிலிருந்து மாம்பலம் கோதண்ட ராமசாமி கோவில் தெருவுக்கு (K R கோவில் தெரு) மாற்றினார்.

சங்கத்தில் இருந்து பாஜகவுக்கு வந்து வேலை செய்ய தொடங்கினார். சைதாப்பேட்டை தொகுதி அமைப்பாளராக முதல் பொறுப்பு. அப்போது நான் தி.நகர் தொகுதியில் வட்ட தலைவர். நான் bachelor வாழ்க்கை. அடிக்கடி என் flatக்கு வருவார். பல நண்பர்களும் வருவார்கள். நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருப்போம். சில நேரங்களில் விடிந்து டீ சாப்பிட்டு கிளம்பும் அளவுக்கு விடிய விடிய பேசுவோம். இதே போல பல்லாவரம் தேசிகனுக்கும் அனுபவம் உண்டு.

வேங்கிஸ்வரர் கோவில் குள மீட்பு போராட்டத்திலும் எங்களுடன் இணைந்து செயல் பட்டார்.

Y S கண்ணன் ஜியுடன் நல்ல நட்பில் இருந்தார். அவருடன் இணைந்து வடபழனி முருகன் கோவில் அருகே விநாயகர் பிரதிஷ்டை செய்து ஊர்வலத்திற்கு வருவார்.

ஒரு சில இடங்களில் இருந்து வர வேண்டிய paymentல் கால தாமதமும், சில இடங்களில் வர வேண்டிய பணம் வரவும் இல்லை. இந்த கால கட்டத்தில் printing தொழிலில் மாற்றம் ஏற்பட்டது. அதனால் தொழிலில் பிரச்சினை ஏற்பட்டு மூடி விட்டார்.

மாம்பலத்தில் இருந்து பெருங்களத்தூர் இடம் பெயர்ந்தார். அங்கும் கட்சி வேலையை தொய்வில்லாமல் செய்தார். அப்போது K T ராகவன் காஞ்சி மாவட்ட தலைவர். பசு ராகவன் மாவட்ட துணை தலைவராக செயல்பட்டார். அப்போது K T ராகவன் என்னிடம் சொன்ன ஒரு வார்த்தை இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.

“நமக்கு ஆளே இல்லாத இடத்தில் (ஸ்டிக்கர்) S. ராகவன்ஜியை அனுப்பி வேலை செய்ய வைத்தால் ஆளை கண்டுபிடித்து, நம் இயக்கத்திற்கு Ideological Comittment உள்ள காரியகர்த்ராக உருவாக்கி கொண்டு வருவார்” என்றார்.

அந்த அளவுக்கு மக்களுடன் உடனடியாக நெருங்கி வேலை செய்வதில் வல்லவர் பசு ராகவன்.

Reserve bank நடேசன் ஜி மூலம் பசு பராமரிப்பில் ஈடுபாடு ஏற்பட்டது. வெறும் பசு பராமரிப்போடு நிற்காமல் அதன் மூலம் உப பொருட்கள் தயாரிப்பது, இயற்கை விவசாயம் செய்வது, சாஸ்திர சம்பிரதாய முறையில் திருநீறு தயாரிப்பது என்று படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டார்.

இந்த காலக்கட்டத்தில் ஸ்டிக்கர் ராகவனை நாங்கள் மாட்டு ராகவன் என்று அழைக்க ஆரம்பித்தோம்.

ஒரு Vespa Scooterல் பெருங்களத்தூரில் ஆரம்பித்து பல இடங்களுக்கும் சென்னை மாநகர் முழுக்க சுற்றுவார். சற்றும் சோம்பல் பட மாட்டார். தன் வியாபாரத்திற்கும், சங்கப் பணிக்கும், கட்சி வேலைக்கும் அவன் உழைத்த உழைப்பு பிரமிப்பு ஏற்படுத்தும்.

K T ராகவனின் பூர்விக கிராமமான கொண்டங்கியில் அவர்கள் குடும்பத்திற்கு சொந்தமான பூர்விக இடம் தரிசாக கிடந்தது. அதை KTR அப்பாவிடம் பேசி பெற்று அங்கே மாடு வளர்ப்பு, பசுஞ் சாணம் bye products, இயற்கை விவசாயம் என்று செயல் பட்டார். பண்ணை குட்டை ஒன்றையும் அங்கேயே ஏற்படுத்தினார்.

செங்கல்பட்டு வழியாக வெட்டிற்குப் போகும் மாடுகளை மீட்புப் பணியும் செய்தார்.

ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது, 2003ம் ஆண்டு என நினைவு. கால்நடை மானிய கோரிக்கை விவாதத்தில் தான் என்ன பேசலாம் என்று தன் பள்ளித் தோழன் ராகவனை அழைத்து அப்போதைய மாயவரம் MLA J . V ஆலோசித்தார். கன்று குட்டிகளைக் கொன்று விட்டு ஊசி போட்டு செயற்கை முறையில் பால் சுரக்க ஊசி போடப்படும். இதனால் மாடுகள் பெருமளவில் குறைய தொடங்கியது. இதனை தடுக்க சட்டம் இயற்றி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று J V யை பேச சொன்னார். அதையொட்டி J V பேசினார். பின்னர் ஜெயலலிதாவும் சட்டம் கொண்டு வந்தார்.

ராகவன் மறைந்த விஷயத்தை நான் J V யிடம் சொன்ன போது அவர் இதை நினைவு கூர்ந்தார். பிறந்த கன்றை இரண்டாவது நாள் ஒரு அறையில் போட்டு பூட்டி, பசி மேலிட அது எப்படி சுவற்றை நக்கி மயங்கி இறக்கும் என்று ராகவன் சொன்னதையும் J V நினைவு படுத்தினார்

சில ஆண்டுகள் கழித்து அங்கிருந்து கிளம்பி இயற்கை விவசாயம், நாட்டு மாடு வளர்ப்பு, கிராம பொருளாதார முன்னேற்றம் என்று வகுப்பு எடுக்கும் நிலைக்கு உயர்ந்தார்.

திருவாரூர் அருகே உள்ள கமலாபுரம் என்ற சிறிய கிராமத்தில் விவசாய நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தார்.

தானும் தன் மனைவியும் தங்குவதற்கு ஒரு கீத்து கொட்டாய் வீடு கட்டிக் கொண்டார். நாட்டு இன பசு மாடு வளர்ப்பில் கவனம் செலுத்தினார். குறிப்பாக உம்பளச்சேரி இனம் அழியாமல் இருக்க பல போராட்டங்களை அரசாங்க அளவில் எடுத்து சென்றார். அதற்கும் நல்ல பலன் கிடைத்தது. அரசாங்கம் உம்பளச்சேரி இன பாதுகாப்பிற்கான வேலைகளை செய்தது.

இதன் காரணமாக நாங்கள் அவரை பசு ராகவன் என்று அழைக்க ஆரம்பித்தோம்.

கும்பகோணம் திருச்சேரை அருகே குடந்தை கண்ணன் ஜி (ஜில்லா காரியவாஹ்) உதவியாலும், ராகவன் ஆலோசனையிலும் ஜாவர் Groups மிகப்பெரிய கோசாலை அமைத்தது.

பெங்களூர், ஹைதராபாத், மும்பை என்று பல இடங்களுக்கு சென்று கிராம பொருளாதார மேம்பாடு, பசு வளர்ப்பு, குறிப்பாக நாட்டுப் பசு வளர்க்கும் வழக்கம் மீண்டும் வர வேண்டும் என்று உழைத்தார். அதற்காக பல சேமினார்களில் guest lecturer ஆக சென்றார். இந்த கோட்பாட்டிற்கு VEDA என்று பெயரிட்டு செயல் படுத்தினார்.

ஹைதராபாத்தில் உள்ள IIM campusல் VEDA பற்றி கடந்த இரண்டு வருடங்களாக பேச அழைக்கப்பட்டார். ஒரு நிபுணராக உருவெடுத்தார். அப்படி ஒரு dedication.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்னை பார்க்க வந்தார். சற்று நேரம் கழித்து என்னை பார்க்க சிலர் பாண்டி பஜாரில் உள்ளார்கள்,போக வேண்டும் என்றார். நானும் வருகிறேன் என்று உடன் சென்றேன்.

5,6 பேர் இருந்தார்கள். ராகவனை பார்த்தவுடன் காலை தொட்டு வணங்கினர். குருஜி, குருஜி என்று மிகுந்த மரியாதையுடன் ராகவனிடம் பேசினார்கள். அவர்கள் கிளம்பி போனவுடன் விவரம் கேட்டேன். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் பெங்களூரில் எடுப்பதாக சொன்னார். கண்டிப்பாக entrance fee உண்டு. ஆனால் நிகழ்ச்சி முடிந்த பின்னர், குரு தட்சிணையாக கொடுப்பார்கள் என்றார். அந்த அளவுக்கு rural economy விஷயத்தில் நிபுணராக திகழ்ந்தார்.

அதுவரை இப்படி ஒரு பக்கம் ராகவனுக்கு இருப்பது எங்களுக்குத் தெரியாது.

ஏப்ரல் 1ம் தேதி என்னை அழைத்து பேசும்போது புதியதாக ஒரு eco based, Rural devolepment இயக்கத்திற்கு பெயர் கேட்டார். பல பெயர்களை விவாதித்ததில் நான் Mirasu என்ற பெயரை சொன்னேன். அடுத்த நொடி அதனை ஏற்றுக் கொண்டான்.

அப்போது எதை எதையோ எழுதுகிறாய். நான் செய்யும் வேலையைப் பற்றி ஏண்டா எழுதல என்றான். நானோ வழக்கமான பாணியில் நானும் நீயும் 100வயசு இருப்போம், நாளைக்கே போகப் போவதில்லை என்றேன். சிரித்துக் கொண்டே ஆமாம், நாம்ப அவ்வளவு பாவம் செய்திருக்கிறோம் என்றார்.

எழுத சொன்னது தன்னைப்பற்றி அல்ல. தான் செய்யும் வேலையைப் பற்றி. அதனால் கிராமத்தில் உள்ள ஏழை பெண்களுக்கு வாழ்வில் கிடைக்கக்கூடிய பொருளாதார முன்னேற்றம் பற்றி.

கோமியத்திலிருந்து கோ அர்க் தயாரித்து கேன்சர் போன்ற நோய்களுக்கு எப்படி மருந்தாகப் பயன் படுத்தலாம்.

விபூதி, குங்குமம், பல் பொடி போன்று கிட்டத்தட்ட 20வகையான பொருட்களை வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்து அதன் மூலம் எப்படி கிராமத்து பெண்கள் பணம் சம்பாதிக்கலாம் என்று கிராமிய பொருளாதாரம் பற்றி பெரிய கனவு கொண்டிருந்தார்.

பசுமாடு என்றால் பால், கோமியம், சாணம், விபூதி… இதைத் தாண்டி நம்மால சிந்திக்க முடியாது. ஆனால் குக்கிராமத்தில் ஒரு பசுமாடும் சிறிது நிலமும் இருந்தால், நூற்றுக்கணக்கான பொருட்களை தயாரிக்க முடியும். ஒவ்வொரு விவசாயியும் ஒரு சிறு தொழில் முனவோர் ஆக பொருளாதார மேம்பாடு அடைய முடியும் Empowering a rural farmer as a small entrepreneur with a cow as an investment என்பது குறித்து மிக விரிவாக ஆய்வு செய்து யு டியுப் தளத்தில் பல வீடியோக்கள் வெளியிட்டிருக்கிறார். தமிழகம் முழுவதும் பல கல்லூரிகளில் எம்பிஏ மாணவர்களுக்கு இவரது ஆய்வு புதிய கண்ணோட்டத்தை தந்துள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் உள்ள கல்லூரிகளிலும் இவரது கருத்தரங்குகள் நடைபெற்றுள்ளது.

ராகவனுக்கு இரண்டு பெண்கள். முதல் மகள் மீனாட்சி கல்லூரியில் படிக்கும் போதே திருமணம் (1998 – 1999 என்று நியாபகம்) நடந்தது. அப்போதைய Principal கல்யாணம் செய்து படிப்பை பாதியில் நிறுத்ததான் போராடி சீட் வாங்கினீர்களா என்றார். இல்லை கல்யாணத்துக்கு பின்னரும் என் மகள் படிப்பை தொடர்வாள் என்றார்.

இரண்டு மாதம் முன்பு பேசும்போது பேத்திக்கு 18,19வயதாகிறது. கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்றார்.

என்னை விட வயதில் 10,12 வயது மூத்தவன். ஆரம்பம் முதலே நீ வா போ என்று நான் அழைக்க ஆரம்பித்து வாடா போடா என்று பேசும் அளவுக்கு நட்பு ஏற்பட்டது. உன்னை இப்படி மரியாதை இல்லாமல் பேசுகிறேனே என்றால், வேண்டாம் டா நீ இப்படியே கூப்பிடு. மாத்திக் கொண்டால் எனக்கு சங்கடம். எனக்கு நீ வேட்டு வெப்ப என்று சிரித்துக் கொண்டே சொல்வார்.

யோகாசனம், மூச்சுப் பயிற்சி என்று தினசரி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வார்.

தற்போதெல்லாம் எங்கே போனாலும் TVS 50 வண்டிதான். காஞ்சிபுரம், செங்கல்பட்டு கூட TVS 50 தான். அந்த வண்டியில் முன் பக்கத்தில் ஒரு சாக்கு மூட்டை இருக்கும். அதில் சிறு தானியங்கள், மற்றும் இதர பொருட்கள் இருக்கும்.

பார்க்கும் அனைவரிடமும் சிறுதானிய உணவு அவசியம் பற்றி எடுத்து சொல்வார். அது உடலுக்கு எப்படி நன்மை செய்கிறது. ஆரோக்கிய வாழ்வுக்கு அதன் அவசியம் என்று awarness ஏற்படுத்துவார்.

ஒரு நிகழ்ச்சி நடத்தினால் அது வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டான். முயற்சி மட்டுமே நம்முடையது. மற்றது பரம்பொருள் கையில் என்ற பற்றற்ற நிலையில் இருப்பான்.

அதனால் தானோ என்னவோ அவன் மரணமும் அப்படியே அமைந்து விட்டது.

இன்று காலை எழுந்து யோகாசனம், மூச்சு பயிற்சி செய்து முடித்து விட்டு நாற்காலியில் உட்கார்ந்தவன் மனைவியை அழைத்து வலது கை தோள் பட்டை வலிக்கிறது. நீ போய் புடவை கட்டிக் கொண்டு வா என்று சொன்னவுடன் மனைவி என்ன ஆச்சு உடம்பு சரியில்லையா என்று விசாரித்துள்ளார்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர் உயிர் பிரிந்தது.

பிரதிபலன் எதிர்பாராமல் வாழ்ந்த, தன்னலமற்ற அந்த தூய ஆத்மா இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன்.

  • ஓமாம்புலியூர் ஜெயராமன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version