spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைதிராவிட இயக்கமும், சாதி வெறியும்: டாக்டர் கிருஷ்ணசாமி!

திராவிட இயக்கமும், சாதி வெறியும்: டாக்டர் கிருஷ்ணசாமி!

- Advertisement -
krishnasamy
krishnasamy
  • திராவிடம் சாதி வேறுபாட்டை ஒழிக்க பார்ப்பனர்களையும், இந்து பண்பாட்டையும் மட்டும் குறிவைத்து தாக்கினீர்களே? சாதியை ஒழித்தீர்களா?
  • சமத்துவத்தை உருவாக்கினீர்களா? இந்து பண்பாட்டுக்கு மாற்றாக நீங்கள் வைத்த மாற்று தத்துவம்தான் என்ன?
  • நீங்கள் பேசிய திராவிடம் சாதியத்தையும் வளர்த்து, வேற்று மதங்களுக்கு கதவுகளை திறந்து விட்டதுதானே மிச்சம்? உங்களால் வேறு என்ன செய்ய முடிந்தது?
  • சமத்துவம் பேசிய உங்களுக்கு சாதிய கொம்புகள் முளைத்தது எப்படி? சாதி பாகுபாட்டின் அடையாளமாக திராவிடம் மாறியது எப்படி?

சாதி பாகுபாட்டின் அடையாளமாக திகழும் திராவிடம்!
சமத்துவம் பேசிய உங்களுக்கு சாதிய கொம்புகள் முளைத்தது எப்படி?

கடந்த வாரம் தயாநிதி மாறனும் – டி.ஆர்.பாலுவும், கடந்த மாதத்தில் ஆர்.எஸ்.பாரதியும் – ஊடக வெளிச்சத்தில் அதிகம் வெளிவந்த பெயர்கள், இவர்கள் திமுக-வின் முக்கிய அடையாளங்கள்.

இவர்களின் புதிய ஆராதனைகள் – ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்டோர், பிச்சையிடுதல், மூன்றாம் தர, நான்காம் தர வகுப்பினர், அம்பட்டையன்கள் – மன்னிக்கவும், இது என்னாலோ, எங்கள் இயக்கத்தினராலோ, இந்த மண்ணில் சிறிதளவேனும் சமூக பற்று உடையவர்களாலோ ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள் அல்ல.

கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக திராவிடம் பேசி, சாதி ஒழிப்புக்கு உரக்க குரல் எழுப்பி, சமத்துவம் பேசி வரும் திமுக-வின் முன்னணி அடையாளங்களாக விளங்கக் கூடியவர்கள் உதிர்த்த கொள்கை முத்துக்கள் இவை.

ஆர்.எஸ்.பாரதி – முன்னணி வழக்கறிஞர், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் –இவர்தான் ”ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இப்பொழுது கிடைக்கக்கூடிய சலுகைகள், நாங்கள் (திமுக) போட்ட பிச்சை” என்று அருள் வாக்கு மலர்ந்தவர்.

ஒரு வாரத்திற்கு முன்பு, தலைமைச் செயலகத்திற்கு மனு அளிக்கச் சென்ற மூன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து, தலைமைச் செயலாளர் “YOU PEOPLE” என்று சொன்னாராம், அதற்கு பொருள் மூன்றாம் தர, நான்காம் தர வகுப்பினர் என்றும், எங்களை (திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை) பார்த்து “YOU PEOPLE” என்று சொல்வதற்கு நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? என்றும் தயாநிதிமாறனும், டி.ஆர்.பாலுவும் குமுறினார்கள்.

“YOU PEOPLE” என்பதற்கு மூன்றாம் தர அல்லது நான்காம் தர வகுப்பினர், ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்டோர், தலித் என்று எந்த அகராதியிலும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஜாதி ஒழிப்பு பேசி ஆட்சிக்கு வந்த திமுக-வின் முன்னணி அரசியல் நிர்வாகிகளின் ஆழ்மனதில் மறைந்து கிடந்த சாதி துவேசமே அப்படி வெளிப்பட்டு இருக்கிறது. இதுவே, திராவிடம் பேசும் பெரும்பாலானோரின் அடிமனதில் புதைந்து கிடக்கக்கூடிய சாதிய துவேசம் ஆகும்.

தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம். அந்த அறையிலேயே தட்டிக் கேட்பதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால், அங்கு அமைதி காத்து விட்டு, வெளியே வந்து இவர்களின் நடவடிக்கையில் எவ்வித்திலும் சமந்தப்படாத மக்களை ஒப்பிட்டும், உவமைப்படுத்தியும் பேச வேண்டிய அவசியம் என்ன? இதுபோன்ற ஒரு சொற்றொடரை வேறு யாராவது பயன்படுத்தியிருந்தால், கடந்த ஒரு வாரகாலமாக தமிழக தொலைக்காட்சிகளில் அவர்களை பிராண்டி எடுத்திருக்கமாட்டார்களா?. தாழ்த்தப்பட்டோர் மீதான அவர்களுடைய பாசாங்குகளை கொட்டி தீர்த்திருக்கமாட்டார்களா? ஆனால், தயாநிதி மற்றும் பாலு ஆகியோரின் தாழ்த்தப்பட்டோர் மீதான சாதி துவேசம் 7-க்கும், 18-க்கும், தலைமுறைக்கும் மற்றும் பிற ஊடகங்களின் காதுகளுக்கு எட்டாமலும், கண்ணுக்கு தெரியாமலும் போனது ஏனோ?

கடந்த நூறு வருடங்களாக திமுக முழங்கி வந்த சாதி ஒழிப்பு கொள்கையை குழி தோண்டி புதைத்துவிட்டு அவர்களே அதற்கு நேரெதிராக பேசுகிறார்களே? இன்று வரையிலும் அக்கட்சியின் தலைமையிடத்திலிருந்து ஒரு கண்டனக் குரல் கூட வரவில்லையே?

டாக்டர் ஷ்யாம் குறிப்பிட்டது போல, பரோட்டா கடையில் தன்னுடைய கட்சிக்காரன் தகராறு செய்து விட்டதால், ஓடோடி சென்று அவரிடத்தில் மன்னிப்பு கேட்கக் கூடிய அக்கட்சித் தலைவர், தன்னுடைய கட்சியின் மூத்த நிர்வாகிகள் கோடான கோடி தமிழ் மண்ணின் மைந்தர்களை காயப்படுத்தியதற்காக அவர்கள் சார்பாக அவரே மன்னிப்புக் கேட்பார் அல்லது தன்னுடைய முழுமுதல் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்கள் மூவரையும் தார்மீக மன்னிப்பு கேட்க வைத்திருப்பார் என்று எதிர்பார்த்திருந்தோம்.

இம்மண்ணை பண்படுத்தி உலகிற்கு உணவளிக்கும் மாட்சிமை பொருந்திய மருதநில மக்களான தேவேந்திரகுல வேளாளர்களை அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக பட்டியல் வகுப்பில் சேர்த்ததனால் தான், அவ்வப்போது பலருடைய குத்திகாட்டுதலுக்கு ஆளாகி அவமானப்பட நேரிடுகிறது என்று கருதியே, தேவேந்திரகுல மக்களும், அம்மக்களின் குரலாக புதிய தமிழகம் கட்சியும் மாநாடுகள், பேரணிகள் என தொடர் போராட்டங்களை துவக்கிய பொழுது இதே கழகத்தினர்தான் ஏளனம் செய்தார்கள். தங்கள் எடுபிடிகளை தேவேந்திரகுல மக்களுக்கு எதிராக தூண்டிவிட்டார்கள். பட்டியலில் இருந்து வெளியேறினால் சலுகைகள் எல்லாம் பறிபோய்விடும் என்று முதலை கண்ணீர் வடித்தார்கள். சுயமரியாதைக்கான பட்டியல் வெளியேற்ற கோரிக்கை ஆர்.எஸ்.எஸ் மற்றும் மதவாத இந்துத்துவா பிஜேபியின் சதி என்றெல்லாம் கூறி நம்மீது சகதியை வீசி எறிந்து, ஏகடியம் பேசியவர்களின் யோக்கியதை என்னவென்று இப்பொழுதாவது தெரிகிறதல்லவா?

சில கட்சிகள் தங்களுக்கு தாங்களே முற்போக்குவாதிகள் என்று பெயர் வைத்துக்கொள்கிறார்கள். இவ்வளவு பெரிய நிகழ்வுகள் நடந்த பிறகும் கூட வெளிப்படையாக தமிழகத்தில் திமுக-வினரை கண்டிக்க ஒரு கட்சிக்கு கூட திராணி இல்லாத நிலையில், சாதிய ரீதியான மனோ நிலையில் இருந்து விடுதலை பெற்றவர்கள் தான் இன்னும் சாதிய சகதியில் சிக்கித் தவிக்கக்கூடிய மக்களுக்கு கை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையிலும், வரலாற்று பொறுப்பின் அடிப்படையிலும்தான் தேவேந்திரகுல வேளாளர் மக்களும், புதிய தமிழகம் கட்சியும் திராவிடத்தால் திட்டமிட்டு வளர்க்கப்பட்டு வரும் சாதிய உணர்வுகள், சாதிய வெறி, எஜமான போக்கு, அதிகாரப் போக்கு ஆகியவற்றிற்கு எதிராக போர்க்களம் காண்கிறோம்.

பார்ப்பனர் ஒழிப்பு, சாதி ஒழிப்பு ஆகிய இரண்டையும் தாரக மந்திரமாகக் கொண்டு வளர்ந்ததே திராவிட இயக்கம். நான்கு வருணங்களை உருவாக்கி சாதிய துவேசத்தை வளர்த்தவர்கள் பார்ப்பனர்கள். எனவே, சாதி ஒழிய பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்று ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கம் கண்டு ஆட்சிக்கு வந்தனர்.

சாதி வளர்ப்பின் அடையாளம் பார்ப்பனர்கள், சாதி ஒழிப்பின் அடையாளம் திராவிடர்கள்;
பார்ப்பனியம் வருண, சாதி பேதங்களை உள்ளடக்கியவை, திராவிடம் என்பது வருண, சாதி பேதங்கள் அற்றவை;
பார்ப்பனியம் ஏற்றத் தாழ்வுடையது, திராவிடம் ஏற்றத் தாழ்வற்றது;
பார்ப்பனியம் மூடநம்பிக்கைகள் உடையது, திராவிடம் மூடநம்பிக்கைகளை உடைப்பது;
பார்ப்பனியம் அந்நியமானது, திராவிடம் சுதேசி;
பார்ப்பனர்கள் வெளியில் இருந்து குடியேறியவர்கள் என்பது போன்ற கொள்கை முத்துகளை தமிழ் மண்ணிலே விதைத்து, திராவிடம் என்றாலே இங்கு உயர்த்தப்பட்டோரும் இருக்கமாட்டார்கள், தாழ்த்தப்பட்டோரும் இருக்கமாட்டார்கள், உயர்வு, தாழ்வு தலை தூக்காது; ஏழை, பணக்காரர் இருக்கமாட்டார்கள்; மூடநம்பிக்கைகளுக்கு இங்கு இடமே இல்லை, இங்கு எல்லாமே முற்போக்காகவும், பகுத்தறிவுக்கு ஏற்றதும்தான்.

எனவேதான் ஜாதியை ஒழித்துக் கட்ட பிராமணர்களை ஒழித்துக் கட்டுவோம். பாம்பையும் பார்ப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிட்டு! பார்ப்பனனை அடி!! என்று திராவிட இயக்க தளகர்த்தர்களால் உசுப்பேத்தி, முறுக்கேற்றி பேசி இலட்சக்கணக்கான தமிழ் மக்களை நம்ப வைத்து, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தார்கள்.

இப்படியெல்லாம் சாதி ஒழிப்பு முற்போக்கு பேசியவர்கள் தான் இப்பொழுது சாதியத்திற்கு வக்காலத்து வாங்குகிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், ஆட்சிக்கு வந்த பின்பும் முழங்கிய கொள்கை முழக்கங்கள் எங்கே?

இவர்களின் கடந்தகால நிலைமை எப்படி இருந்தது என்பதையெல்லாம் மறந்துவிட்டு எஜமானர்களை போல பேசுகிறார்கள்.

இப்பொழுது எந்த பார்ப்பனரும் இவர்களை போல சாதிக்கு வக்காலத்து வாங்குவதில்லை. திராவிடம் பேசி, சாதியை ஒழிக்க புறப்பட்டவர்கள்தான் சாதியை வளர்ப்பதில் முன்னனியில் நிற்கிறார்கள்.

என்ன குற்றசாட்டுகளையெல்லாம் பார்ப்பனியர்களிடத்தில் இருப்பதாக சொன்னீர்களோ? அவை அனைத்தையும் அதைவிட பன்மடங்கு இப்பொழுது உங்கள் உள்ளத்தில் காண்கிறோமே? இவர்கள் எந்த மக்களைப் பார்த்து அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தால் வழங்கப்பட்ட சலுகைகளைக் கூட இவர்கள் போட்ட பிச்சை என்று சொல்கிறார்களோ?

மூன்றாம் தர வகுப்பினர், நான்காம் தர வகுப்பினர், தாழ்த்தப்பட்டவர்கள் என்று தாழ்த்தி பேசுகிறார்களோ? அந்த தேவேந்திரகுல வேளாளர் மக்களின் வாழ்விடங்களும், ஆதிதிராவிட மக்களின் வாழ்விடங்களும்தான் திராவிட இயக்கத்தினுடைய தொட்டில்களாக விளங்கின என்பதை இவர்கள் மறந்து போய் விட்டார்களா? இவர்கள் மறந்தாலும், வரலாறுகள் மறந்திடுமா?

தயாவின் தாத்தாவிற்கும், திராவிட இயக்க முன்னோடிகளுக்கும், கோவை – குனியமுத்தூர், சிங்காநல்லூர், புலியகுளம், இராமநாதபுரம், கரூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் தி.க, திமுக கட்சிகளை வளர்க்க அடைக்கலம் கொடுத்தது தேவேந்திரகுல மக்கள் என்பதை மறந்து விட்டீர்களா?

வடக்கு மாவட்டங்களில் சத்தியவாணியும், வழுதி குடும்பங்களும், டெல்டா மாவட்டங்களில் தாழை.மு.கருணாநிதி குடும்பமும் உங்களுக்கு உருவாக்கி கொடுத்த களங்கள் எல்லாம் உங்கள் நினைவுக்கு வராதது ஏனோ?

மாறன், பாலு, ஆர்.எஸ்.பாரதி பேசியதை போன்று குருமூர்த்தியோ, H.ராஜாவோ, பொன்னாரோ, சி.பி.ஆரோ பேசியிருந்தால், இந்நேரத்தில் வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருக்க மாட்டீர்களா? அவர்கள் அப்படி பேசமாட்டார்கள் என்பது வேறு விஷயம். ஒருவேளை அவர்கள் அப்படி சொல்லியிருந்தால், இந்நேரம் கத்தியை நிமிர்த்துங்கள், தீப்பந்தத்தை தூக்குங்கள், பெட்ரோலை கைகளிலே வைத்துக் கொள்ளுங்கள், நாள் குறிப்பிடுகிறோம், பார்ப்பனச்சேரிகளை கொளுத்துங்கள் என்றல்லவா மாநாடு கூட்டி பேசியிருப்பீர்கள்?

இப்படித்தானே 1938-ல் இராஜாஜி அவர்கள் சாதிய துவேசத்தோடு நடந்து கொள்கிறார் என்று பெரியார் மாநாடு கூட்டி, ‘’கத்தியை எடுத்துக்கொள், பெட்ரோலும், தீப்பந்தமும் தயாராக வைத்துக்கொள், தேதி தருகிறேன், ஒரு கை பார்ப்போம்” என்று பேசினார்.

இப்பொழுது திராவிடத்தின் சாதி துவேசத்துக்கு ஆளாகும் பெருந்திரள் மக்கள் அதே மனநிலையில் ஒரு கணம் எண்ணினால் நிலைமை என்னவாகும்? இப்போழுது நூறு வருடம் இயக்கம் கண்ட பிறகு, ஒரு மாபெரும் சமுதாயத்திற்கு சட்டரீதியாக கொடுத்த சலுகைகளை எல்லாம் பிச்சை போட்டோம் என்கிறீர்கள்? என்ன பொருளிலோ? என்ன நோக்கதிலோ?

”YOU PEOPLE” என்று உங்களை நோக்கி சொன்னால் அப்படி சொல்ல நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? என்கிறீர்கள்.

பார்ப்பனர்கள் மட்டுமே சாதியின் ஒட்டுமொத்த அடையாளம் என்றீர்கள். திராவிடத்தில் தான் பார்ப்பனர்கள் இல்லையே! எனினும், திராவிடம் சாதியத்தின் ஊற்றாக இருப்பது எப்படி?

திராவிடம் இயக்கம் கண்டு மூன்று தலைமுறைகள் கடந்த பின்னும் சாதியம் தலை தூக்குவது எப்படி? வழிகாட்டக்கூடிய முன்னணியினரே இந்த அளவிற்கு சாதிய வன்மத்தோடு இருந்தால் உங்கள் வழியை பின்பற்றக்கூடிய தொண்டர்கள் எந்த இலட்சணத்தில் இருப்பார்கள்?

ஒருவேளை நம்முடைய அறிக்கைக்கு பிறகு அவர்கள் தார்மீக மன்னிப்பு கேட்க முன்வரலாம். ஆனால் அவர்கள் மன்னிக்கத் தகுந்தவர்கள் அல்லர்.

1950-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியல் சாசனத்திலேயே சாதி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கக் கூடியவர்களே, இந்த நாட்டின் சட்ட விதிகளுக்கு மாறாக, ஏழை, எளிய, விளிம்புநிலை மக்கள் குறித்து இகழ்ந்து பேசியதற்காக அவர்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டும். இவர்கள் தங்களுக்கு குடை பிடிப்பதற்கும், கேட்காமலேயே அறிக்கைகள் விடுவதற்கும் சில கைக்கூலிகளை வைத்திருக்கிறோம் என்ற காரணத்தினாலும், சில நாட்கள் நகர்ந்தால் மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்றும் அக்கட்சி தலைமை மறந்தும் எண்ணி விடக்கூடாது.

70 ஆண்டு காலத்திற்கு மேலாக சாதி ஒழிப்பு பேசி, முற்போக்கு பேசி, திராவிடம் பேசி தங்களுடைய சுய இலாபத்திற்காக இலட்சக்கணக்கான மக்களை ஏமாற்றியே பிழைப்பு நடத்தியிருக்கிறீர்கள் என்பது வெட்டவெளிச்சமாக வெளிவந்துவிட்டது.

சமத்துவம் பேசிய உங்களுக்கு சாதிய கொம்புகள் முளைத்தது எப்படி? திராவிட இயக்கங்கள் சாதி ஒழிப்பின் புகழிடம் அல்ல! சாதி வளர்ப்பின் புகலிடமாக விளங்குகின்றன என்பதற்கு மாறன், பாலன், ஆர்.எஸ். பாரதியின் பேச்சுக்களே ஆதாரங்களாகும்.

இது ஏதோ வாய் தவறி வந்த வார்த்தைகள் அல்ல, இது அவர்களுடைய ஆழ்மனதில் பல்லாண்டுகாலம் புதைந்து கிடந்த சாதிய உணர்வுகளின் வெளிப்பாட்டால் விளைந்த வார்த்தைகளே. நீங்கள் ஒரு காலத்தில சாதியின் அடையாளம் பார்ப்பனர்கள் என்று சொன்னீர்கள். இல்லை! இல்லை!!

திராவிடம் தான் சாதியின் நவீன அடையாளம்! திராவிடம் முற்போக்கானது அல்ல! பிற்போக்குத்தனமானது!! இங்கு சமத்துவத்திற்கு இடமில்லை, பகுத்தறிவுக்கு இடமில்லை, ஏழைகளுக்கு மதிப்பில்லை, எல்லாம் போலித்தனமானதும், சுயநலமானதும் ஆகும். திராவிடத்தால் அந்நியமானதும், அநியாயமானதும், அராஜகமானதும் தான் மிதமிஞ்சி நிற்கிறது.

சாதி வேறுபாட்டை ஒழிக்க பார்ப்பனர்களையும், இந்து பண்பாட்டையும் மட்டும் குறிவைத்து தாக்கினீர்களே? சாதியை ஒழித்தீர்களா? சமத்துவத்தை உருவாக்கினீர்களா? இந்து பண்பாட்டுக்கு மாற்றாக நீங்கள் வைத்த மாற்று தத்துவம்தான் என்ன? நீங்கள் பேசிய திராவிடம் சாதியத்தையும் வளர்த்து, வேற்று மதங்களுக்கு கதவுகளை திறந்து விட்டதுதானே மிச்சம்? உங்களால் வேறு என்ன செய்ய முடிந்தது?

தமிழக மக்கள் திராவிடர்களாக அடையாளப்படுத்தப்பட்டதற்கு பதிலாக, இந்துக்களாக அடையாளப்படுத்தப்பட்டு இருந்தால், இந்த நூறாண்டில் தமிழர்களிடையே சாதி உணர்வுகள் மங்கியிருக்கும், சமத்துவ உணர்வுகள் மலர்ந்திருக்கும், வேற்றுமை உணர்வுகள் நீர்த்து போயிருக்கும், ஒற்றுமை உணர்வுகள் ஓங்கியிருக்கும். இனிமேலாவது தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்கட்டும்!!

திராவிடத்தால் தாழ்ந்தோம் ! திராவிடத்தால் வீழ்ந்தோம் !!
தமிழகம் தழைக்க, திராவிடத்திலிருந்து மீள்வோம் !!!

  • டாக்டர் க. கிருஷ்ணசாமி MD (தலைவர், புதிய தமிழகம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe