- கட்டுரை: ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்
அந்த கம்பீரமான விலங்கினை கண்டாலே நம் அனைவருக்குமே ஒரு வித மகிழ்ச்சி ஏற்படும். விலங்கினத்தில் நீண்ட ஆயுளை கொண்ட மிருகம்.
விசித்திரமான உருவம் கொண்ட மிருகம். பிரமாண்டமான உடம்பு, முறம் போன்ற காது, நீளமான தும்பிக்கை, தூண்கள் போல கால்கள், சிறிய வால் மற்றும் சிறிய கண்கள். சிறுவர் முதல் பெரியவர் வரை ஆனந்தத்துடன் பார்க்கும் அற்புதமான விலங்கு.
யானையே அது. இயற்கையின் நியதியான ஆண் விலங்குகளுக்கே உரிய ஓர் சிறப்பம்சமான தந்தமோ, ஓர் அழகு. மிகுந்த நினைவாற்றல் கொண்ட மிருகம், பாசத்தை அருமையாக வளிப்படுத்தும் விலங்கினம்.
ஆகஸ்ட் 12, உலக யானைகள் தினம்.
அதனால் சில யானைகள் பற்றிய பழமொழிகளை நம் வாழ்முறையோடு வைத்துப் பார்க்கும் ஒரு முயற்சி. சில மனிதர்களின் தனித்தன்மையான போக்கிற்கு விளக்கமளிக்கும் போது யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என கூறுவர்.
அதிகம் பேசுபவராய் இருந்தால் வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல என்பர். மிகுந்த ஆச்சரியத்துடன் பொருட்களை பார்ப்போரை பட்டிக்காட்டான் யானையைப் பார்த்தது போல என்ற பழமொழியினால் குறிப்பிடுவர்.
தன் திறமையில் அதீத நம்பிக்கை கொண்டவர்க்கு ஏதாவது தோல்வி நேர்ந்தால் யானைக்கும் கூட அடி சறுக்கும் என்று கூறி சமாதானப் படுத்துவர். அதே சமயத்தில், தன் செருக்கினால் அடுத்தவரை இகழ்ந்து பேசுபவரை குறிக்கும் போது யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்று எச்சரிப்பர்.
ஒரு செயலின் ஆழம் தெரியாமல் காலை விடுபவர்களை, எவர் சொல்லும் நல்ல விஷயங்களை கேளாதவர்களை
யானை தன் தலையிலேயே மண்ணைப் போட்டுக் கொள்ளும் என்பர். மெலியோர் அல்லது தகுதி யற்றோரின் மேல் பெரும் சுமையை ஏற்றினால் யானை மேல இடும் பாரத்தைப் பூனை மேல இடலாமா என்பர்.
பசியில் இருப்போர்க்கு மிக குறைந்த அளவில் உண்வே கிடைத்தால், யானைப் பசிக்கு சோளப் பொறி என்பர். அந்த காலங்களில் வீடு கட்டுவது என்பது மிக அசாரதாரண விஷயமாக கருதப்பட்டதால், செலவுகள் கை மிஞ்சிப் போகும் என்பதால், யானை அசைந்து தின்னும், வீடு அசையாமல் தின்னும் என வழக்கில் கூறப்படும்.
கோவில்களிலும், உயிரியல் பூங்காக்களிலும், முன்பெல்லாம் சர்க்கஸிலும் யானையை பார்த்து ரசித்தாலும், காட்டு யானைகளை அதன் கூட்டத்தோடு, காட்டு மணலை உடம்பில் பூசிக்கொண்டு, செம்மண் நிறத்துடன் கூடிய யானைகளை பார்க்கும் போதே மெய்சிலிர்க்கும்.
யானைக்கோ தும்பிக்கை, மனிதனுக்கோ நம்பிக்கை! ஒரு நேர்மறையான பழமொழியான யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பதே யானையின் சிறப்பை விளக்குவதை அறிந்து, அதற்கு தொந்தரவு தராமலும், யானை இனத்தை காக்கவும் முயல்வோம்!