மனு ஸ்மிருதியா, மார்க்ஸ் ஸ்மிருதியா? (பகுதி – 5)
-வேதா டி. ஸ்ரீதரன்-
அடுத்த கட்டப் பணிகளுக்குப்
பிள்ளையார் சுழி போடுவோம்
உண்மையில், அலைகள் வெளியீட்டகத்தைப் பற்றிப் பேசுவது எனது நோக்கமல்ல. புத்தகம் அல்லது சிடி அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைப்பதிவுகள் முதலியவற்றின் மூலம் நம்மைச் சுற்றி எத்தனையோ விதமான பொய்கள் விதைக்கப்படுகின்றன என்பதை நாம் அறிவோம்.
இந்தப் பதிவில் நான் காட்டியது ஒரு புத்தகத்தைப் பற்றி மட்டுமே. நீங்கள் ஒவ்வொருவரும் இதுபோல வேறு எத்தனையோ விஷயங்களை நிச்சயம் கவனித்திருப்பீர்கள்.
இதே நிலை இப்படியே தொடர்ந்தால் –
இன்னும் பத்து, இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் நமது தேச பாரம்பரியத்தின் அனைத்துப் புனித, சாஸ்திர, தத்துவ நூல்களாக உலா வரும் அனைத்திலும் அயோக்கியக் குப்பைகளே மலிந்து கிடக்கும். ஏதோ ஒருசில பெரியவர்கள் சாஸ்திரங்களின் உண்மையான வடிவங்களை போதிப்பவர்களாக நிச்சயம் இருப்பார்கள். ஆனால், பொது வெளி முழுவதும் குப்பைகளே நிறைந்திருக்கும்.
இதிலும், ஏராளமான பண்டைய நூல்கள் ஒருசில வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளின் கைவசம் மட்டுமே இருக்கும் என்ற நிலையும் ஏற்பட்டிருக்கும். இவற்றின் மூலப் பிரதிகள் நம் கைவசம் இல்லாத நிலையும் உருவாகி இருக்கும். அந்தந்த கார்ப்பரேட்டுகள் இந்த நூல்களில் எத்தகைய மாற்றங்களைச் செய்தாலும் நம்மால் அதைக் கண்டறியவே முடியாது என்ற நிலையும் ஏற்பட்டிருக்கும்.
இந்த இடத்தில் நான் பார்த்த சில மேற்கத்திய மொழிபெயர்ப்புகளையும் நினைவு கூர்கிறேன். அவற்றைப் புரட்டும்போது, ”புத்தகம் என்றால் இதுதான் புத்தகம். ஆகா, எவ்வளவு மெனக்கெட்டு, வருடக்கணக்காக உழைத்து, இத்தகைய புத்தகங்களை உருவாக்குகிறார்கள்!” என்ற பிரமிப்பு ஏற்படுகிறது. அவர்களது நேர்மை போற்றுதலுக்கு உரியது.
அதேநேரத்தில், அவர்களால் நமது பாரம்பரியத்தைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. இதனால் நிறைய இடங்களில் அவர்களது விளக்கங்கள் நம்மவர்களின் கருத்துகளில் இருந்து வெகு தூரம் விலகி இருப்பதையும் காண முடிகிறது.
மேலும், ஸம்ஸ்கிருதச் சொற்களை ஆங்கிலப்படுத்துவது என்பதே சாத்தியமில்லாத விஷயம். எனவே, எத்தனையோ நல்லவர்கள் செய்திருக்கும் பணிகளே கூட நல்ல விளைவுகளைத் தர இயலாது என்பதே யதார்த்தம்.
நல்ல விஷயங்களே இருக்காது என்று நான் நினைக்கவில்லை. அதேநேரத்தில் எது நல்லது, எது கெட்டது என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் என்று சொல்கிறேன்.. இப்போதே அத்தகைய நிலைதான் பெரும்பாலும் காணப்படுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், நாம் வெகு விரைவில் நமது பாரம்பரிய கல்வி நூல்களில் பெரும்பாலானவற்றின் ஒரிஜினல் வடிவங்களை இழந்து விடுவோம். அதேநேரத்தில், அந்த நூல்களின் உருக்குலைந்த அல்லது வேண்டுமென்றே மாற்றப்பட்ட வடிவங்கள் ஒரிஜினல் வடிவங்களாக நம்மீது திணிக்கப்பட்டிருக்கும்.
நம் கண் முன்னால் இத்தகைய ஆபத்து இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் இதை உதாரணத்துடன் சுட்டிக் காட்டுவதற்காகவே இந்தப் பதிவு.
இதற்கு மாற்று என்ன?
இரண்டு ஆலோசனைகளைப் பணிவுடன் முன்வைக்கிறேன்.
முதலாவது, அமேசான் மாடல்
அமேசான் ஆயிரக்கணக்கான பொருட்களை விற்பனை செய்கிறது. இவற்றின் தரத்தை வாங்குபவர்கள் எவ்வாறு தெரிந்து கொள்வது?
ரொம்ப சிம்பிள். இதற்கு முன் வாங்கியவர்கள் தரும் ஃபீட்பேக் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அதேபோல, நம் பெரியவர்கள் ஏதாவது பொதுவெளியில் (குறிப்பாக, ஆன்லைனில் – ஏனெனில் டிஜிடல் வெளியில் தேடுவது எளிது.) ஒன்றுகூட வேண்டும். விற்பனையில் இருக்கும் சாஸ்திர, தத்துவ, ஆன்மிக, கலாசார நூல்கள், டிஜிடல் வடிவங்கள் முதலியவை பற்றிய நிறைகுறைகள் இந்தத் தளத்தில் பகிரப்பட வேண்டும்.
அதாவது, நம்மைச் சுற்றி உலா வரும் ஒவ்வொரு வெளியீட்டுக்கும் தரச் சான்றிதழ் தருவது.
இவற்றின் மூலம் வாசகர்கள் அந்தப் புத்தகம் அல்லது அதன் டிஜிடல் வடிவத்தின் உண்மை உருவத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
இரண்டாவது, விக்கிபீடியா மாடல்
விக்கிபீடியா என்பது ஊர் கூடித் தேர் இழுப்பது. லட்சக்கணக்கானோரின் உழைப்பினால் அது கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஏராளமான பேர் பங்கு பெறுவதால் அதில் எல்லா விதமான கோளாறுகளுக்கும் வாய்ப்பு அதிகம்.
இருப்பினும், அவற்றைக் களையும் முயற்சிகளும் ஏராளம்.
குறிப்பாக, அதில் ஏற்றப்படும் ஒவ்வொரு கருத்துக்கும் ரெஃபரன்ஸ் தரப்படுவது மிகவும் போற்றத்தக்க முயற்சி.
குறைகள் யார் கண்ணில் பட்டாலும் அவற்றைச் சரி செய்யும் வசதியும் உள்ளது
சனாதன தர்மத்தின் சாஸ்திரங்கள், தத்துவங்கள், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றிய முழுமையான விஷயங்களைத் தொகுப்பதற்கு எத்தனையோ விக்கிபீடியாக்கள் தேவைப்படுமே! நாம் இந்தப் பணியைச் செய்ய வேண்டாமா? இத்தகைய ஒரு பொது வெளியில் அதென்டிக் விஷயங்கள் மட்டுமே இருக்கும் என்ற சூழலை ஏற்படுத்தினால், குப்பைகள் குறித்த அச்சமே தேவையில்லையே!
இத்தகைய பணிகளை உரிமையுடனும் கடமை உணர்வுடனும் செய்வதற்கு (விக்கிபீடியாவுக்குக் கிடைத்தது போலவே) நமக்கும் உழைப்பாளிகள் கிடைக்க மாட்டார்களா!
என்னைப் போலவே பலருக்கும் இந்த விஷயத்தில் கவலை நிச்சயம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன்.
கவலைப்படுவதால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. தீர்வு என்ன? அதை யார் முன்னெடுத்துச் செல்வது? என்பதே நம் முன் உள்ள கேள்விகள்.
இந்தப் பதிவின் இறுதியில் நான் சொல்லும் சுப மங்களமே இந்த விஷயத்தில் நம் மதப் பெரியவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்து உரிய தீர்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான பிள்ளையார் சுழியாக இருக்கலாமே!
தெய்வ ஸங்கல்பம் நமக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கையுடன் நிறைவு செய்கிறேன்.
ராம் ராம்