Home கட்டுரைகள் காவிரியும் கடைமுகமும்!

காவிரியும் கடைமுகமும்!

mayavaram-kadai-mzhukku2
mayavaram kadai mzhukku2

கட்டுரை: ஜெயஸ்ரீ. எம்.சாரி

“உழவ ரோதை மதகோதை உடைநீ ரோதை தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி”
“மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்துக்
கருங்கயற்கண் விழத்தெல்கி நடந்தாய் வாழி காவேரி” – என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளால் பாடப்பெற்ற காவிரித் தாய் பாய்ந்தோடும் ‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ எனப்படும் மயிலாடுதுறையில் இன்று கடைமுழுக்கு விழா முடிவுற்றது.

இன்று மயிலாடுதுறையில் கடைமுகம் என்றவுடன் என் நினைவலைகள் பின்னோக்கிச் சென்றன. காலச்சக்கரம் விரைந்தோடுகிறது!!இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் மாயவரத்தில் இருந்து குடிப்பெயர்ந்த பின்னரும் கடைமுகம் பற்றிய நினைவலைகள் என் மனதில் பசுமையாய் உள்ளது.

காவிரி நதியானது கர்நாடகாவில் தோன்றி தமிழகத்தின் பலப்பகுதிகளில் பாய்ந்தும், கேரளாவில் சில பகுதிகளைத் தொட்டும், காவிரி பூம்பட்டினம் என்றழைக்கப்படும் பூம்புகாரில் கடலில் கலக்குகிறது. காவிரி நதியே இவ்வாறு தன் பாதையில் வரும் இடங்களில் எல்லாம் எண்ணிலடங்காத நன்மைகளை விளைவிக்கிறது.

கடைக்கோடி விவசாயிகள் முழுக்க முழுக்க காவிரித்தாயையே நம்பியிருப்பதால், காவிரியில் தண்ணீர் வரும் நிமிடத்திற்காக காத்திருப்பதும், தண்ணீரைக் கண்டவுடன் விவசாயிகளின் கண்கள் ஆனந்தக் கண்ணீரால் நிரம்பி வழிவதை சொல்லவும் வேண்டுமோ?

mayavaram kadai mzhukku

இந்து தர்மத்தில் புனிதமாய் கருதப்படும் மாதங்களில் ஒன்றான ஐப்பசியில் ( துலா மாதம்) காவிரியில் நீராடினாலே புண்ணிய மாகக் கருதப்படுகிறது. அதுவும் சிவபெருமானை மயில் வடிவத்தில் பார்வதி தேவி பூஜித்த இடமான மயிலாடுதுறையில் துலா ஸ்நானம் செய்வது மிகவும் உயர்வாகக் கருதப்படுகிறது.

ஐப்பசி மாதத்தின் கடைசி நாளன்று கடைமுழுக்கு விழாக் கொண்டாடப்படுகிறது. கடைமுழுக்கன்று மயிலாடுதுறையில் காவிரியில் புனித நீராடுவர்.

மயிலாடுதுறை நகரில் கோயில்களில் துலா மாதத்தின் முப்பது நாட்களிலும் உற்சவங்கள் நடைபெறும். “அபயாம்பிகை’ யானை கம்பீரமாக முன் செல்ல, அருள்மிகு மயூரநாதர் ஆலயத்திலிருந்து சுவாமி புறப்பாடு நடைபெறும். ‘மல்லாரி’ என்றழைக்கப்படும் இசையை நாதஸ்வர, தவில் கலைஞர்கள் வாசிப்பது இசை அன்பர்களுக்கும், பக்தர்களுக்கும் விருந்தாகும்.

கோவில்களில் எழுந்தருளியிருக்கும் தெய்வங்களின் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவர். அருள்மிகு அவயாம்பிகை உடனுறை மயூரநாதர், அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை வதாரண்யேஸ்வரர் திருக்கோயில்,(வள்ளலார் கோயில்), மயிலாடுதுறை, அருள்மிகு பரிமள ரெங்கநாயகி சமேத பரிமள ரெங்கநாதர் மற்றும் பல்வேறு தெய்வங்களின் தீர்த்தவாரி துலாக்கட்டம் என்ற இடத்தில் நடைபெறும்.

சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இன்பமுடன் துலாக் கட்டத்தில் புனித நீராடுவர். கடைமுழுக்குக் கடைகள் என்றழைக்கப்படும் கடைகளை பல ஊரிலிருந்து வரும் வியாபாரிகள் காவிரிக்கரையில் இருந்து நேராக இருக்கும் மகாதானத் தெருவில் திறந்திருப்பர். எந்த பாகுபாடின்றி, வயது வித்தியாசமின்றி மக்கள் கடைமுகக் கடைகளை நாடுவர். பொருட்களை விரும்பி வாங்குவர்.

கார்த்திகை முதலாம் நாளன்று முடவன் முழுக்கு உற்சவம் நடைபெறும். சிறந்த சிவபக்தரான நாத சர்மா மற்றும் அவரது மனைவி அனவித்யாம்பிகை இருவரும் திருவையாற்றிலிருந்து புறப்பட்டு மாயவரம் துலாஸ்நானம் செய்வதற்கு வந்து, மாலை நேரம் நெருங்கிவிட்டதால் ஸ்நானம் செய்ய இயலாமல் தவித்து அங்குள்ள மண்டபத்தில் இரவு தங்கி ஈசனை துதித்தனர். அதே மாதிரியே, ஒரு முடவன் கடைமுழுக்கு தினத்தன்று இரவே மாயூரம் துலாக்கட்டத்தை வந்தடைந்தார்.

இம்மூவரின் வேண்டுதலை ஏற்ற எம்பெருமான், அவர்களை கார்த்திகை முதல் நாளன்று புனித நீராடச் சொல்லி, அவர்களின் பாவத்தை நீக்கச் செய்த உற்சவமே முடவன் முழுக்காகும். முடவன் முழுக்கன்றும் பலர் புனித நீராடுவர்.

இவ்வாறு, காவிரி ஆறும், கடைமுழுக்கு உற்சவமும் மயிலாடுதுறை மண்ணின் நீங்காத புனிதங்கள். இன்று கொண்டாடப்பட்ட மயிலாடுதுறை கடைமுழுக்கு உற்சவத்தில் மிக குறைந்த அளவே பக்தர்கள் கலந்து கொண்டார்கள் என்றும்,
அதே சமயத்தில் காவிரியில் தண்ணீர் நிரம்பி வழியும் இருந்ததாகவும், தெளிவாகவும் இருந்ததாக சென்னையில் இருந்து இன்று மாயூரம் சென்றுள்ள முரளிதரன் திருமலை- கௌசல்யா முரளீதரன் தம்பதியர் நம்மிடம் உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version