― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைகுஜராத் தேர்தல் : ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றது எப்படி?

குஜராத் தேர்தல் : ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றது எப்படி?

- Advertisement -

22ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சி செய்து வந்த பாஜக சென்ற தேர்தலில் 115 இடங்களை வென்றது. தற்போது 2017ல் 99 இடங்களைப் பெற்றிருக்கிறது. இதை சுட்டிக்காட்டி தலித்துகள், பழங்குடிகள் பாஜகவிற்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை சில தலித் அமைப்புகள் வைத்திருக்கின்றனர். குஜராத்தில் தலித்துகள் தாக்கப்பட்டது முதல் பல்வேறு வன்முறைகள் தலித்துகள்மேல் ஏவப்பட்டது வரை இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிரொலித்திருக்கிறது. அதனால்தான் பாஜக சென்ற தேர்தலை விட குறைவான இடங்களை மட்டுமே வென்றிருக்கிறது என்று பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர்.

உண்மையிலேயே குஜராத்தில் தலித்துகள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்களா? என்று ஆராய்ந்து பார்த்தால் அப்படியொன்றும் நிகழவில்லை என்பதை சென்ற தேர்தலோடு தற்போதைய தேர்தலையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடும்.

குஜராத்தில் தனித்தொகுதி 13, பழங்குடிகள் தொகுதி 27 இருக்கிறது.

சென்ற 2012ம் தேர்தலில் தனித்தொகுதியில் பாஜக 10 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும் வென்றிருக்கிறது. அதாவது தனித்தொகுதியில் 76 சதவீத இடங்களை பாஜக வென்றிருக்கிறது.
பழங்குடிகள் தொகுதியில் பாஜக 10 இடங்களையும் காங்கிரஸ் 16 இடங்களையும் சுயேட்சை 1 இடங்களையும் வென்றிருக்கிறார்கள்.

2017ம் தேர்தலில் தனித்தொகுதியில் 8 இடங்களைப் பெற்றிருக்கிறது. அதாவது 61 சதவீத இடங்களை பாஜக வென்றிருக்கிறது. காங்கிரஸ் 4 இடங்களையும், சுயேட்சை 1 இடத்தையும் வென்றிருக்கிறார்கள். சென்ற தேர்தலைவிட 2இடங்களை பாஜக இழந்திருக்கிறது. காங்கிரஸ் சென்ற தேர்தலைவிட 1 இடத்தை மேலும் வென்றிருக்கிறது.

இந்த கணக்கீடுகளை வைத்து பார்க்கும்போது தலித்துகள் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை என்பதை உணர முடியும். அதேபோல பழங்குடி தொகுதிகளில் தற்போது 11 இடங்களை பாஜக வென்றிருக்கிறது. சென்ற தேர்தலைவிட 1 இடத்தை மேலும் பாஜக வென்றிருக்கிறது.

தலித்துகள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜகவே காரணம் என்று திட்டமிட்டு பரப்பியது, உனாவில் ஏற்பட்ட நிகழ்வு, அங்கு கூடிய தலித்துகள் கூட்டம், தலித்துகளுக்கு எதிரானது பாஜக என்ற பிம்பத்தை திட்டமிட்டு உருவாக்கியது, பாஜகவுக்கு எதிராக தலித்துகளை தூண்டிவிடுதல் – இவை எல்லாம் நிகழ்ந்தும்கூட தனித்தொகுதிகளில் 8 இடங்களை பாஜக வென்றிருப்பது என்பது தலித்துகள் பாஜகவின்மேல் நம்பிக்கை வைத்திருப்பதையே காட்டுகிறது.

குஜராத்தில் தலித்துகள் பாஜகவின்மேல் நம்பிக்கை இழந்திருப்பார்களேயானால் 8தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருக்காது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாத்கம் தொகுதியில் வெற்றிபெற்ற ஜிக்னேஷ் மேவானி என்கிற தலித் இளைஞர் பற்றி அதிகமாகவே பேசப்படுகிறது. பாஜகவிற்கு எதிராக சுயேட்சையாக நிறுத்தப்பட்ட மேவானி வெற்றி பெற்றிருப்பது பாஜகவின்மேல் தலித்துகள் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது என்கிறார்கள் தலித் அமைப்பினர்.

ஆனால் உண்மை என்ன?

உனா நிகழ்வின்மூலம் பிரபலம் அடைந்தவர் ஜிக்னேஷ் மேவானி. திட்டமிட்டு குஜராத் முழுவதும் தலித்துகளை பாஜகவுக்கு எதிராக திருப்ப பிரச்சாரம் செய்தார். ஆயிரக்கணக்கில் தலித்துகளை கூட்டி கூட்டம் நடத்தினார். அதன்மூலம் தலித்துகள் பாஜகவுக்கு எதிராக இருக்கின்றனர் என்ற பிம்பத்தை கட்டமைத்தார். இதற்கு பல்வேறு கட்சிகள், ஊடகங்கள் உதவின. அவர் வெற்றிபெற்றதை குஜராத் தலித் மக்கள் அனைவருமே பாஜகவுக்கு எதிராக இருக்கின்றனர் என்ற பொய்பிம்பத்தை தற்போது கட்டமைத்து வருகின்றனர்.

அவர் எப்படி வெற்றி பெற்றார்?

ஜிக்னேஷ் மேவானி சுயேட்சையாக வாத்கம் தொகுதியில் போட்டியிட்டார். உடனே காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை வாபஸ் பெற்றது. மேவானிக்கு எங்கள் ஆதரவு என்று காங்கிரஸ் அறிவித்தது. அதாவது காங்கிரஸ், ஆம்ஆத்மி கூட்டணியுடன் (ஆதரவுடன்) போட்டியிட்டார் சுயேட்சை என்ற பெயரில் ஜிக்னேஷ் மேவானி.

ஏற்கனவே வாத்கம் தொகுதியில் 2012ல் காங்கிரசே வெற்றிபெற்றது. அப்போது காங்கிரஸ் வேட்பாளர் மணிலால் ஜெதாபாய் வகேலா 90375 வாக்குகளைப் பெற்று வென்றார். பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் வகேலா பகீர்பாய் ராகபாய் 68536 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். அதாவது காங்கிரஸ் வேட்பாளர் 21839 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

காங்கிரஸ் வென்று 5ஆண்டுகாலம் பதவியில் இருந்த தொகுதியைத்தான் மேவானிக்கு தாரை வார்த்தது காங்கிரஸ். தற்போதைய தேர்தலில் காங்கிரஸ், ஆம்ஆத்மி, ஜிக்னேஷ் மேவானி இவர்களின் கூட்டணிக்கு கிடைத்த வாக்கு 95497. சென்ற தேர்தலைவிட5122 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறது. அதாவது 18150 வாக்குகள் வித்தியாசத்தில் மேவானி வெற்றிபெற்றார்.

சென்ற தேர்தலில் 21839 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்ற காங்கிரஸ், தற்போதைய தேர்தலில் மூவர் கூட்டணிக்கு (காங்கிரஸ், ஆம்ஆத்மி, ஜிக்னேஷ் மேவானி) கிடைத்த அதிகமான வாக்குகள் 18150. இது சென்ற தேர்தலைவிட குறைவான வாக்குகளையே பெற்றிருக்கிறது என்பதையும் குஜராத் தலித்துகள் பலரும் இவர்களை ஏற்கவில்லை என்பதையே காட்டுகிறது.

பாஜக வேட்பாளர் சக்ரவர்த்திக்கு கிடைத்த வாக்குகள் 75801. சென்ற தேர்தலைவிட 7265 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார்.

தலித் மக்கள் பாஜகவுக்கு எதிராக இருந்திருப்பார்களேயானால் இவ்வளவு வாக்குகள் அதிகமாக கிடைத்திருக்காது. அல்லது மேவானிக்கு ஆதரவாக தலித் மக்கள் இருந்திருப்பார்களேயானாலும்கூட இவ்வளவு வாக்கு பாஜக வேட்பாளருக்கு கி்டைத்திருக்காது.

ஒருவேளை காங்கிரஸ், பாஜக, ஜிக்னேஷ் மேவானி மூவருக்குமிடையே போட்டி இருந்திருக்குமானால் ஜிக்னேஷ் மேவானி வெற்றிபெற்று இருக்க முடியாது.
தங்கள் கைவசம் இருந்த தொகுதியை மேவானிக்கு விட்டுக் கொடுப்பதன்மூலம் குஜராத் தலித்துகளை பாஜகவுக்கு எதிராக திருப்ப முடியும் என்ற தப்புக் கணக்கை போட்ட காங்கிரசுக்கு குஜராத் தலித்துகள் சென்ற தேர்தலைவிட ஏழாயிரம் வாக்குகளை அதிகமாக பாஜகவுக்கு கொடுத்து பாடம் புகட்டியிருக்கின்றனர்.

இந்த உண்மையெல்லாம் தெரியாத தமிழக தலித் போராளிகள்கூட ஏதோ ஜிக்னேஷ் மேவானி தன்னுடைய பிரச்சாரத்தால், வலிமையால் வெற்றி அடைந்தார் என்பதுபோல கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பொய்கள் நீண்டகாலம் நிலைக்காது.

கட்டுரை: ம.வெங்கடேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version