― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்விஜய பதம் - வேத மொழியின் வெற்றி வழிகள்! -3

விஜய பதம் – வேத மொழியின் வெற்றி வழிகள்! -3

- Advertisement -
Thoughtleadership Taming the Ego

தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

  1. Talent Management. தகுதியை பரிசோதித்த பின்னரே…

பாரத தேசத்தில் சில குறிப்பிட்ட தகுதித் தேர்வுகள் பத்துநாட்கள் நடக்கின்றன. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே இந்த தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அந்த பத்து நாட்களில் ஒருநாள் தரையில் சதுரங்கம் போன்ற பல வண்ண கட்டங்கள் வரைந்து அதன் மீது ஒரு இருபது மீட்டர் தூரத்தை 30 வினாடிகளில் ஒவ்வொரு அடியையும் யோசித்து தேர்ந்தெடுத்த ஒரே வண்ணத்தில் வைத்துச் செல்ல வேண்டும்.

தேர்வில் ஒரு கேள்வி: நாட்டு எல்லையில் போர் புரிவதற்காக ஓடும் போது வழியில் ஒரு கிராமத்தில் கொள்ளை கும்பல் மக்களைத் தாக்கி கொள்ளையடித்து வருகிறார்கள். பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடுகிறார்கள். கூச்சல் குழப்பம் தீ வைப்பது என்று ஒரே களேபரமாக இருக்கிறது. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் ‘என் வேலை இது அல்ல’ என்று போர் புரிவதற்காக முன்னேறுவாயா? கொள்ளையர்களை அடக்குவாயா? எதற்கு முக்கியத்துவம் கொடுப்பாய்? எதனால்?

இப்படிப்பட்ட தேர்வுகளை சேவாவரண மண்டலி சர்வீஸ் செலக்சன் போடு நடத்துகிறது. அந்த தேர்வுகள் முடிந்த பின் உடல், மனம், கற்பனை, நாட்டுப் பாதுகாப்பு, தத்துவ சக்தி பற்றிய தேர்வுகள் போன்றவை பத்து நாட்கள் நடக்கும்.

இத்தகைய கடினமான தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாட்டு பாதுகாப்பு பணியில் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு பொறுப்பையும் நிர்வாகம் செய்வதற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு தேர்வுகள் இருக்கும்… இருக்க வேண்டும் கூட.

எத்தகைய பணிக்கும் நேர்முகத்தேர்வு என்று ஒன்று இருக்குமல்லவா? உத்தியோகம் எதுவானாலும் அதற்கு ஆயிரக்கணக்கானோர் போட்டியிடுவது நடக்கிறது. சரியானவர்களை தேர்ந்தெடுப்பது எவ்வாறு சாத்தியம்?

தேவையற்றவர்களை திருப்பி அனுப்பிவிட்டு தகுதியானவர்களை எவ்வாறு எடுத்துக் கொள்வது?

எழுத்துத்தேர்வு, டீம் டிஸ்கஷன் நடத்தி பரிசீலித்து வடிகட்டி சாமர்த்தியம் உள்ள சிலரை மட்டுமே எடுத்துக் கொள்வார்கள் அல்லவா?

தலைவனிடம் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் ஒரேவிதமான திறமை இருக்காது. அனைத்துப் பணிகளையும் ஒருவரே தனியாகச் செய்யவும் இயலாது. அவர்களின் தனித்திறமையை கவனமாகப் புரிந்து கொண்ட தலைவர் அவரவர் விருப்பத்தைப் பொருத்தும் சாமர்த்தியத்தைப் பொருத்தும் திறனைப் பொறுத்தும் தகுந்த பணிகளை ஒப்படைப்பார்.

எந்த நிறுவனம் ஆனாலும் உடலால் அங்கிருந்து பணிபுரிபவர் தேவை. மூளையை அதிகம் பயன்படுத்தத் தேவையில்லாத வேலையை ஒரு மேதையிடம் ஒப்படைத்தால் அவ்வளவுதான்… அவரால் அங்கு அதிக நாட்கள் பணிபுரிய இயலாது.

வால்மீகி ராமாயணத்தில் உள்ள இந்த ஸ்லோகம் இதையே குறிப்பிடுகிறது.

கச்சின்முக்யா மஹஸ்த்யேவ மத்யமேஷு ச மத்யமா:|
ஜகன்யாஸ்ச ஜகன்யேஷு ப்ருத்யா: கர்மசு யோஜிதா: ||

— வால்மீகி இராமாயணம், அயோத்தியா காண்டம் -100/25

— “மகத்தான பணிகளைச் செய்வதற்கு முக்கியமானவர்கள் பயன்படுத்துகிறாயா? மத்தியதர பணிகளுக்கு சாமானிய திறமை உள்ளவர்களை பயன்படுத்துகிறாய் அல்லவா? குறைந்த அளவு சாமர்த்தியம் உள்ளவர்களுக்கு குறைந்த நிலை வேலைகளை ஒதுக்குகிறாய் அல்லவா?”

பேராசை படாதே…! புகழ்ச்சிக்கு மயங்காதே:-

முக்கியமான பதவிகளுக்கு மனிதர்களைத் தேர்வு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பூர்வ காலத்தில் ஒரு மந்திரியை நியமிக்கும் போது பல முன்னெச்சரிக்கைகளை எடுத்துக் கொள்வார்கள். புத்தி பலம், சரீர பலம் உள்ளவர்களைக் கூட அவர்களுக்குத் தெரியாமல் ஆசைகாட்டி பரிசோதிப்பார்கள். அத்தகைய பேராசைகளில் பெண், பொன் கூட இடம் பெறும். யார் இந்த பேராசைகளைக் கண்டு மயங்காமல் தேச பக்தியில் திடமாக நிற்கிறார்களோ அவர்களைையே தேர்ந்தெடுப்பார்கள். அறிவுடைய அரசர்கள் இத்தகைய வழிமுறையைக் கடைபிடிப்பார்கள்.

ஸ்ரீராமன் பரதனுக்குக் கூறிய இந்த விஷயம் மிகவும் ஆர்வம் ஊட்டுவதாக உள்ளது.

அமாத்யானுபதாதீதான் பித்ருபைதாமஹான் சுசீன்|
ஸ்ரேஷ்டான் ஸ்ரேஷ்டேஷு கச்சித்வம் நியோஜயசி கர்மசு||

— வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம் -100/26

“குணம் நிறைந்த தாத்தா, தந்தை போன்ற பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு நல் நடத்தையுள்ள, சிறந்தவர்களை அமைச்சர்களாக்கியுள்ளாய் அல்லவா?” என்று இராமன் பரதனை கேட்கிறான்.

parasuramar

சில ரகசியமான பரீட்சைகள் நடத்தி அதில் தேர்வானவர்களை மட்டுமே தலைவன் பணியில் நியமிக்க வேண்டும். உயர் பதவிகளில் நியமிப்பதற்கு பண்டைய காலத்தில் பல பரிசோதனைகள் இருந்தன. அவை சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் விவரமாக கூறப்பட்டுள்ளன.

இதையும் படியுங்க..: விஜய பதம் – வேத மொழியின் வெற்றி வழிகள்!

முக்கியமான பதவிகளுக்கும் பணிகளுக்கும் சரியானவரைத் தேர்ந்தெடுக்கும் இன்டர்வியூவில் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும்? எந்தெந்த அம்சங்களில் திறமை உள்ளவர்களளைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற விஷயங்கள் எத்தனை முக்கியமோ, அவர்களின் நடவடிக்கை குறித்து கண்காணிப்பதும் அதே அளவு முக்கியம்.

சேனாதிபதி பதவி பண்டைய பாரத அரசமைப்பில் மிக முக்கியமானது. அது இன்றைய ஆர்மி சீஃப் போன்றது.

மகாபாரதத்தில் நாரத மகரிஷி தர்மபுத்திரரிடம் எப்படிப்பட்ட குணம் உள்ளவர்கள் சேனாதிபதியாக இருப்பதற்கு தகுதியானவர்கள் என்பது குறித்து கூறுகிறார்.

கச்சித் த்ருஷ்டஸ்ச சூரஸ்ச மதிமான் த்ருதிமான் சுச:|
குலீனஸ்சானுரக்தஸ்ச தக்ஷ: சேனாபதிஸ்ததா||

— மகாபாரதம், சபாபர்வம் -5/ 47

— “சேனாதிபதியாக வருபவர் நல்ல குடும்பத்தில் பிறந்து தைரியசாலியாக பராக்கிரமம் உள்ளவராக புத்திசாலியாக மகிழ்ச்சியாகவும் உற்சாகம் நிரம்பியவராகவும் அரசரிடம் மதிப்புள்ளவராகவும் நுண்ணறிவு உடையவராகவும் இருக்கிறாரா?”

srirama boy

இது போன்ற முக்கிய பொறுப்புகளை ஏற்கும் மனிதர் உயர்ந்த இயல்புகள் கொண்டிருந்தால் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் நன்மை விளையும். யாரை வேண்டுமானாலும் அழைத்து வந்து பதவியில் அமர்த்தினால் நஷ்டம் நேரும். அவர்களைப் பல விதத்திலும் சோதித்துப் பார்த்த பின்பே பதவியில் அமர்த்த வேண்டும்.

அவர்களுக்கு இருக்க வேண்டிய அருகதைகளை நாரத மகரிஷி மகாபாரதத்தில் இவ்விதம் விவரிக்கிறார். அனைத்து காலங்களுக்கும் ஏற்புடைய குணங்கள் இவை:

  • நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பது
  • அரசனுக்குச் சமமான சாமர்த்தியமும் புத்திக்கூர்மையும் பெற்றிருப்பது
  • பணியில் அனுபவம்
  • கள்ளமற்ற உள்ளம்
  • நற்குடிப் பிறப்பு
  • திறமையோடு பல விஷயங்களை எடுத்துரைத்து விளக்கும் திறன்

இப்படிப்பட்ட செயல்திறன் உள்ளவர்களை, சமுதாய நலம் விரும்பிகளை தன்னுடன் உதவியாளர்களாகத் தேர்வு செய்து கொள்வதே சிறந்த தலைவனின் இயல்பு.

தன்னிடம் பணிபுரிபவர்களைப் பற்றி விவரங்கள் தலைவனுக்கு தெரிந்திருக்க வேண்டும். அவர்களின் புத்திக்கூர்மையை அறிந்து நிறுவனத்தின் பணிகளை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.

ஒரு தனிமனிதர் ஒரு பணியைத் தொடங்கலாம். ஆனால் அதனை பூர்த்தி செய்ய கூடியது ஒரு குழு மட்டுமே.

சாதாரணமாக தலைவர்கள் அனைவரும் தமக்கு அணுக்கமாக இருப்பவர்கள், தம் குலத்தைச் சேர்ந்தவர், தன் பிரிவைச் சேர்ந்தவர், தன்னை அண்டி இருப்பவர் போன்றோரைக் கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்திக் கொள்வர். அதனால் சாதிக்க வேண்டிய பணியை சாதிக்க இயலாது. அப்படிப்பட்ட குறுகிய மனப்பான்மையோடு ஏற்பட்ட உறவுகள் அந்த தலைவனின் கர்வத்தை வளர்ப்பவையாகவே முடியும். அவை எப்படிப்பட்ட நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தாது. அந்த குழுவின் உறுப்பினர்கள் தலைவனைப் புகழுவதும் வணங்குவதும் தவிர வேறு எதுவும் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு நாட்டுப்பற்றோ சமுதாய நல உணர்வோ இருக்காது. உயர்ந்த நோக்கத்தோடு பணிபுரியும் திறமை அவர்களிடம் இருக்காது.

இதையும் படியுங்க…: விஜயபதம்: வேத மொழியின் வெற்றி வழிகள்! TEAM BUILDING

நல்ல தலைவன் நல்ல சிந்தனை உள்ளவனாக, திட்டமிடுபவனாக இருக்க வேண்டும். யாரை எங்கே எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்தவனே நல்ல தலைவன். அதுபோன்ற சிந்தனையாளர் மிகவும் அரிதாகவே கிடைப்பர் என்று கூறும் புகழ்பெற்ற சுலோகம் இது:

அமந்த்ரம் அக்ஷரம் நாஸ்தி நாஸ்தி மூலம் அனௌஷதம்|
அயோக்ய: புருஷோ நாஸ்தி யோஜகஸ்தத்ர துர்லப:||

— மந்திரத்திற்கு பயன்படாத எழுத்து இல்லை. மருந்தாகப் பயன்படாத மூலிகை இல்லை. படைப்பில் பயனில்லாத மனிதனே இருக்க மாட்டான்.

எந்தெந்த அட்சரங்களை இணைத்தால் எந்த மந்திரம் உருவாகும் என்று கூறும் ருஷி, எந்தச் செடி எந்த மருந்துக்குப் பயன்படும் என்று கூறும் ஆயுர்வேத மருத்துவர், எந்த மனிதன் எந்த பணியைச் செய்வதற்கு தகுந்தவர் என்று அடையாளம் காணும் தலைவன் அரிதாகவே காணப்படுவான்.

Fine Team:
குழுவில் பணியாற்றுவோருக்கு FINE என்ற நான்கு குணங்கள் இருக்க வேண்டும்.
Finance – நிதி சேகரிப்பது.
Intellectual Input – அறிவுத் துணை.
Networking – பணியாளர்களைத் திரட்டுதல்.
Event Management – செயல்திறன்.
இந்த நான்கு வித மனிதர்களைக் கொண்ட குழு வெற்றி பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version