விநாயகர் நான்மணிமாலை – பகுதி 2
-முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்-
பாரதியார் எழுதிய விநாயகர் நான்மணி மாலை நாற்பது பாடல்களைக் கொண்டது. அதில் முதல் மூன்று பாடல்களை இன்று பார்க்கலாம்.
1. காப்பு –வெண்பா
சக்திபெறும் பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்
சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா – அத்தனே!
நின்றனுக்குக் காப்புரைப்பார் நின்மீது செய்யுநூல்
இன்றிதற்குங் காப்பு நீயே.
பொருள் – எந்தப் பொருளைப் பற்ற பாட விழந்தாலும் புலவர்கள் தங்களுடைய வாக்கு சித்தி அடையவேண்டும் என்று எண்ணுவர். அதற்கு விநாயகருக்கு காப்புச் செய்யுள் இயர்றுவர். இன்று, இந்த விநாயகர் நான்மணி மாலைக்கும் விநாயகா! நீயே காப்பு.
‘நீயே’ எனப் பாடல் முடிகிறது.
2. கலித்துறை
நீயே சரணம் நின தருளே சரணஞ் சரணம்
நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்
வாயே திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத்
தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே.
பொருள் – விநாயகப் பெருமானே! உன்னைச் சரணடைகிறேன். உனதருளைச் சரணடைகிறேன். நாயினும் இழிந்தவனாகிய நான் பல தவறுகள் செய்துள்ளேன். களைத்துப் போய் நினதருளை நாடி வந்துள்ளேன். வாய் திறவாமல் மௌனியாக இருக்கின்ற பெருமானே, தீயை நிகர்த்த, ஒளி படைத்த தமிழ்க் கவிகள் நான் செய்ய உள்ளேன் அருள் புரிவாயாக.
‘நீயே’ எனத் தொடங்கி ‘செய்குவனே’ என முடிகிறது,
3. விருத்தம்
செய்யுந்தொழிலுன் தொழிலே காண்;
சீர்பெற்றிட நீ யருள் செய்வாய்,
வையந் தனையும் வெளியினையும்
வானத்தையு முன் படைத்தவனே!
ஐயா, நான் முகப் பிரமா,
யானைமுகனே, வாணிதனைக்
கையாலணைத்துக் காப்பவனே,
கமலா சனத்துக் கற்பகமே.
பொருள் – நான் செய்கின்ற தொழில் உன்னுடைய் தொழில் என்பதைக் காண்பாய். அதாவது உன் புகழைப்பாடும் ‘விநாயகர் நான்மணி மாலை’ என்னும் கவிதை நூலை நான் எழுதி வருகின்றேன். இச்செயல் சீர்மையுடன் நடக்க அருள் புரிவாய். இந்த உலகத்தையும் அண்ட வெளியினையும் வானத்தையும் முன்னர் படைத்த நான்முகப் பிரம்மன் நீயே. கவிதைத் தொழில் சிறக்க அருள் செய்யும் வாணியை கையால் அணைத்துக் காக்கும் தெய்வமே, தாமரையில் அமர்ந்திருக்கும், கேட்டதை தந்தருளும் கற்பக மரம் போன்றவனே.
‘செய்யும்’ எனத் தொடங்கி ‘கற்பகமே’ என முடிந்துள்ளது. கற்பக மரம் என்றால் என்ன? நாளைக் காணலாம்.