Home கட்டுரைகள் விநாயகர் நான்மணிமாலை விளக்கம் (பகுதி 5)

விநாயகர் நான்மணிமாலை விளக்கம் (பகுதி 5)

manakkula_vinayakar_and_bharathi-2
manakkula vinayakar and bharathi 2

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பாடல் ஐந்து – வெண்பா

     உணர்வீர், உணர்வீர் உலகத்தீ ரிங்குப்
      புணர்வீர் அமரருறும் போகம் – கணபதியைப்
      போதவடி வாகப் போற்றிப் பணிந்திடுமின்
      காதலுடன் கஞ்சமலர்க் கால்.

பொருள் – உலகத்தீரே கனபதியை ஞானவடிவாக வணங்கினால் அவரது தாமரை மலர் போன்ற பாதங்களை வணங்கினால் தேவர்கள் துக்கின்ற போகத்தினை நீங்கள் நுகர்வீர்கள் என்பதனை உணருங்கள். ஞானவடிவு என்பதனைப் புரிந்துகொள்ள முதலில் ஞானம் என்றால் என்ன என்பதை அறியவேண்டும்.

ஞானம் என்றால் என்ன?

     Knowledge என்றால் அறிவு என்று பொருள். Wisdom என்றால் ஞானம், ஓதம், விவேகம், மதிநுட்பம் என்று அகராதி பொருள் கொள்கிறது. இதனை விளக்க எளிமையான கதை ஒன்று உள்ளது. பகவான் இராமகிருஷ்ணரிடம் மூன்று மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். இந்த மூன்று மாணவர்களுக்கும் அறிவு (Knowledge), ஞானம் (Wisdom) இரண்டும் ஒன்றுதானா அல்லது வெவ்வேறா? என்ற ஐயம் தோன்றியது.

     குருவிடம் அறிவு என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? அறிவு ஞானம் ஆகிய இரண்டு கருத்தாக்கங்களுக்கு (Concepts) இடையே உள்ள வேறுபாடு என்ன? என்று குருவிடம் நேரிடையாகவே கேள்வி கேட்டனர். பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சர் பொறுமையாக அறிவு என்றால் என்ன ஞானம் என்றால் என்ன என்று எளிமையாக விளக்க முனைந்தார். இந்தப் பாடம் பற்றி பல நாட்கள் விவாதித்தார். என்றாலும் மாணவர்களால் விளங்கிக்கொள்ள இயலவில்லை.

     ஒரு நாள் தன் மாணவர்கள் மூன்று பேருக்குமே அறிவு என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? என்பதற்கான விளக்கத்தை ஒரு செயல்விளக்கமாக (Demonstration) நடத்திக்காட்ட இராமகிருஷ்ணர் முனைந்தார். மாணவர்களை ஒர் அறையில் உட்கார வைத்தார். பக்கத்து அறையில் ஒரு தங்கக் கோப்பை, ஒரு வெள்ளிக்கோப்பை மற்றும் ஒரு மண்  கோப்பை ஆகிய மூன்று கோப்பைகளில் சம அளவில் ஒரே சுவையுள்ள பாலை ஊற்றி மேசை மீது வைத்தார். பக்கத்து அறையின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டன. உள்ளே ஒரு விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது.

     தன் வகுப்பில் பாடம் கேட்டுக்கொண்டிருந்த மாணவர்கள் மூவரில் ஒரு மாணவனை அழைத்தார். “நீ பக்கத்து அறைக்குச் செல். அங்கு மூன்று கோப்பைகளில் பால் வைக்கப்படிருக்கும். அவற்றுள் ஒரு கோப்பையில்  உள்ள பாலை மட்டும் பருகிவிட்டு வா” என்று சொன்னார். முதல் மாணவன் உள்ளே சென்றான். தங்கம், வெள்ளி மற்றும் மண் ஆகிய மூன்று கோப்பைகளில் ஒரே ருசியுள்ள சூடான பால் சமஅளவில் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. இவற்றுள் தங்கக்கோப்பையில் இருந்த பாலை மட்டும் குடித்துவிட்டு மகிழ்ச்சியாக வெளியே வந்தான்.

     இப்போது குரு இரண்டாவது மாணவனிடம், முதல் மாணவனிடம் சொன்னது போல கோப்பையில் உள்ள பாலைக் குடித்துவிட்டு வரச்சொன்னார். இரண்டாம் மாணவன் அந்த அறைக்குள் சென்ற போது தங்கக்கோப்பை காலியாக இருந்தது. வெள்ளி மற்றும் மண்கலக் கோப்பைகளில் பால் இருந்தது. தங்கக்கோப்பையில் இருந்த பால் கிடைக்கவில்லையே என்று நொந்துபோனான். வெள்ளிக்கோப்பையில் உள்ள பாலாவது கிடைத்ததே என்று சற்று மனதைத் தேற்றிக்கொண்டான். வெள்ளிக்கோப்பையில் இருந்த பாலைப் பருகிவிட்டு சற்றே ஆதங்கத்துடன் மீண்டும் வகுப்பில் வந்து உட்கார்ந்து கொண்டான்.

     மூன்றாம் மாணவனின் முறை வந்தது. அவன் சென்று பார்த்தபோது தங்கம் மற்றும் வெள்ளிக் கோப்பைகளில் பால் இல்லை. கோப்பைகள் காலியாக இருந்தன. ஆனால் மண் கோப்பையில் மட்டுமே பால் இருந்தது. இதைக் கண்டு அந்த மூன்றாவது மாணவன் மிகவும் நொந்து போனான். “என் வகுப்புத் தோழர்கள் இருவரும் தங்கம் மற்றும் வெள்ளிக் கோப்பையில் இருந்த பாலை அல்லவா குடித்தனர். ஆனால் என்னுடைய துரதிஷ்டம் தானோ என்னவோ, நான் வெண்கலக் கோப்பையில் இருந்த பாலைக் குடிக்கும்படி நேர்ந்துவிட்டதே என்று நினைத்து வருந்தியவாறு மண் கோப்பையில் இருந்த பாலைப் பருகினான். இதன் பின்னால் நடந்தது என்ன? நாளை காணலாம்.

(தொடரும்)

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version