spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்தினசரி ஒரு வேத வாக்கியம்: 11. வீட்டில் பயம் எதற்கு?

தினசரி ஒரு வேத வாக்கியம்: 11. வீட்டில் பயம் எதற்கு?

- Advertisement -
vedavaakyam

11. வீட்டில் பயம் எதற்கு?

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“க்ருஹமாஸ்மத் விபீதன”
-அதர்வண வேதம் 

“வீட்டில் எந்த வித பயமும் சஞ்சரிக்காமல் இருக்கட்டும்!”

வீடு, குடும்பம் என்ற நாகரீக அமைப்பு மிகப் பழங்காலத்திலேயே பாரத தேசத்தில் ஏற்பட்டது. பல யுகங்களுக்கு முன் ராமாயண காலத்திலேயே அற்புதமான வீட்டு நிர்வாக விஞ்ஞானம் இருந்ததைக் காணமுடிகிறது. தாய், தந்தை. பிள்ளைகள், தாத்தா, பாட்டி என்று உறவுகளோடு பின்னிப்பிணைந்து வாழும் வீடு பெருமைக்குரியது என்பது வேதப் பண்பாடு.

இல்லறம் எவ்வாறு விளங்க வேண்டும் என்று ருஷிகள் க்ருஹசூக்தத்தில்  விளக்கியுள்ளார்கள். இல்லம் மங்களகரமாகத் திகழக வேண்டும் என்று விரும்பியுள்ளார்கள்.

“இந்த வீட்டில் நாம் சக்தியும் அறிவும் நிறைந்தவர்களாக மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். இந்த வீட்டை நாம் அனைவரும் நட்போடு கூடிய கண்களால் பார்க்கவேண்டும். இல்லத்தில் எப்போதும் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும்.

இந்த வீடு எங்களுக்கு சுக, சௌக்கியங்களை அளிப்பதாக, தானியம் நிறைந்ததாக, பாலும் நெய்யும் குறைவில்லாததாக விளங்க வேண்டும். எப்போதும் தூய்மையாக அழகாக இருக்க வேண்டும்.

இந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும்  உண்மை பேசி அன்பாக மங்களகரமாக உரையாட வேண்டும். சௌபாக்கியதோடு பரஸ்பரம் அன்போடு நடந்து கொள்ள வேண்டும். பசி, தாகம், பயம் போன்றவை வீட்டில் இருக்கக்கூடாது.

பசுச் செல்வம் வீட்டில் நிரம்ப வேண்டும். அமிர்தத்துக்கு நிகரான விருப்பமான உணவு கிடைக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கும் விருந்தினருக்கும் எதிர்பாராமல் வந்த அகதிகளுக்கும் திருப்தியாக விரும்பிய உணவளித்து உபசரிக்கும் பாக்கியசாலிகளாக விளங்கவேண்டும்.

நட்போடு அன்பர்கள் இந்த வீட்டுக்கு வருகை தரவேண்டும். நோயின்றி இந்த வீடு திகழ வேண்டும்” என்ற கருத்துக்கள் வேதத்தில் மட்டுமின்றி இதிகாச புராணங்களிலும் பரவலாக காணப்படுகிறது.

வீடு தூய்மையாக, பாதுகாப்பாக, நல்ல பழக்க வழக்கங்களோடு இருக்க வேண்டும் என்றும் பரஸ்பரம் அன்போடு குடும்பத்தினர் விளங்க வேண்டும் என்றும் மகாபாரதம் கோருகிறது.

பசுமையும் பூச்செடிகளும் சுற்றுப்புறத்தில் விளங்க வேண்டும். அதிதிகளும் மகான்களும் அடிவைத்த விடே சிறந்த வீடு.  வீட்டில் சமையலிலும் பாத்திரங்களும் தூய்மை துலங்க வேண்டும். தெய்வ, பித்ரு காரியங்கள் தடையின்றி நடக்கும் வீட்டில் மகாலட்சுமி வசிக்கிறாள்.

அழுகை, கலகம் போன்றவை வீட்டில் கேட்கக்கூடாது. எத்தகைய கோபமோ ஆத்திரமோ ஏற்பட்டாலும் அசுபச் சொற்களை உதிர்க்கக்கூடாது. இரண்டு வேளையும் தீபமேற்றி வழிபடும் வீடு சுபங்களின் நிலையம். சுகந்தத்தோடு இல்லம் ஒளி விடவேண்டும்.

குறுகலாக, மிக அதிக சாமான்கள் இருப்பதோ அல்லது காலியாக எதிரொலி கேட்கும்படி இருப்பதோ நல்லதல்ல. 

குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் சூரிய உதயத்திற்கு முன்பே துயிலெழுந்து விடவேண்டும். மாலை சூரிய அஸ்தமன நேரத்தில் உறங்கக்கூடாது. புறாக்கள், கிளிகள் போன்றவை வீட்டுச் சுற்றுப்புறத்தில் சஞ்சரிப்பது நல்லது.

வௌவால், பாம்பு, ஆந்தை போன்றவை வீட்டிற்குள் நுழையக்கூடாது. ஒருவேளை இவை புகுந்து விட்டால் சாஸ்திர விதிப்படி கிருஹ  சாந்தி செய்ய வேண்டும். துணிகள் குப்பலாக கிடக்கக்கூடாது. அழுக்கு துணிகள் சேரக்கூடாது. வீட்டில் ஒட்டடையும்  தூசியும் தரித்திரத்தை வரவேற்கும்.

வீடு குறித்து இத்தனை விஸ்தாரமான நற்பழக்க நியமங்களை நம் புராணம், இதிகாசம், தர்மசாஸ்திரம் போன்றவை தெரிவிக்கின்றன.

நற்பழக்க நியமங்களைக் கடைப்பிடிக்காவிட்டால் குடும்பத்தினரிடையே உறவு விரிசல் காணும். அதனால் ஒருவருக்கொருவர் மனஸ்தாபம் ஏற்படும். நோயும் வீண் செலவும் ஏற்படும். இந்த விரும்பத்தகாத சம்பவங்களே பயங்கள். இப்படிப்பட்ட பயங்கள் வீட்டில் இருக்கக் கூடாது என்று வேதமாதா பரமேஸ்வரனை பிரார்த்திக்கிறாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe