Home அடடே... அப்படியா? பகலிரவுச் சமநாள்..!

பகலிரவுச் சமநாள்..!

கட்டுரை: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

நான் ஒரு புத்தகத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதல் ஜனாதிபதி ஜியார்ஜ் வாஷிங்டன் அவர்களின் பிறந்தநாள் 11 பிப்ரவரி 1731 என்று படித்தேன். ஆனால் என்னுடைய நண்பர் ஒருவர் அவரது பிறந்தநாள் 22 பிப்ரவரி 1732 என்று சொன்னார். எனக்கு மிகவும் குழப்பமாக இருந்த்து. மீண்டும் இணையத்தில் தேடினேன். ஜூலியன் காலண்டர், கிரிகேரியன் கேலண்டர், கத்தோலிக்க மதம், ப்ரொடஸ்டண்ட் மதம், இங்கிலாந்து அரச வமிசம் என பல செய்திகளைச் சொல்லி, ஜியார்ஜ் வாஷிங்டன் அவர்களின் பிறந்தநாள் 11 பிப்ரவரி 1731 என்பதுதான் சரி. ஆனால் 22 பிப்ரவரி 1732 என்று மாறிவிட்டது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

     எனக்குத் தலைசுற்றியது. ஆனால் இந்தக் குழப்பத்திற்குக் பூமி 23½° சாய்வு அச்சில் தன்னைத்தானே சுழலுவதும் நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றுவதும்தான் காரணமாகும். இந்த இரண்டு இயக்கங்களால் இரவு, பகல், பருவகாலங்கள் ஏற்படுகின்றன.

     ரசியப் புரட்சியை அக்டோபர் புரட்சி என்கிறோம். ஆனால் கொண்டாடுவது நவம்பர் 7இல். ஏன் தெரியுமா? அயன சக்கிர சலனத்தால்தான். இதன் தொடர்ச்சியாக ஆங்கில-ஐரோப்பிய நாள்காட்டியும் பிழை கண்டது. ஈஸ்ட்டர் திருநாள் ஞாயிற்றுக்கிழமை தான் ஏற்படவேண்டும். புனித வெள்ளி வெள்ளிக்கிழமை தான் ஏற்படவேண்டும். இவை நிலை தவறியது. எனவே தான் கிரோகோரி எனும் போப்பாண்டவர் ஐரோப்பிய நாள்காட்டியை சீர் செய்தார். அதன் தொடர்ச்சியாக சுமார் பதினோரு நாட்கள் விடுபட செய்து நாள்காட்டி செய்யப்பட்டது. இவ்வாறு சீர்திருத்தப்பட்ட இன்றைய ஆங்கில நாட்காட்டி இன்றைய நடைமுறை வான இயக்கத்தோடு பொருந்தி வருகிறது.

     புரட்சிக்கு முன்பு ரஷ்யாவில், ஐரோப்பாவில் பயன்படுத்தத் துவங்கி இருந்ததும், பத்தாம்பசலி பிற்போக்கு ஜார் அரசு சீர்திருத்த நாட்காட்டியை பயன்படுத்தவில்லை. கடவுள் கொடுத்த நாள்காட்டியை மனிதன் எப்படி மாற்றுவது என்றிருந்தனர்.. ஆனால் லெனின் புரட்சிக்கு பிறகு செய்த முதல் காரியங்களில் ஒன்று சீர்திருத்த நாட்காட்டியை ஏற்றுக்கொண்டது தான்.

     அதனால் தான் ரஷ்யப்புரட்சி நடந்தபோது இருந்த பழமை நாள்காட்டியில் தேதி அக்டோபர் 26 – எனவே அக்டோபர் புரட்சி எனப் பெயர். ஆனால் புரட்சிக்குப் பிறகு அறிவியல் பூர்வ சீர்திருத்தநாள்காட்டி வந்த பின் அந்தத் தேதி நவம்பர் ஏழாக மா/ரிவிட்ட்து. அதனால் தான் அக்டோபர் புரட்சியை நவம்பர் மாதத்தில் கொண்டாடுகிறோம்.

     சூரியன் எங்கே உதிக்கும் என்ற கேள்விக்கு நாம் அனைவரும் கிழக்கு என பதில் கூறுவோம். ஆனால் சூரிய உதயத்தை கவனமாக உற்று நோக்கினால் எல்லா நாளும் சூரியன் மிகச் சரியாகக் கிழக்கில் உதிப்பதில்லை என்பது புலப்படும். ஆண்டில் இரண்டே இரண்டு நாள் தான் சூரியன் மிகச் சரியாக கிழக்கில் உதயமாகிறது. வேனில் காலத்தில் மார்ச் 21 அல்லது 22ஆம் நாள் மற்றும் குளிர் காலத்தில் செப்டம்பர் 21அல்லது 22 ஆகிய நாட்களில் தான் சூரியன் மிகச்சரியாக கிழக்கில் உதிக்கும்.

     மற்ற நாட்களில் சூரிய உதயம் வடகிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் இருக்கும். எடுத்துக்காட்டாக மார்ச் 21 அன்று மிகச்சரியாக உதயப் புள்ளி கிழக்கில் இருக்கும். ஆனால் அதற்கு அடுத்தநாள் வடகிழக்கில் உதய புள்ளி அமையும். அதற்கும் அடுத்த நாள் மேலும் உதய புள்ளி வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு வடக்கு நோக்கி நகரும் உதயப்புள்ளி உச்சபட்ச வடக்கு திசையில் ஜூன் 21 அன்று நிலைகொள்ளும். அதன் பின் சூரிய உதயப்புள்ளி தெற்கு நோக்கி விலகும். இதனை தான் தட்சிணாயணம் என்பர். அதாவது சூரியனது உதயப்புள்ளியின் தென்திசை ஓட்டம். தெற்கு நோக்கி நகரும் உதய புள்ளி மறுபடி செப்டம்பர் 21 அல்லது 22 சரியாக கிழக்கு திசையில் அமையும். மேலும் தென்திசை நகர்வு தொடர்ந்து உச்சபட்ச தென்திசை உதயம் டிசம்பர் 21 அல்லது 22 அன்று நிகழும். அதன் பின் சூரிய உதய புள்ளியின் நிலை வடக்கு நோக்கி செல்ல துவங்கும். இதுவே உத்தராயணம்.  சூரிய உதய புள்ளியின் வட திசைச் செலவு.

     சூரியன் மிகச்சரியாக கிழக்கில் உதிக்கும் அந்த இரண்டு நாட்கள் மட்டும்தான் இரவு மற்றும் பகல் இரவுப் பொழுதுகள் சமமாக இருக்கும். ஏனைய நாட்களில் பகல் பொழுது நீண்டோ அல்லது இரவுபொழுது நீண்டோ அமையும். எனவே மார்ச் 21 அல்லது 22 செப்டம்பர் 21 அல்லது 22 ஆகிய இந்த இரண்டு நாட்களை சம இரவு பகல் நாள் என்பர்.

     உத்தராயண சூரிய புள்ளி நகர்வின் போது, இந்தியா போன்ற வடகோள புவி பகுதியில், நேற்றையதை விட இன்று பகல்பொழுது காலம் கூடுதலாக அமையும். இன்றையதை விட நாளை பகல்பொழுது காலம் கூடுதலாக அமையும். இதற்கு நேர் மாறாக தக்ஷிணாயண காலத்தில் பகல் பொழுதுகாலம் நாள்பட குறைந்து வரும். துருவப்பகுதிகளில் ஆறுமாதம் பகல் ஆறுமாதம் இரவு என இருக்கும். உத்தராயண காலம்தான் வடதுருவத்தில் பகல். தட்சிணாய காலம் வடதுருவத்தில் இரவு. தென்துருவ பகுதியில் இதற்கு நேர்மாறாக இருக்கும் என்பதை சொல்ல தேவையில்லை.

     ஆக சூரிய இயக்கத்தில்– சரியாக கிழக்கில் உதிக்கும் இரண்டு நாட்கள் [மார்ச்21/22, செப்டம்பர் 21/22], உச்சபட்ச வடகிழக்கு உதயப் புள்ளி (தட்சிணாயணம்- கதிர் திருப்ப நாள் மே 21/22) உச்சபட்ச தென்கிழக்கு உதயப்புள்ளி (உத்தராயணம் – கதிர் திருப்ப நாள் டிசம்பர் 21/22) ஆகிய நான்கு நாட்கள் சிறப்பானவை.

     வருடம் முழுவதும் பகல் 12 மணி நேரம், இரவு 12 மணிநேரம் சமமாக இருப்பதில்லை. சில மாதங்களில் பகல் பொழுது நீண்டதாகவும், சில மாதங்களில் இரவு மிக நீண்டதாகவும் இருக்கும்.

     ஒவ்வொரு வருடமும் ஜூன் 22க்குப்பின் பகலின் நேரம் குறைந்து இரவின் நேரம் அதிகமாகத் தொடங்கும். இது படிப்படியாக அதிகரித்து டிசம்பர் 22 -ல் ‘வின்டர் சாலிடிஸ்’ என்று சொல்லக்கூடிய பகலின் அளவு மிகக் குறைந்த அளவாகவும், இரவின் அளவு மிக அதிகமாகவும் இருக்கும். மீண்டும் இதே போன்ற சுழற்சி திரும்பத் திரும்ப வரும்.

     வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே பூமியின் எல்லா பாகங்களிலும் சமமான இரவும், சமமான பகலும் இருக்கும். ஒவ்வொன்றும் 12 மணி நேரமாக இருக்கும். இத்தகைய நாட்களையே பகலிரவுச் சம நாட்கள் என்கிறார்கள். வசந்த காலத்தில் ஏற்படும் பகலிரவுச் சம நாள் மார்ச் 21. அன்று இது நிகழ்ந்து வசந்தகாலத்தை தொடங்கி வைக்கும். இது பூமியின் வடபகுதியில் நிகழும். தென்பூமியில் இதை இலையுதிர் காலம் என்று அழைக்கிறார்கள்.

     இலையுதிர்காலத்தில் பகலிரவுச் சம நாள் செப்டம்பர் 23 அன்று நிகழும். வட பாதி கோளத்தில் இலையுதிர் காலமாகவும், தெற்கில் வசந்தகாலமாகவும் இருக்கும். இந்த இரண்டு நாட்களிலும் பூமியினுடைய பூமத்திய ரேகை சரியாக சூரியனை நோக்கி இருக்கும். ஆகவே வட, தென் பூமியின் பாகங்கள் சமமான இரவும், பகலும் கொண்டிருக்கும். இதை வைத்தும் நிறைய கோவில்களிலும், பிரமிடுகளிலும் மத சம்பந்தமான சம்பிரதாயங்களை உருவாக்கி உள்ளார்கள்.

     உதாரணமாக எல்காட்டியோ என்ற பிரமிடில் அன்றைக்கு சூரியன் மறையும் பொழுது அதனுடைய படிகளின் மீது விழும் நிழலும் அந்த சூரிய ஒளியின் கிரகணங்களும் ஏறத்தாழ வளைந்து நெளிந்து செல்லக்கூடிய பாம்பின் தலையில் வைரத்தை வைத்தது போல, இருக்கும்படி அமைத்தார்கள். குளிர் காலத்தின்போது, சூரியன் தாழ்வாக தெற்கு கோளத்தில் இருக்கும். அப்போது பகலை விட இரவு பொதுவாக அதிகமாக இருக்கும்.

     அடுத்து வசந்தகாலம் வரும். அப்போது இரவும் பகலும் ஏறத்தாழ சமமாக இருக்கும். சூரியன் சற்றே மேல் வந்திருக்கும். அதன் பிறகு கோடைகாலம். அப்போது பகல் அதிகமாகவும் இரவு குறைவாகவும் இருக்கும். கடைசியாக இலையுதிர் காலம். அப்போதும் ஏறத்தாழ இரவும், பகலும் சம அளவு கொண்டதாகவே இருக்கும்.        

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version