Home கட்டுரைகள் விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 31)

விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 31)

manakkulavinayakar

விநாயகர் நான்மணிமாலை
– பகுதி 31

விளக்கம் : முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

     மன அழுத்தம் என்பதும் ஒரு நோய் எனக்கருதி, இது இதனால் என ஆய்ந்து, அதன் அடிப்படைக் காரணத்தையும் ஆய்ந்து, அதனைத் தீர்க்கும் வழியை ஆய்ந்து, அதை மனத்திற்கு ஏற்றவாறு அறிந்து நிர்வகிக்க வேண்டும். உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

ஏழை, பணக்காரர், கெட்டிக்காரர் முட்டாள், படித்தவர் படிக்காதவர், பணியில் இருப்பவர் பணியில் இல்லாதவர், ஆண், பெண், சிறுவர்கள் பெரியவர்கள் என்று எந்த வேற்றுமையும் கிடையாது பிரச்சினைகளுக்கு. அனைவரோடும் உறவும் தொடர்பும் கொண்டிருக்கும் பிரச்சினைகள்! அளவில் மாறலாம்; தன்மையில் மாறலாம்! .அவ்வளவே; பிரச்சினை என்பது பிரச்சினைதானே!

     எனவே பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படாமல், எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஏதோ ஒரு தீர்வு உண்டு என்ற மனநிலையை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்; அப்பொழுது மன அழுத்தம் குறைந்து, படிப்படியாக குணமாகும். . தனிமையைத் தவிர்த்து நண்பர்களுடன் நேரத்தை கழிக்கலாம்.

நமக்கு என்ன பிடிக்குமோ அதை செய்யலாம். செடி வளர்ப்பது, வீட்டை சுத்தம் செய்வது, கோலம் போடுவது, புத்தகங்கள் படிப்பது, இசையை ரசிப்பது போன்ற விஷயங்களில் ஈடுபடலாம்.எதிர்காலத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் நண்பர்களுடன் பழகுவது, நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களோடு உறவாடி உரையாடுவது மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்தாக இருக்கும்.

     பல நேரங்களில், நேரமே நமது மன அழுத்தத்திற்கு காரணமாகிறது.’நேர நிர்வாகம்’ சரியாகச் செய்து பழகியவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகப் பாதிப்பதில்லை. சோம்பேரித்தனம் என்பது நேர நிர்வாகத்தின் முதல் எதிரி. அதன் வயப்பட்டவன் வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியாது; அவரது மன அழுத்தம் என்றும் குறையாது. எனவே, வள்ளுவன் அமுத மொழிப்படி

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்
(அதிகாரம்:மடிஇன்மை குறள் எண்:605)

அதாவதுவிரைந்து செய்யும் வினையை நீட்டித்தலும், செய்ய நினைந்ததனை மறத்தலும், அதனைச் செய்தற்குச் சோம்புதலும், அதனைச் செய்யாது உறங்குதலுமாகிய இவை நான்கும் கெடுந்தன்மையுடையார் காதலித்துஏறும் மரக்கலம்என்பதாம்.

     எனவே மனக்கவலை அல்லது மன அழுத்தம் தீர, சரியான திட்டமிடுதல், அவசர மற்றும் அவசியப் பணிகளை முதலில் முடித்தல், வேலைப்பளுவில் அவ்வப்போது ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல், தனிமை மற்றும் எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து நேர்மறை சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், தியானம், உடற்பயிற்சிகள், பொழுதுபோக்குக் காட்சிகள் முதலானவை மருந்துகளாக பலராலும் அவ்வப்போது பரிந்துரைக்கப் படுகின்றன.

     தியானம், ஆலய வழிபாடு, பிரார்த்தனைகள் வாழ்க்கையில் நம்பிக்கையையும் தெம்பையும் கொடுக்கிறது. மனதை திடப் படுத்திக் கொள்ள உதவுகிறது. ஆம்! பாரதியின் கூற்றுப்படி ”இது இந்தியா உலகத்திற்கு அளித்த நன்முறை”.இறைவன் மேல் வைக்கும் பக்தி நமது பிரச்சினைகளை சவாலாக ஏற்று, தைரியத்துடன் எதிர்கொள்ளத் தேவையான மன உறுதியையும், உடல் வலிமையையும் தருகிறது..

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version