29. கடவுள் துணை வருவான்.
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“தேவான் இத் ஏஷிபதிபி: சுகேபி:” -ருக்வேதம்
“அழகான மார்கங்களின் வழியே நீ தேவதைகளிடம் கட்டாயம் சேர்வாய்!”
தெய்வ அனுகிரகம் பெற வேண்டுமானால் ஒரே வழிதான் உள்ளது. அது சிறந்த மார்க்கம். அழகான மார்க்கம். சன்மார்க்கம்.
நம் மனதை நாம் சமாதானப்படுத்திக் கொள்வதே சிறந்தது… மேலானது என்று சொல்வதற்கில்லை. சாஸ்திரங்களில் விதித்த சத்தியம், தர்மம், சதாசாரம் ஆகியவையே சன்மார்க்கம். இந்த மார்க்கங்களில் செல்பவர்கள் கடவுளின் அருளுக்கு பாத்திரமாவர். அதுமட்டுமின்றி இந்த வழியில் செல்ல இயலாமல் போகிறோமே என்று வருந்தினாலும், செல்ல வேண்டும் என்று விரும்பினாலும் கூட தேவதைகள் உதவுவர்.
தர்மத்தை விட்டு விலகக் கூடாது என்று நாம் தீர்மானித்துக் கொண்டு, அதில் உண்மையாக இருந்தால் போதும். எது தர்மம் என்பதை மனதிற்கு ஸ்புரிக்கச் செய்து அதர்மத்தின் வழிக்குச் செல்லாமல், அதர்மத்தின் தாக்கம் நம் மீது படாமல் சன்மார்க்கத்தில் துணையாக இருந்து தம் வழிக்குத் தாமே அழைத்துக் கொள்ளும் கருணை தேவதைகளுக்கு உண்டு.
அதனால்தான் தர்மம் என்றால் என்னவென்று நமக்குத் தெளிவாக தெரியாது போனாலும், தர்மத்தின் வழி நடக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் போதும் கடவுளர் நம்மை வழிநடத்துவர்.
“தேவதைகளின் பாதுகாப்பு கால்நடைகளின் காப்பாளனைப் போல நமக்குத் துணையாக இருக்கும். காக்க நினைப்பவரின் புத்தியை நல்லவிதமாகத் தூண்டுவர்” என்பது சுபாஷித வசனம்.
“யோகத்தை நலமாகக் காப்பேன்” என்று தேவாதி தேவனான ஸ்ரீகிருஷ்ணன் அபயம் அளித்துள்ளான்.
“நஹி கல்யாண க்ருத் கஸ்சித் துர்கதிம் தாத! கச்சதி” – ‘நல்லது செய்பவனுக்கு எப்போதுமே துர்கதி இருக்காது’ என்ற பகவானின் கூற்று சன்மார்க்கத்தில் செல்ல நினைப்பவர்களுக்கு கைவிளக்கு போன்றது.
“மார்கோ நேயோ நயோநய:”
– ‘நடக்கும் வழி, நடக்கும் முறை, நடப்பவன், சேர வேண்டியவன் அனைத்தும் பகவானே’ என்று விஷ்ணு சகஸ்ரம் முழங்குகிறது.
பரமாத்மாவை யாரும் வஞ்சிக்க முடியாது. ஆத்ம வஞ்சனை செய்பவர்கள் பரமாத்மாவை ஏமாற்ற இயலாது. தன் தவறைத் தான் தெரிந்து கொண்டு, ஒப்புக்கொண்டால் பாதிக்குப் பாதி தவறின் பலனான துன்பத்திலிருந்து விடுபட முடியும். தன் தவறை சரியானதாக எண்ணி பிரமையில் விழுந்து சாமர்த்தியமாக நடந்து கொள்பவருக்கு சன்மார்க்கங்கள் மூடிக்கொள்ளும்.
கள்ளம் கபடமற்ற மனதோடு, பகவான் கவனிக்கிறான் என்ற நினைவோடு தெரிந்தவரை நீதி மார்கத்தில் பயணிக்கத் தொடங்கினால், தெரிய வேண்டியவற்றைத் தெரியச் செய்து, ‘அறிவாக’ நம்மில் ஒளிர்ந்து பரமாத்மாவே துணை வருவான்