spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்தினசரி ஒரு வேத வாக்கியம்: 52. ஆத்மாவை உனக்குள்ளே தேடு!

தினசரி ஒரு வேத வாக்கியம்: 52. ஆத்மாவை உனக்குள்ளே தேடு!

- Advertisement -
daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

52. ஆத்மாவை உனக்குள்ளே தேடு!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய:” – பிரஹதாரண்யக உபநிஷத் 

“பார்க்க வேண்டியது ஆத்மாவையே!”

நம்மை நாம் தரிசித்து கொள்வது என்றால் உட்பார்வை. இது மிக முக்கியமானது என்று நம் சாஸ்திரங்கள் அனைத்தும் எடுத்துக் கூறுகின்றன. மனிதனின் லட்சியமே உள்ளிருக்கும் வஸ்துவான ஆத்ம பதார்த்தத்தை கண்டறிவதே என்பது உபநிடதங்களில் மிக உயர்ந்த பரிந்துரை.

இது மிகக் கடினமான விஷயமாகத் தோன்றலாம். எனவே அந்தர்முகப் பயணம் பற்றி விரிவாக அன்றி, மேலோட்டமாக பார்ப்போம்.

நம் சாதனை வழிமுறைகளான தியானம், பூஜை, யோகம், பக்தி இவை அனைத்தும் நம் உள் நோக்குப் பயணத்தை குறித்தவையே. இவை மனிதன் தனக்குத்தானே செய்து கொள்ளவேண்டிய ஏகாந்த சாதனைகள். ஒரு நாளில் சிறிது நேரமாவது இதற்காக ஒதுக்க வேண்டும். பாரதிய இலக்கியங்களும் சாஸ்திரங்களும் இந்த வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்தவையே.

சனாதன மதத்தின்படி நமக்குள் பல சக்திகள் குடிகொண்டுள்ளன. அவற்றை உணரந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பண்டைய தார்மீக வாழ்க்கை  வழி முறைகள், ஆசார பழக்க வழக்கங்கள் அனைத்தும் அதற்காகவே ஏற்படுத்தப்பட்டன. அந்தர்முக ஆனந்த சாம்ராஜ்யத்தை சாதிப்பதன் மூலம் கிடைக்கும் சமுதாயப் பயன்கள் கூட உள்ளன. வெளி ஆடம்பரங்கள், அவற்றுக்காக தவிப்பது, அதன் மூலம் வரும் சுயநலம் இவற்றால் ஏற்படும் வெறுப்பும் கலகமும்… இவை அனைத்தும் நசிந்து போகும்.

ஒவ்வொருவரும் தம்மைத்தாமே சோதித்துப் பார்த்துக் கொள்வது ஒருவிதமான அந்தர்முக பயணமே. நம்மை நாம் கூர்ந்து நோக்காமல் பிரபஞ்சத்தை ஆராய்ந்தால் பலனிருக்காது.

தர்மம், நீதி போன்றவற்றைக் கூட  வெளி உலகிலிருந்து பெற வேண்டும் என்று விரும்புகிறோம். ஒருவர் ஆற்றவேண்டிய தர்மங்களை இன்னொருவர் ஆற்ற விரும்புவது  என்பது  உலகில் ஒருவிதமான வெறுப்புக்கு காரணமாகிறது. 

சில தார்மீக விஷயங்களையும் ஆன்மீக அம்சங்களையும் கற்றுக்கொண்டால் போதும்… எத்தனை வேகமாக பிறருக்கு கற்பித்து பெயர் புகழ் சம்பாதிக்கலாம் என்ற ஆர்வம் கூட அதிகரித்து வருகிறது. ஆனால் அவற்றைத் தாம் எதுவரை கடைபிடிக்கிறோம்  என்று ஆத்ம பரிசீலனையோ அதற்கான முயற்சியோ செய்வதில்லை.

நம் யோகசாஸ்திரம் கூட இந்த அந்தரங்க தர்மத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளது. இது போன்ற சிறந்த சாஸ்திரம் உள்ள தேசத்தில் ஆரோக்கியமான உடல், புலனடக்கத்தோடு கூடிய வலிமையான மனம் மிக இயல்பானது. தற்போதுஇந்த அந்தர்முக சாதனையை விட்டுவிட்டதால் புதுப்புது நோய்கள் உற்பத்தியாவதும், பழைய நோய்களே புது விகாரங்களோடு தொடர்வதும்,அதற்கு மருத்துவ பரிசோதனைகள், புதிய மருந்துகள் கண்டுபிடிப்பதும்… அதுவே விஞ்ஞானம் என்று பிரமைப் படுவதும், புதிய மருத்துவமனைகள், அது தொடர்பான வியாபாரங்கள்… இவ்வாறு  பாஹ்யமாக பல முயற்சிகளில் ஈடுபடுகிறோம்.

சிறந்த யோகாப்பியாசம் மூலம் எத்தகைய உயிர்க் கொல்லி நோயானாலும் அடியோடு ஒழிக்க முடியும் என்று தெளிவாக பலர் நிரூபித்துள்ளனர். யோகாப்பியாசம் கூட நமக்கு நாம் செய்துகொள்ளும் சாதனையே அல்லவா?

உண்மையில் நம்மை நாம் திறந்து பார்த்துக் கொள்வதற்கு துளி கூட அவகாசம் இல்லாத வெளி உலகப் பார்வையை வளர்த்து கொண்டுள்ளோம். நிதானமாக ஒரு நிமிட நேரமாவது உட்கார்ந்து உள்நோக்குப் பார்வையில் ஈடுபடும் முயற்சியே செய்வதில்லை. உண்மையில் அதற்காகவே நமக்கு நித்திய அனுஷ்டானங்களை ஏற்படுத்தினார்கள். ஆனால் அவற்றை  இயந்திரகதியில் செய்துவிட்டு ஓடுகிறோம். இதற்குக் காரணம் வாழ்க்கைக்கு சற்றும் தேவையில்லாத கேளிக்கைகளை மிக மிக அத்தியாவசியமானவையாக பிரமை கொண்டு அவற்றை அடைவதே வாழ்வின் லட்சியமாக நினைத்து திக்குமுக்காடி சோர்ந்து போவதே. இதுவே இன்றைய வாழ்வின் நிலை.

“ஆமாம்! உண்மைதான்!” என்று ஒப்புக் கொள்வதற்காவது சற்று ஆலோசிக்கும் நேரம் எங்கே உள்ளது? அதற்கு துணையாக 24 மணி நேரமும் நம்மை கேளிக்கை, பொழுதுபோக்கு என்ற பெயரில் கட்டிப்போடும் தொலைக்காட்சியும் இணையமும்.  இனி, வெளிப் பார்வையை சற்றாவது உள்நோக்காக சேய்து கொள்வதற்கு அவகாசம் எங்குள்ளது? 

அந்தர்முக சக்திகள் புலனடக்கத்தால் மட்டுமே வளரும். நம்முள் உள்ள சக்திகளை வளர்த்துக் கொள்ளாமல் வெளியே எத்தனை வலிமையான சக்திகளை ஏற்படுத்திக் கொண்டாலும் பலனிருக்காது. எதையுயே தாங்க இயலாத வலுவற்ற உடலும் பலவீனமான இதயங்களுமே வெளிப் பார்வையால் வளர்ந்த நவீன நாகரிகத்தின் பயன்கள். 

ஆன்மீக சாதனையைக் கூட வெளி உலகப் பார்வையோடு தொடர்கின்ற கீழான நிலையில் உள்ளோம். ஆடம்பரமே எங்கும் முக்கியமாக உள்ளது.

பாஹ்யமான சம்பிரதாயச் செயல்கள் கூட அந்தர்முக உலகிற்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று நம் முன்னோர் கூறினர். அதற்கு சிறிதாவது முயற்சிக்கவேண்டும். கடவுள் கூட உள்ளே இருக்கும் விஷயமே! அதுவே விஸ்வமெங்கும் வியாபித்துள்ளது. 

உள்ளே உள்ளதைக் கண்டறிந்தால் விசுவமெங்கும் அதுவே தென்படும். அதுவே சமதரிசனம்.

“அந்தர்முக சமாராத்யா பஹிர்முக சுதுர்லபா” என்பது லலிதா சகஸ்ரநாமம். அந்தர்முக யாத்திரையில் வென்றவர்களால் வழிபடப்படுபவள் அம்பிகை. வெளி உலகப்பார்வை உள்ளவர்களுக்கு பரம தத்துவம் கிடைப்பது அரிது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe