#டி.எஸ். வெங்கடேசன்
மர்ம நபர்கள்… மர்மப் பொருள்! பாஜக., வக்கீல் அஸ்வத்தாமன் அலுவலகத்தில் மர்மத் தீ! என்ன நடக்கிறது ‘மர்ம’ தமிழகத்தில்!?
பாஜக சட்டப் பிரிவு செயலாளரும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் அக்கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளருமான அஸ்வத்தாமனுக்கு உயர் நீதிமன்றத்திற்கு எதிரே லிங்கி செட்டி தெருவில் ஒரு அலுவலகம் உள்ளது. கொரோனா கால நெருக்கடிகளால் தமிழ் மாநிலம் முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு, நீதிமன்றமும் மூடப்பட்டபோது, அஸ்வத்தாமன் தமது அலுவலகத்தை ஏப்ரல் 24ம் தேதி பூட்டிவிட்டு, சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்குச் சென்றார்.
கோவிட் -19 தொற்றில் இருந்து மீண்டு வந்த அஸ்வத்தாமன், மீண்டும் சென்னைக்கு வந்து இந்த வாரம் திங்கள்கிழமை தமது அலுவலகத்துக்குச் சென்றார். அலுவலகத்தின் கதவுகளைத் திறந்து பார்த்த அஸ்வத்தாமன், பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். அலுவலகத்தில், அறை முழுவதும் கரிய நிறத்தில், கறும் புகை நிரம்பி அனைத்து இடங்களிலும் நிரம்பியிருந்ததைக் கண்டு கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மூடிய அலுவலகத்திலிருந்து கரிய நிறத்தில் புகை தூசுகள் வெளிப்பட்டன. அலுவலகத்தில் ஏதோ நாசம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்த அஸ்வத்தாமன், உடனடியாக, விளக்குகளை ஒளிர விட்டு, ஆராயத் தொடங்கினார். அலுவலகத்த்ல் உள்ள அலமாரிகள் ஜிப்சம் போர்டுகளால் ஆனதால் அதில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கோப்புகள், ஆவணங்கள், புத்தகங்கள் எதுவும் நாசமடைய வில்லை என்பதை உணர்ந்து சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
உடனே தமது நண்பர்களான வழக்குரைஞர் இளையராஜா மற்றும் ஜெகநாதனை அழைத்தார். அவர்கள் தாங்கள் கண்டதை நம்மிடம் இவ்வாறு தெரிவித்தனர்…
எல்லா இடங்களிலும் கரிய நிறத்தில் புகை படிந்திருத்தது. அதுவும் லேசான அடுக்குகளாக இல்லாமல், அடர்ந்த கரிய புகை அடுக்குகளாக இருந்தன. தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொண்டோம். இந்தத் தீ விபத்தில் மர மேசைகள், கணினிகள், மின்விசிறிகள், பிரிண்டர் மற்றும் ஜெராக்ஸ் இயந்திரங்கள் நாசமடைந்திருந்தன.
சமூகம் சார்ந்த தனது கருத்துகளை பதிவு செய்து, யூடியூப் சேனல், சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்தார் அஸ்வத்தாமன். இதற்காக பதிவு செய்ய தனது அலுவலகத்திலேயே ஒரு ஸ்டுடியோ வைத்திருந்தார். யூடியூப் சேனல் மூலம் அரசியல் பிரச்னைகளை முன்னெடுத்து வைப்பார். இந்த நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்துவது போல், இந்த ஸ்டூடியோவும் தீயில் நாசம் அடைந்திருந்தது.
இது குறித்து அஸ்வத்தாமன் குறிப்பிட்ட போது.. மல்டிஸ்டோரி கட்டடத்தின் பின்புறம் திறந்து மூடும் வசதியுள்ள ஜன்னல் உண்டு. அது திறந்திருந்ததைக் கண்டோம். உள்ளே தரையில் ஒரு சிறிய மோட்டாரைக் கண்டோம். புகை எங்கள் ஆடைகளில் படிந்தது. ஆடைகள்கூட கருப்பு நிறமாகிவிட்டன. என் அலுவலகத்தில் அத்தகைய மோட்டார் ஒன்று இதற்கு முன் இல்லவே இல்லை. நான் அலுவலக கதவைத் திறந்து வந்து விளக்குகளின் சுவிட்ச் போட்ட போது, லைட் எரிந்தது. மின்சாரம் தடைபடவில்லை. எனவே மின்கசிவு ஏற்பட்டு மின்சுற்றுக் கம்பிகள் எரிந்து விபத்து ஏற்பட வாய்ப்பில்லை.
“நன்கு பார்த்த போது, ஜன்னல் பக்கத்திலிருந்து தான் எரியத் தொடங்கியிருக்கிறது . வெளியிலிருந்து ஏதும் போடப்பட்டு இப்படி எரிந்துள்ளதா என்ற சந்தேகம் வலுத்தது. எனவே உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தோம்…” என்றார்.
தடயவியல் நிபுணர்களுடன் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்து, தீப்பற்றும் வேதிப்பொருட்களின் மூலத்தை அடையாளம் காண அங்கிருந்து மாதிரிகளை சேகரித்தனர். அதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்த போது, தீயைப் பற்ற வைத்து, ஒரு மோட்டாரில் பொருத்தப் பட்ட அடையாளம் தெரியாத பொருளுடன் வீசப் பட்டிருக்கலாம். தீ அணைந்து கரும் புகை வந்திருக்கிறது. அல்லது, தீயை அணைத்த பின்னர், மோட்டரில் வைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத சில பொருட்கள் வீசப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தனர்.
இது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பு நடந்திருக்க வேண்டும். காவல்துறையினர் விசாரணையைத் தொடங்க தீயணைப்புத் துறை பரிந்துரைத்துள்ளது. அதன் அறிக்கைகளில், இது ஒரு விபத்து அல்ல என்று தெரிவித்துள்ளது.
“இது அலுவலகத்திற்கு தீ வைக்கும் முயற்சி. அறியப்படாத ரசாயனம், எங்களால் கண்டறிய முடியவில்லை. தடயவியல் அதிகாரிகள் இது குறித்து தகவல் சேகரித்து வருகின்றனர் ”என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
சம்பவம் குறித்து அறிந்த பாஜக., மாநிலத் தலைவர் எல். முருகன், அஸ்வத்தாமனின் அலுவலகத்துக்கு வந்து சேதங்களைப் பார்வையிட்டார். பாஜக., சட்டப் பிரிவுத் தலைவர் ஆர்.சி. பால் கனகராஜ் தலைமையிலான வக்கீல்கள் குழு, அஸ்வத்தமன், அவரது வக்கீல் நண்பர்கள், டி.ஜி.பி.யை சந்தித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்… என்று கேட்டுக் கொண்டனர். அவரும், விரைவான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
வழக்கறிஞர் இளையராஜா, ஜெகன்னாதன் ஆகியோர் நம்மிடம் இது குறித்து தெரிவித்த போது… “இது நான்கு மாதங்களுக்கு முன்பு அறந்தாங்கியில் நிகழ்ந்தது போன்ற ஒரு நிகழ்வாகவே சந்தேகிக்கத் தோன்றுகிறது. அங்கு உள்ள பள்ளி ஒன்றில் ஆர்எஸ்எஸ் சந்திப்புகள் நடந்தன. அதனால் ஒரு குழு இதே முறையைப் பயன்படுத்தி பள்ளிக்கு தீ வைத்தது. சென்னை சம்பவத்தில் திமுக, வி.சி.கே, முஸ்லிம் அமைப்புகளின் கை இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம், ஏனெனில் பாஜக, இந்து முன்னணி, விஎச்பி உறுப்பினர்களை ஜாமீன் எடுப்பதில் அஸ்வத்தாமன் ஆர்வத்துடன் செயல்பட்டார். தனியார் தொலைக்காட்சி விவாதங்களில், தற்போதைய ஆட்சியாளர்கள், வி.சி.கே, ஆபிரகாமியக் கூறுகள் மற்றும் இடது கட்சிகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தார்.
இந்தக் கட்டடத்தையும் அதன் வடிவமைப்பையும் நன்கு அறிந்த ஒருவர், அஸ்வதாமனின் செயல்பாடுகளை முடக்கும் விதத்தில், அவர் தனது கருத்துக்களை சுதந்திரமாகத் தெரிவிப்பதைத் தடுக்கும் வகையில், அல்லது அவருக்கு எதிரான நடவடிக்கைகளைச் செய்ய இதை செய்திருக்க வேண்டும்.
குழாய், குக்கர், டிஃபன் பாக்ஸ் இன்னும் பிற வகைகளில் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணர்களான முஸ்லிம் அடிப்படைவாதிகள் இந்தத் தாக்குதலுக்குப் பின்இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். காவல்துறை விரைவில் அவர்களை கைது செய்யும் என்று நம்புகிறோம்… என்றனர்.
இது போல் கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலை ஆளும் திமுக. ,தரப்பு இப்போது முடுக்கி விட்டுள்ளது! ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவு கைது நடவடிக்கையாக, காஞ்சிபுரம் மாவட்ட திமுக., ஐ.டி பிரிவு ஒருங்கிணைப்பாளர் புகாரின் பேரில் சமூக ஊடக செயற்பாட்டாளரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவருமான கிஷோர் கே சுவாமியை சங்கர் நகர் போலீசார் கைது செய்தனர். ஜூன் 10 ஆம் தேதியிட்ட அந்தப் புகாரில், கிஷோர் கே சுவாமி முன்னாள் தமிழக முதல்வருக்கு எதிராக மோசமான மற்றும் அவதூறான கருத்துக்களை பரப்புகிறார்…தலைவர் சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி ஆகிய தலைவர்களுக்கு எதிரான தவறான மற்றும் அவதூறான கருத்துக்களைக் கொண்ட வீடியோக்களை பரப்பினார், மேலும் அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்” என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சமீபத்திய பதிவில், கிஷோர் கே சுவாமி, பெண்கள் கோவில்களில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற திமுக., அரசின் அறிவிப்புக்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக., முன்னாள் முதல்வர்கள் ஆகியோருக்கு எதிராக அவதூறான கருத்துக்களை பரப்பியதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார்.
கிஷோர் கே சுவாமியின் கைதுக்கு, பாஜக., மற்றும் நெட்டிசன்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். ஆத்திரமடைந்த நெட்டிசன்கள், தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற திமுக அமைச்சர்கள் நிர்வாகிகள், மாநிலத்தில் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்க முயன்றுள்ளதாகக் குற்றம் சாட்டினர்.
பாஜக.,வின் கலைப் பிரிவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் இது குறித்து ட்வீட் செய்தார்,
“முழு திமுக.,வும் குறிப்பிட்ட சாதி பிராமணர்களைப் பற்றி மோசமாகப் பேசுகிறது, இப்போது அவர்கள் தேவேந்திர குல வேளாளர்களுக்கு எதிரானவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களை நாய்கள் என்று அழைக்கும் போது, இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் / கைதுகளும் இல்லை. மோசமான வார்த்தைகளால் பெண்களை அவமதிக்கிறார்கள். ஏன் ஒரு சாதாரண மனிதர் மீது மட்டுமே வழக்கு? சட்டம் சாதாரண மனிதருக்கு மட்டுமானதா!? ”.
பாஜக.,வின் செயற்பாட்டாளர் மகேஷ் ட்வீட் செய்ததாவது: “கிஷோர் கே சுவாமியை பாசிச திமுக ஆட்சி கைது செய்ததை நான் கண்டிக்கிறேன். இந்த அளவுகோல் பயன்படுத்தப்பட்டால், பெரும்பாலான திமுக., தோழர்கள் தங்களது தவறான இடுகைகளுக்காக கம்பிகளுக்குப் பின்னால் இருக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டார்.
“போலீஸ் நடவடிக்கை ஒருதலைப்பட்சமானது. திராவிடர் கழக தலைவர் வீரமணியை இந்து விரோத கருத்துக்காக, கடவுளைப் பற்றி இழிவான கருத்துகளைத் தெரிவித்ததற்காக நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், தெய்வங்கள் மீது மோசமான மற்றும் உக்கிரமான தாக்குதல்களை நடத்தியதற்காக வி.சி.கே தலைவர் திருமாவளவன், புனித தமிழ்த் தெய்வம் ஆண்டாளை இழிவுபடுத்திய சினிமா பாடலாசிரியர் வைரமுத்து, ரஃபேல் விமான விவகாரத்தில் பிரதமர் மோதியை ‘திருடன்’ என்று அழைத்த மு.க. ஸ்டாலின், பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் கொலை செய்வதாக அச்சுறுத்தும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்… தவறான பொய்ச் செய்திகளை மற்றும் உருவாக்கப்பட்ட தகவல்களை பரப்பும் அரசாங்க சார்பு தமிழ் சேனல்கள் மீதான எத்தனையோ புகார்கள் பாஜக, இந்து முன்னணி, விஎச்பி., என இந்து இயக்கத்தினர் அளித்த புகார்கள் கிடப்பில் போடப் பட்டுள்ளன. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
கல்யாணராமன் போன்ற இந்து தலைவர்கள் மட்டுமே அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறார்கள். திமுக., மட்டுமல்ல, அவர்களின் பின் வந்த அதிமுக.,வும் இதைச் செய்தது. கோயம்புத்தூரில், பிரதமரை மோசமாக சித்திரித்த எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எஃப்.ஐ இயக்கத்தினர் எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி இயல்பாக வளைய வருகின்றனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கல்யாணராமன் கைது செய்யப்பட்டார்! மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பிரயோகிக்கப் பட்டது.
ஈவேரா., பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசியதற்காக ஓர் இளைஞர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்து மதம் மற்றும் கடவுளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தும் கிறிஸ்தவ போதகர்கள் தொடப்படுவதில்லை. இந்த பாகுபாடு ஏன்? கிஷோர் கே சுவாமி அண்ணாதுரை குறித்து திராவிடக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய பக்கங்களை மட்டுமே மீண்டும் பகிர்ந்தார்!” என்றார் ஜெய்கிருஷ்ணா.
‘கருத்துச் சுதந்திரத்தின் சாம்பியன்’ என்று தங்களை கூறிக்கொண்டிருக்கிறது திமுக,! ஆனால், அது தன் கூட்டாளிகள், மற்றவர்கள் மீது கூறும் அவதூறுகளை சகித்துக்கொள்வது ஒரு முரண். அவர்கள் அதை தங்களுக்குக் கிடைத்த தனியான பெரும் பேறாகவே கருதுகிறார்கள். இது எதிர்க்கட்சியினரின் குரல்வளைகளை நெரிப்பதைத் தவிர வேறில்லை.
தேர்தலுக்கு முன்பே, உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிற திமுக தலைவர்கள் பகிரங்கமாகவே அறிவித்தனர். தாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் கிஷோர் கே சுவாமி, மாரிதாஸ் மற்றும் பிறருக்கு பொருத்தமான பாடம் வழங்கப்படும் என்று பேசினர். அவர்கள் முன்பு சொன்னதை இப்போது செய்கிறார்கள். விரைவில் தமிழகம் மேற்கு வங்கமாக மாறும்! கேரளா வழியில் எதிர்க்கட்சிகளுக்கு அரசின் செயல்பாடுகளுக்கு எதிரான விமர்சனத்தை வெளிப்படுத்தவும் எழுதவும் பேசவும் சுதந்திரம் இல்லை என்பது வெளிப்படையாக இப்போது திமுக.,வினரால் நிறுவப் பட்டுள்ளது.