கட்டுரை: கே.ஜி.ராமலிங்கம்
சாந்துப்பொட்டு தளதளக்க
சந்தனப் பொட்டு கமகமக்க
மதுரை கோபுரம் தெரிந்திடச் செய்த
மருது பாண்டியர் பாருங்கடி….
மதுரை கோபுரம் தெரிந்திடச் செய்த
மருது பாண்டியர் பாருங்கடி….
- கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வைர வரிகள்….
…… ஆம் இன்றைய தினம் 220 வருடங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் அரசாங்கம் மருது சகோதரர்களை தூக்கிலிட்டு கொன்றதை ம(றை)ந்(த்)து விட்டோமோ என்று நினைக்கின்ற நிலையில் தான் இருக்கிறோம்.
இன்றைய விருதுநகர் மாவட்டம், நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த மொக்க பழநியப்பன் என்பவருக்கும், அவரது மனைவி பொன்னாத்தா என்பவருக்கும் மகனாக 1748 திசம்பர் 15 இல் மகனாகப் பிறந்தவர் பெரிய மருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753 ஏப்ரல் 20 இல் சின்ன மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவை விட உயரத்திற் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்று அனைவராலும் அழைக்கப்படலானார்.
இவ்விருவரும் சிவகங்கைச் சீமையின் அரசர் முத்து வடுகநாதரின் போர்ப் படையில் வீரர்களாகச் சேர்ந்து தமது திறமையை நிரூபித்தனர். இவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய மன்னர் முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புக்களில் நியமித்தார்.
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடி கள் என்றே சொல்லலாம். 1857 சிப்பாய்க் கலகத்திற்கு அரை நூற்றாண்டிற்கு முன் நடந்த இந்திய தென்னிந்திய புரட்சியே முதல் விடுதலைப் போராட்டமாக வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.
ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.
இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். மருது சகோதரர்களின் ஆட்சி மத நல்லிணக்கம், தேச ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு எடுத்து காட்டாக விளங்குகிறது.
இவர்கள் காளையார்கோவில் கோபுரத்தைக் கட்டியதுடன் குன்றக்குடி, திருமோகூர் போன்ற கோயில்களுக்கும் திருப்பணி செய்தனர். மானாமதுரை சோமேசர் கோயிலுக்கு கோபுரம் கட்டித் தேரும் செய்து அளித்துள்ளனர்.
இளையவரான “சின்ன மருது” அரசியல் தந்திரம் மிக்கவராக விளங்கினார். இவர் தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி வரை மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயருக்கு எதிரானப் போராட்டத்திற்கு வித்திட்டனர்.
மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி ஊமத்துரை, சிவத்தையா தம்பி, மீனங்குடி முத்துக்கருப்பத்தேவர், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை, விருப்பாச்சி கோபாலர், தேளி யாதுலர், பழசி கேரள வர்மா, மறைந்த திப்புவின் தளபதி தூந்தாகி வாக் ஆகியோருடன் ஆங்கிலேயருக்கு எதிராக தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்கினர்.
1801 சூன் 12 ஆம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ஜம்புத் தீவு பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கையின் மூலம் எல்லா இனங்களையும் சேர்ந்த மக்களை நாட்டுப்பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததாகக் காரணம் கூறி 1801 மே 28 இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடைவிடாமல் நடந்தது.
காளையார்கோவில் காடுகளில் கொரில்லா முறையில் போர் நடந்தது. புதுக்கோட்டை தொண்டைமான், ஆங்கிலேயருக்கு படை அனுப்பி உதவி செய்தார். மருது சகோதரர்கள் மற்றும் பிற விடுதலை வீரர்களைப் பிடித்துக் கொடுப்போர்க்கு வெகுமதி அறிவிக்கப்பட்டது. காளையார்கோவில் காட்டினை அழிப்பவர்க்கு, அழிக்கப்படும் நிலம் 20 வருடத்திற்கு இலவச குத்தகை வழங்கப்படும் என ஆங்கிலேயர் அறிவித்தனர். ஒக்கூர் காட்டில் பதுங்கி இருந்தபோது, தன் உதவியாளன் கருத்தான் மூலம் சின்ன மருது சுடப்பட்டு ஆங்கிலேயரிடமிருந்து வெகுமதிகளை பெற்றான்.
காளையார்கோவிலில் களோனல் அக்னியூ மருது சகோதரர்களை கைது செய்தார். கௌரி வல்லப பெரிய உடையத்தேவரை சிவகங்கையின் இஸ்திமிராக நியமித்தோடு சுதந்திர ஆட்சி அங்கு முடிவுக்கு வந்தது. சிவகங்கை அரசர் வெங்கம் உடையனத் தேவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். பாகனேரி அரசர் வாளுக்கு வேலி அம்பலம் மருது சகோதரர்களை மீட்க செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.
மருது சகோதரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் 24-10-1801 அன்று தூக்கில் போடப்பட்டு வீர மரணம் அடைந்தனர். மருதுக்களுடன் அவர்கள் ஆண் வாரிசுகள் அனைவரும் (“துரைச்சாமி” சின்ன மருதுவின் மகன் ஒருவரைத் தவிர) தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் தவிர 500க்கும் மேற்பட்ட விடுதலை வீரர்கள் முறையான விசாரணையின்றி தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்களின் விருப்பப்படி அவர்களது தலையை காளீசுவரர் கோவில் முன்பு புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
சரித்திரம் உள்ளதை சொல்கிறது. நாம் தான் கால தேச வர்த்தமானங்களில் சுழன்று சுழன்று உண்மையான மானை தவற விட்டு பொய் மானைத் தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம்….
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியல,, அட அண்டங் காக்கைக்கும் குயிலுக்கும் பேதம் புரியல… என்ற கவியரசரின் வரிகள் தான் ஞாபகம் வருது.