― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்விஜய பதம்: வேத மொழியின் வெற்றி வழிகள்(4) - நாட்டின் கண்களும் காதுகளும்!

விஜய பதம்: வேத மொழியின் வெற்றி வழிகள்(4) – நாட்டின் கண்களும் காதுகளும்!

- Advertisement -

விஜயபதம் – வேதமொழியின் வெற்றி வழிகள் – 4 

(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)

4. STRATEGY: நாட்டின் கண்களும் காதுகளும்!

தெலுங்கில்: பி.எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன் 

பாகிஸ்தானிலுள்ள லாகூரில் 1980ல் பெரிய உற்சவம் நடந்தது. மக்கள் கூட்டமாக ஒன்று கூடினார்கள். ஒரு இளைஞன் மக்களை பிளந்து கொண்டு நடந்தான். ஒரு பெரியவர் அங்கு நின்று உற்சவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.  கவர்ச்சிகரமான வடிவத்தோடு இருந்தான் அந்த இளைஞன். வெள்ளை தாடியோடு விளங்கிய அந்த பெரியவர் தொலைவில் இருந்த அந்த இளைஞனை அருகில் வரும்படி சைகை செய்தார். இளைஞன் அவரை அணுகினான்.

“நீ இந்துவா?” என்று கேட்டார் பெரியவர்.

“இல்லைங்க!” என்றான் இளைஞன் சலனமின்றி.

அந்தப் பெரியவர் புன்னகைத்தார். அந்த இளைஞனும் புன்னகைத்தான். பெரியவர் வெள்ளை தாடியை நீவிக்கொண்டே இளைஞனின் தோள் மீது கைபோட்டு, “என்னோடு வா!” என்றார்.

இரண்டு மூன்று தெருக்களைத் தாண்டி ஒரு வீட்டின் பூட்டை திறந்தார். இளைஞனை உள்ளே வர சொல்லி கதவை மூடினார்.

“எனக்கு தெரியும் நீ ஹிந்து என்று. நானும் ஹிந்துவே. என் குடும்பம் முழுவதும் அழிந்து விட்டது. நான் மட்டும் மீந்துள்ளேன். இதோ நான் வழிபடும் கடவுள்!” என்று கூறி  பிறையில் இருந்த சிவலிங்கத்தை பெரியவர் காண்பித்தார்.

மேலும், “உன்னைப் போன்ற இளைஞர்களைப் பார்த்தால் மகிழ்ச்சி ஏற்படுகிறது. உன் காதில் இருக்கும் துளைகளைக் கொண்டு உன்னை ஹிந்துவாக அடையாளம் கண்டேன். சிறுவயதில் காது குத்தும் பழக்கம் முஸ்லிம்களுக்கு கிடையாது. உடனே அவற்றை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மூடி விடு!” என்று அறிவுரை கூறினார் பெரியவர்.

அந்தப் பெரியவரின் கூர்மையான பார்வையை கண்டு இளைஞன் வியப்படைந்தான். அந்த இளைஞனே அஜித் தோவல். இவர் தன் உயிரைப் பணயம் வைத்து பகை நாடான பாகிஸ்தானில் பல மாறுவேடங்களில் ஏழு ஆண்டுகள் இந்திய ஒற்றராக பணிபுரிந்தார். இந்தியன் ஜேம்ஸ்பாண்ட் என்று அன்புடன் அழைக்கப்படும் இந்த வீரரை இந்திய அரசாங்கம் கீர்த்தி சக்கரம் விருது அளித்து கௌரவித்தது. 

அஜித் தோவல் மத்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகராக பணிபுரிந்து பல வெற்றிகளை ஈட்டித் தந்து வருகிறார். பிரதமர் மோடி மற்றும் அஜித் தோவல் இணை எதிரி நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி முதுகெலும்பில் நடுக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்திய அரசின் உளவு அமைப்பு தற்போது உள்ள அளவு சாமர்த்தியமாக பணி புரிந்திருந்தால் 1962 ல் இந்தியாவின் மீது சைனா நடத்திய தாக்குதலை முன்பாகவே கண்டுபிடித்து இருக்கும். சைனாவின் சதியான ஆக்கிரமிப்புகளை தடுக்க முடிந்திருக்கும்.

அரசாங்கத்தின்   காதுகளும் கண்களுமாக இருப்பது உளவுத்துறை. உளவாளிகள் மூலம் அரசாள்பவர் பல செய்திகளைச் சேகரிக்கிறார். முற்காலத்தில் அரசர்கள் மாறுவேடத்தில் மக்களிடம் சென்று தாமாகவே உண்மையைக் கண்டறிந்து தீர்ப்பு வழங்குவதுண்டு. 

பஞ்ச தந்திரத்தில் உள்ள இந்த ஸ்லோகம் ஒற்றர்களின் முக்கியத்தை விளக்குகிறது…

கந்தேன காவ: பஸ்யந்தி வேதை: பஸ்யந்தி ப்ராஹ்மணா: ! சாரை: பஸ்யந்தி ராஜன: சக்ஷுரப்யாமிதரே ஜனா: !!
– பஞ்சதந்திரம் 3/ 68 

“விலங்குகள் மணத்தை நுகர்ந்து அறிந்து கொள்ளும். பிராமணர்கள் வேதங்கள் மூலம் அறிந்து கொள்வார்கள். அரசர்களுக்கு நாடெங்கிலும் பரவியுள்ள ஒற்றர்களே கண்கள். மீதியுள்ள சாதாரண மனிதர்கள் தங்கள் கண்களுக்குத் தென்படுபவற்றை மட்டுமே அறிவார்கள்.”

உட்பகைவர் உள்ளனர்… உஷார்!

எதிரி நாடு என்ன செய்யப்போகிறது? அந்தரங்கத்தில் பகை நாட்டு அரசன் என்ன திட்டமிடுகிறான்? என்பவற்றை தெரிந்து கொள்வதற்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒற்றர்படை இருப்பது அவசியம்…. இருப்பது இயல்புகூட. கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்துவது என்பதே புத்திசாலி அரசாங்கங்களின் செயல்முறை. எதிரி நாட்டில் இருக்கும் ரகசியங்களை வரவழைப்பதற்கு நியமிக்கப்பட்டவர்கள் தாய் நாட்டிற்கு தேவையான செய்திகளை அளித்தபடி ரகசியமாக வாழ்ந்து வருவார்கள். 

சில நாடுகள் தாம் நியமித்த பிரதிநிதிகள் மூலம் தமக்கு அனுகூலமான பணிகளைச் செய்து கொள்வார்கள். அந்தப் பிரதிநிதிகளுக்கு தாம் ‘பிரதிநிதிகள்’ என்று அறியாவண்ணம் இந்தப் பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள் என்பதுதான் ஆச்சரியம். தமக்குப் பயன்படுவார்கள் என்று தோன்றுபவர்களுக்கு ‘சர்’  விருதுகள், ‘ராவ்பகதூர்’ விருதுகள் அளித்து பிரிட்டிஷார் பாரதிய மேதாவிகளையும் செல்வந்தர்களையும் தமக்குட்படுத்திக் கொண்டார்கள். அவர்களில் சிலர் பிரிட்டிஷ் அரசுக்கு தாசர்களாக பணிபுரிந்தார்கள் .

நிகழ்காலத்தில் கூட சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த சிலரை ஏதோ ஒரு காரணம் காட்டி தம் நாட்டிற்கு அழைப்பதும் கௌரவ டாக்டர் பட்டம் அளிப்பதையும் இந்தியாவிற்கு விரோதமாக தரகர்களாக நடத்துவதையும் பார்க்கிறோம்.

‘அர்பன் நக்சல்கள்’ (அறிவுசார் குண்டர்கள்) செய்யும் தீங்குகள் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் அவை முழுமையாக வெளியில் வருவதில்லை. ராஜ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் எழுதிய  ‘பிரேக்கிங் இண்டியா’ என்ற நூலில் இது போன்ற விவரங்கள் பல உள்ளன. அரசாங்கங்களும்  வணிக நிறுவன உரிமையாளர்களும் இதுபோன்ற அறிவுசார் நக்சல்களிடமும்  நயவஞ்சகர்களிடமும் மிக கவனமாக இருக்கவேண்டும்.

தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவன் நாட்டு நலனைத் தாரை வார்ப்பவர்கள் மீதும் மேதாவிப் போர்வையில் பதுங்கியிருக்கும் துரோகிகளிள் மீதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.

உள்நாட்டுப் பாதுகாப்பு:- 

எந்த நாடாயினும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் எல்லைகளைக் காக்கும் படை எத்தனை முக்கியமோ நாட்டின் உள்ளேயும் வெளியேயும் பரவியிருக்கும் ஒற்றர் படையும் அதே அளவு முக்கியம்.

அரசாங்க ஊழியர்களில் தேச துரோகிகள் இருந்தால் எத்தனை ஆபத்து? அப்படிப்பட்டவர்களை பொறுக்கியெறிய வேண்டுமென்றால் உளவு அமைப்பு அவசியம்.

‘உபதா’ என்ற பெயரில் சாணக்கியர் உளவு அமைப்பு பற்றி ஒரு பெரிய அத்தியாயமே எழுதியுள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்புக்கு உபாயமே ‘உபதா’.

உபதா என்றால் பேராசை ஏற்படுத்தி கண்காணிக்கும் இரகசிய பரீட்சை என்று பொருள். அரசு நியமித்த மற்றும் நியமிக்க இருக்கும் முக்கிய மனிதர்களின் மீது ஒரு கண்காணிப்பு இருக்க வேண்டும் என்று சாணக்கியர்  குறிப்பிடுகிறார். அவர்களை அப்போதைக்கப்போது பல்வேறு தேர்வுகளுக்கு உள்ளாக்கி, பதவியில் அமர்த்த வேண்டுமா வேண்டாமா என்று தீர்மானிப்பதற்கு இப்படிப்பட்ட ரகசிய அமைப்பு உதவுகிறது. அரசனும் ராஜ புரோகிதரும்  நிர்வாகம் செய்யும் அமைப்பு உபதா.

சாணக்கியர் உபதாவை நான்கு பிரிவுகளாகப் பிரித்தார். அவை…

1. தர்ம விரோதமாக நடந்து அரசனுக்குப் பகையானவர்கள் யார் எனக் கண்டறிதல். 

2. செல்வம், ஆசை காண்பித்து… அவற்றில் மயங்காதவரைத் தேர்ந்தெடுப்பது.

3. காம இச்சைக்கு உட்பட்டு  தவறு இழக்கிறாரா என்று கண்டறிவது. தற்போது இது Honey Trap என்றழைக்கப்படுகிறது.

4. அரசுக்கு எதிரான துரோகத்தை உயர்வாக எடுத்துக்கூறி ஆசை காட்டுவது. தேச பக்தியும் நிஷ்டையும் உள்ளவர் இதற்கு அடிமையாக மாட்டார்.

மேற்சொன்ன நான்கு வித உபதாக்களை அமுல்படுத்துவதற்கு தேவையான ஒற்றர்களை சாணக்கியர் ஒன்பது வகைகளாகப் பிரிக்கிறார்.

அனைவருடையதும் ஒரே நோக்கம். அரசனுக்குச் செவிகளாகவும் கண்களாகவும் இருப்பது, நாட்டின் நிலைமையை உள்ளது உள்ளபடி அரசனிடம் விவரிப்பது.

நல்ல அரசாட்சியைக் கவிழ்க்க நினைக்கும் அநீதியாளர்களை அடக்குவதும், நாட்டு விரோதச் செயல்களை (தற்போதைய நக்சலைட்டுகள், ஐஎஸ்ஐ ஏஜென்டுகள்) நடத்தும் மனிதர்களையும் குழுக்களையும் கண்காணித்துப் பிடிப்பதும் இந்த அமைப்பின் நோக்கம்.

நம்பிக்கை துரோகம்:-

தூதரகம் என்பது நாடுகளிடையே நட்பை வளர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. ஆனால் பாகிஸ்தான் தூதரகம் இதன் பொருளை முழுமையாக மாற்றி விட்டது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை பாக். ஒற்றர்படையின் (ஐஎஸ்ஐ) இருப்பிடமாக மாற்றிவிட்டது. இந்திய கண்காணிப்புப் பிரிவுகளிடம் ஜூன் 1, 2020 அன்று ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் பிடிபட்டனர். பாகிஸ்தான் ஹை கமிஷனர் அலுவலகத்தில் விசாக்கள் அளிக்கும் அதிகாரிகளாக பணிபுரியும் தஹீர்கான், அபித் ஹுஸேன் என்ற இருவரும், மேலுக்கு தூதரக அதிகாரிகளாக நடித்து, இந்திய ராணுவத்தின் ரகசியங்களை சேகரிப்பதே நோக்கமாக செயல்பாடுகளை நடத்தி வருகிறார்கள் என்று இந்திய கண்காணிப்பு பிரிவு கண்டறிந்தது. டெல்லியில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் இவர்கள் இருவரும் பாக். ஒற்றர் அமைப்பைச் சார்ந்த மற்றொருவருக்கு சில ரகசிய ஆவணங்களை அளிக்கையில் நம் அதிகாரிகள் வலைவீசி பிடித்தார்கள். இவர்களிடமிருந்து சில ரகசிய பத்திரங்களையும் ஆதாரங்களையும் கைப்பற்றினார்கள். இந்த விவகாரத்தில் இந்தியா விசாரணை நடத்தி அபீத் ஹுசேன், தாஹீர்கான் இருவருக்கும் பத்தாண்டு காலம் நாடுகடத்தல் தண்டனை விதித்தது.

நவீன யுகத்தில் உளவுத்துறை  நம் நாட்டிற்கு எதிராக நடக்கும் குற்றங்களை அடையாளம் காண்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றது. விடுதலை அடைந்து எழுபது ஆண்டுகள் கடந்தும் அதன் தீய பலனை நாம் அனுபவித்து வருகிறோம். உலகெங்கும் கூட உளவுத்துறையின் தோல்வியால் பல அபாயகரமான விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த இருபதாண்டு காலத்தில் நடந்த பல குண்டு வெடிப்புகள், பார்லிமென்டில் நடந்த தாக்குதல், யூரி இராணுவத்தளம் மீது தாக்குதல் போன்றவை இதற்கு உதாரணங்கள். டிசம்பர் 1941 ல் அமெரிக்காவைச் சேர்ந்த பேர்ல் ஹார்பர் மீது நடந்த தாக்குதல், பங்களாதேஷ் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை, நம் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி கொலைகள், அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த விமான குண்டு வெடிப்பு… போன்றவை உளவுத்துறையின் முழுத் தோல்விக்கு மிகப்பெரும் சான்றுகள்.

‘ரா’ ம ராஜஜ்ஜியத்திற்கு ரட்சணை:

மகாபாரதத்தில் புகழ்பெற்ற யக்ஷ பிரச்சினைகளில் யட்சன் கேட்ட ஒரு கேள்விக்கு தர்மபுத்திரன் இவ்வாறு பதிலளித்தான்:

தர்ம ஏவ ஹிதோ ஹந்தி தர்மோ ரக்ஷதி ரக்ஷித: !
தஸ்மாத்தர்மம் ந த்யாஜாமி மானோ தர்மோயுதோஉபதீத் !!
— மஹாபாரதம், வனபர்வம் 313/128 

“தர்மத்தைக் காலால் மிதித்தால் அது அவனை மிதித்துவிடும். தர்மத்தை காப்பாற்றினால் அது அவனுக்கு பாதுகாப்பு தரும். அதனால் தர்மத்தை காப்பாற்ற வேண்டும்”. 

இந்த ஸ்லோகத்தில் உள்ள ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷித:’ எனற வாக்கியத்தின் பொருளை  தேசிய வாக்கியமாக ஏற்றுக்கொண்ட நம் நாட்டுப் பாதுகாப்பு, கண்காணிப்பு, பகுத்தாய்வு பிரிவின் பெயர் ‘ரா’. RAW என்றால் ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்.  இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. 21- 9 -1968. 

பிரதமர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேற்பார்வையில் இந்த பிரிவு பணிபுரிகிறது. பகுப்பாய்வாளர்கள் பலரின் பாராட்டை பெற்ற அமைப்பு ‘ரா’.

நல்லாட்சி என்பதை சரியாக விளக்குவது கடினம்.

நல்லாட்சி என்றால் நீதி, தனிமனித சுதந்திரம், வேலைவாய்ப்பு, சமுதாயத்திற்குத் தேவையான பொருளாதார உதவிகளை செய்வது என்று எடுத்துக்கொள்ளலாம். நல்லாட்சி என்றால் நீதியையும் சட்டத்தையும் கௌரவிப்பது, பொறுப்பு ஏற்பது, வெளிப்படைத்தன்மை, சமத்துவம், அடிப்படை மனித உரிமைகள், மக்களை கௌரவமாக நடத்துவது என்றும் விளக்கமுடியும். ஏஷியன் டெவலப்மென்ட் வங்கி நல்லாட்சிக்கான   முக்கிய அம்சங்களை குறிப்பிடுகிறது. அவை… பொறுப்பேற்பது, வெளிப்படைத்தன்மை, தொலைநோக்குப் பார்வை, நாட்டு பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம், நலத்திட்டங்களை வடிவமைத்து அவற்றின் பராமரிப்பில் பொதுமக்களை ஈடுபடுத்துவது.

சுபம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version