தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
காசி க்ஷேத்திரத்தில் விஸ்வநாத மந்திர மறுசீரமைப்பு, விசாலமான வளாக நிர்மாணம் போன்றவை அண்மையில் முழுமையடைந்து நாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டு மார்கழி மாதம் சுக்ல பட்ச தசமி (டிசெம்பர் 10, 2021) அன்று மகா உற்சவம் கண்களுக்கு விருந்தாக நடந்தேறியது.
இது கோடிக்கணக்கான இந்தியர்களின், பக்தர்களின் கனவு நனவான நேரம். இடித்தழித்து சிதிலமாக்கிய வரலாற்றுக்கும் உதாசீனமும் அலட்சியம் காட்டிய முறைமைக்கும் ஒரு பரிஷ்காரம் இது. மத மூடத்தனத்தோடும் துவேஷத்தோடும் கட்டவிழ்ந்த அழிவினால் வேதனையில் ஆழ்ந்திருந்த பாரத தேசத்தில் சிவயோகினி, மகா மனிஷி இன்டோர் மகாராணி அஹல்யாபாயி ஹோல்கர் சஞ்சலமற்ற பக்தியோடு ஸ்தாபித்த தெய்வீக விஸ்வநாதர் ஆலயம் பாரத தேசத்தில் மிக முக்கியமான கோயில்.
அந்தக் கோவிலை மிக விசாலமாகவும் சுந்தரமாகவும் கலையழகோடும் வடிவமைத்த தலைவர்களுக்கும் சிற்பிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பாரத தேச மக்கள் அனைவரும் பிரத்தியேக பாராட்டுகளைத் தெரிவித்து வணங்க வேண்டிய வரலாற்று நிகழ்வு இது.
இது மதத்தோடு தொடர்புடைய நிகழ்வாக வெளிப் பார்வைக்குத் தென்படலாம். ஆனால் சற்று பரிசீலனைப் பார்வை இருந்தால் இது தேச கௌரவத்திற்கும் புகழுக்கும் தொடர்புடைய நிகழ்வு என்பது தெளிவாகப் புரியும்.
பிரபஞ்சத்தில் இன்றும் உயிரோடு உள்ள மிகமிகப் புராதன நகரம் வாரணாசி.
இப்படிப்பட்ட, மக்கள் தொகை மிகுந்த, வணிக முக்கியத்துவம் வாய்ந்த, கலையும் கலாச்சாரமும் வளர்ச்சியடைந்த ஆன்மீக நகரம் வேறொன்று இல்லை. இதன் புகழையும் பெருமையையும் காத்துக் கொள்ள வேண்டிய கடமை ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு.
பல யுகங்களாக இதிகாச முக்கியத்துவமும் மிக உயர்ந்த சரித்திரமும் கொண்ட காசியை வரலாற்று ரீதியாகவும் ஆன்மீக கோணத்திலும் கலாசார ரீதியாகவும் நாகரிக வளர்ச்சியின் பரிணாமக் கிரமத்திலும் ஆராய வேண்டியது அவசியம். இது முழுமையான மனித குலத்திற்குப் பயன்படும் அற்புதங்களை அளிக்கக் கூடியது.
சனாதன தர்மத்தைச் சேர்ந்த சைவ, வைணவ, சாக்த, சௌர, கௌமார, காணபத்திய மதங்களுக்கான முக்கிய ஆலயங்கள் பல காசி நகரில் உள்ளன. மணிகர்ணிகா தீர்த்தத்தின் அருகில் புராணப் புகழ்பெற்ற ஸ்கந்த தீர்த்தம் உள்ளது. இவ்வாறு வேதத்தோடு தொடர்புடைய ‘ஷண்’ மதங்களுக்கு காசி நிலையமாக உள்ளது. ஹரிச்சந்திரன், ஸ்ரீராமன், ஸ்ரீகிருஷ்ணன் போன்ற மகா சக்கரவர்த்திகளோடும் அவதாரப் புருஷர்களோடும் முடியிடப்பட்ட நகரம் காசி.
ஒருபுறம் மகா நகரத்தின் பெருகிய மக்கள் தொகை, பெனாரஸுக்கு என்று சிறப்பு பெற்ற பொருட்களின் தயாரிப்பு, மறுபுறம் ஹிந்துஸ்தானி நாத இன்பம்… இவையனைத்தையும் மிஞ்சிய இன்னொரு புறம் தெய்வீக கடவுளர்களின் சாந்நித்தியம், ஆரம்பர வாழ்க்கை வழிமுறை ஒருபுறம், நிராடம்பரமான யோக ஜீவனம் மறுபுறம். ஜனன, மரண தத்துவ விசாரணைக்கு நிலையமாக பலப்பல தீர்த்த கட்டங்கள்… இவை காசியின் பன்முகப்பட்ட காட்சிகள்.
பக்தர்கள், யோகிகள், ஞானிகள், சித்த புருஷர்கள், யாத்ரீகர்கள், தீர்த்த யாத்திரையின் விதிகளை கடைபிடிப்பவர்கள், உலகெங்கிலுமிருந்து வந்து குவியும் சுற்றுலா பிரியர்கள்… இவ்வாறான அரிதான மஹா க்ஷேத்திரத்தை சிறந்த செல்வமாகப் பெற்ற தேசம் நம்முடையது. பல்வேறுபட்ட மதங்களின் கலாச்சாரத்தைப் போற்றி வளர்க்கும் நகரம் இது.
நாட்டிலுள்ள ஒவ்வொரு மூலையிலிருந்தும் ‘காசி விஸ்வநாதா!’ என்று கோடிக்கணக்கான ஹிந்துக்கள் பக்திப் பரவசத்தோடு வணங்கி அழைக்கும் ஸ்வாமியின் ஆலயத்தை விராட் ரூபமாக பிரத்தியக்ஷமாக வெளிப்படுத்தியதோடு கூட காசி நகரத்தின் வீதிகள், இருப்பிடங்கள், விமானம் ரயில் பஸ் நிலையங்கள், சந்திப்புக் கூடலிகள்… அனைத்தையும் மிக அழகிய வடிவில் மாற்றியமைக்கும் முயற்சிக்கு பாராட்டுகள்.
இதே எழுச்சியோடு…
இன்னும் பிந்துமாதவர் ஆலயத்தையும், சுயம்பு ஆலயங்களையும், பல பிரத்யேக தீர்த்த கட்டங்களையும் மாநில, மத்திய அரசுகளும் பக்தர்களும் இணைந்து உற்சாகத்தோடு மராமத்துப் பணிகளை விஸ்தரிக்கச செய்வார்கள என்ற நம்பிக்கை இருக்கிறது.
இது நாடுதழுவிய தர்மத்திற்கான உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் நிகழ்வு.
அன்றைய சோகமான அழிவுகளிலிருந்தும், பரிஷ்காரம் செய்ய இயலாத பல பத்தாண்டுகளின் சோர்விலிருந்தும் மீண்டு, தன்மானம் விழித்தெழுந்து புனர்நிர்மாணம் சாதிக்க முடியும் என்ற தைரிய ஜோதியைத் தூண்டிய சுப முகூர்த்தம்.
இந்த சந்தர்பத்தில் ஒரு பக்தராக, நாட்டுப் பெருமையைக் காக்கும் பிரதமர் ஆற்றிய உரையின் ஒவ்வொரு சொல்லும் பாரத பாரம்பரியத்தையும் வைபவத்தையும் கலாசார சைதன்யத்தையும் தூண்டுவதாக அமைந்தது.
நம் நாட்டிலும் அயல் நாடுகளிலும் உள்ள பாரதீயர்கள் அனைவரின் உள்ளம் கவர் தெய்வீக மகா நகரம் காசி. பிரளய காலத்திலும் அழியாத இந்த சாஸ்வத நகரம் ஒளியோடு விளங்கட்டும்! விஸ்வாதர், விசாலாக்ஷி, அன்னபூரணி, பிந்து மாதவர், டுண்டிகணேசர், லோலார்க்க ஸ்கந்தன்… போன்ற தெய்வங்களின் கருணையால் சநாதன தர்மம் ஒளியோடு வளரட்டும்!!
சுபம்!
(ருஷிபீடம் ஜனவரி 2022 தலையங்கம்)