விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் -24
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)
தெலுங்கில்: பி எஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
Ethics & Values
‘ஸன்’ ஸ்ட்ரோக்!
பிரதமராக இருந்தபோது இந்திரா காந்தி 1975 ஜூன் 26ம் தேதி அவசரநிலை (எமெர்ஜென்சி) பிரகடனம் செய்தார். அதன்பின் இரண்டாண்டுகள் 1977 மார்ச் 21 வரை தேசம் இருண்ட நாட்களை அனுபவித்தது. எதிர்கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போது எப்படிப்பட்ட அரசாங்கப் பொறுப்பும் இல்லாத ஒரு இளைஞன் தேசத்தில் ஏகப்பட்ட அட்டகாசம் செய்தார். போலீஸ் அதிகாரியாக, நீதிபதியாக பிரதமருக்கே பிரதம ஆலோசகராக நடந்து கொண்டார். ஜனாதிபதியை ரப்பர் ஸ்டாம்பாக மாற்றினார். பலவந்தமான குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தால் பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் தலைகுனிவு எற்படுத்தினார். இந்திரா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கு கெட்ட பெயர் சம்பாதித்துக் கொடுத்தார். 1977ல் லோக்சபா தேர்தலில் அந்தக் கட்சியின் படு தோல்விக்குக் காரணமானர் அவரே சஞ்சய் காந்தி. இந்திரா காந்தியின் புதல்வர்.
அம்புலிமாமா கதைகளில் மக்களைத் துன்புறுத்தும் அரசனின் மைத்துனன் குறித்து படித்துள்ளோம். நிகழ்காலத்தில் கூட அதிகாரமில்லாமலே அதிகாரம் செய்யும் முதலமைச்சரின் மகன், மாப்பிள்ளை, மனைவி, மகள் இப்படி பலர் சுதந்திர பாரத தேசத்தில் குடியரசு ஆட்சியில் ஊழலை வளர்த்துப் பெருக்கினர்.
வரலாற்றில் ‘சன்’ ஸ்ட்ரோக் தாக்கிய திருதிராஷ்டன் இறுதியில் தகுந்த பலனை அனுபவிக்க வேண்டி வந்தது. துரியோதனன் பிறக்கும் போதே நரி மாதிரி ஊளையிட்டு அழத்தான். பல அபசகுனங்கள் தென்பட்டன. கழுதையும் கழுகும் நரியும் பிறந்த குழந்தையோடு சேர்ந்து மீண்டும் கத்தின. இயற்கை வருந்தியது. ஜோதிட நிபுணர்களும் விதுரனும் எதிர்காலத்தை தரிசித்து எச்சரித்தனர்.
“இந்த பாலகன் வம்சத்தை நாசம் செய்வான். இவனை நீக்கி விடுவதே நலம்” என்று அறிவுறுத்தினர். திருதிராஷ்டிரனுக்கு புத்திர மோகம் தடையாக இருந்தது. தந்தையின் சிம்மாசன மோகமும், தாயின் அசூயையும் ஒன்றாகச் சேர்ந்து வளர்ந்தான். ‘வால் நாயை ஆட்டிய பழமொழி’ போல் இந்த தீய குமாரன் தந்தை திருதிராஷ்டிரனை ஆட்டுவித்தான். தற்கொலை பயமுறுத்தலால் குரு வம்ச நாசத்திற்குக் காரணமானான்.
த்யஜேதேகம் குலஸ்மார்தே க்ராமஸ்யார்தே குலம் த்யஜேத் ||
க்ராமம் ஜனபதஸ்யார்தே ஆத்மார்தே ப்ருதிவீம் த்யஜேத் ||
(ஆதி பர்வம் 114-38)
பொருள்:- ஒரு தனி மனிதனின் சுயநலத்திற்கும் குடும்ப நலத்திற்கும் இடையில் வேறுபாடு ஏற்பட்டால் குடும்பநலனுக்காக அந்த மனிதனை விலக்கி விடவேண்டும். குடும்ப நலனுக்கும் கிராம நலனுக்கும் இடையே மோதல் நேர்ந்தால் கிராமத்திற்காக குடும்பத்தை தியாகம் செய்ய வேண்டும். கிராமத்திற்கும் பரந்த சமுதாயத்திற்கும் இடையே மோதல் வெடித்தால் சமுதாய நலனுக்காக கிராமத்தை விலக்க வேண்டும். மோட்ச சாதனைக்கு தடை ஏற்படுத்தும் ஒவ்வொன்றையும் தியாகம் செய்ய வேண்டும்.
தலைவனுக்கு ஏற்படும் தலைவலிகளில் முக்கியமானது உறவினர்களால் வருவது. 2014ல் நரேந்திரமோடி பிரதமரான பின் தன் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே அமைச்சர்களை எச்சரித்தார். “உங்கள் அலுவலகங்களில் உறவினர்களையோ நண்பர்களையோ தவறுதலாகக் கூட சேர்க்க வேண்டாம்” என்றார்.
தலைவனின் பெயரைப் பயன்படுத்தி அதிகாரம் செய்வபர்களிடம் கவனமாக இருக்க வேண்டுமென்று நம் ரிஷிகள் என்றோ எச்சரித்தனர்.
கச்சின்ன சௌரைர்லுப்தைர்வா குமாரை: ஸ்த்ரீபலேன வா |
த்வயா வா பீட்யதே ராஷ்ட்ரம் கச்சித் துஷ்டா க்ருஷீவலா: ||
மகாபாரதம் சபாபர்வம் –5-77)
பொருள்:- திருடர்களாலோ பொருளாசை கொண்டவர்களாலோ உன் புதல்வர்களாலோ உன் உறவினர்களாலோ அரச குலப் பெண்களாலோ உன்னாலோ தேசத்திற்கு எப்படிபட்ட துன்பமும் ஏற்படவில்லை அல்லவா? உன் ராஜ்யத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனரா?
வெல்லத்தைச் சுற்றி ஈக்கள் மொய்ப்பது போல் அதிகாரத்திலிருக்கும் மனிதரைச் சுற்றிலும் சுயநலவாதிகள் வந்து சேருவர். இந்தக் கழுகுகள் தன் பெயரைக் கூறி வசூல் சேவை செய்கின்றனர் என்று அந்த அதிகாரிக்கு (X Tax) அத்தனை எளிதில் தெரியவராது. இவ்வாறு மக்களைப் பீடிப்பவர்களைக் கண்டறிய வேண்டும். தெரிந்தும் அலட்சியம் காட்டாமல் அவர்களுக்குத் தகுந்த தண்டனை விதிக்கக் வேண்டும்.
உறவினர்களைத் தொலைவில் வைக்க வேண்டும். அரசன் தன் உறவினர்களையும் தொடர்புடையவர்களையும் கோட்டை நிர்வாகம், பரிபாலனைப் பொறுப்புகளில் நியமிக்கக் கூடாது. அவர்களை நியமிக்க வேண்டுமென்று சிபாரிசு வந்தாலும் அவர்களைத் தொலைவில் வைக்க வேண்டும்.
ஏனென்றால் அவர்கள் தவறு செய்தால் அரசன் அவர்களைத் தண்டிப்பதற்குத் தயங்க நேரும். அவர்களை ஒரு வேளை தண்டிக்காவிட்டால் மீதி உள்ளவர் கூட அந்தக் குழப்பமான நிலையிலிருந்து லாபம் பெறுவர். இது தேசத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் தீங்கு விளைவிக்கும். இது இறுதியில் அரசனும் தேசமும் அழியும் நிலைக்குக் கொண்டு தள்ளும். அதனால் எந்தச் சூழ்நிலையிலும் கட்டளையை நிறைவேற்றும் போது சலுகைகளை அனுமதிக்கக் கூடாது.
(சிவாஜியின் நெருங்கிய உதவியாளர் ராமச்சந்திர பந்த் தயாரித்த ராஜ சாசனம்)
சுபம்!