தெலுங்கில் : பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் : ராஜி ரகுநாதன்
தெலுங்கு மொழி வரலாற்றில் இந்த ஆண்டிற்கு உயர்ந்த சிறப்புள்ளது. ஆதிகவி நன்னயாவின் தெய்வீகக் கரங்களில் இருந்து தெலுங்கு மகாபாரதம் அவதரித்து ஆயிரம் ஆண்டுகள் நிறைந்துள்ளன.
தெலுங்கு மக்களின் வரலாற்றில் சிறப்பான இடம் பெற்ற ராஜமகேந்திரவரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட கீழை சாளுக்கிய அரசன் ராஜராஜ நரேந்திரனுக்கு, ராஜ மகேந்திரன் என்ற பெயரும் உண்டு. ராஜகுல பூஷணன், ராஜமகேந்திர உன்னதன், தர்ம தயார்த்த நிபத்த புத்தி என்று கவி நன்னயாவால் போற்றப்பட்ட உத்தம சாளுக்கியன் இந்த அரசன்.
ராஜ மகேந்திரனின் வேண்டுகோளை ஏற்று மகாபாரதத்தைத் தொடங்கி, இரண்டு பர்வங்கள் எழுதி முடித்து ஆதி கவியாக புகழப்பெறுகிறார் புலவர் நன்னயபட்டர்.
நன்னயாவிற்கு முன்பாக தெலுங்கு இலக்கியம் இல்லாமல் இல்லை. நன்னயாவுக்கு முந்தைய கவிகளின் வரலாற்றை வெளியிட்ட வரலாற்று ஆசிரியர்கள் உள்ளனர். வேமுலவாடா பீமகவி, நன்னெசோடுடு போன்ற புகழ் பெற்றவர்களோடு இன்னும் பல இலக்கிய வாதிகள் இருந்தனர்.
ஆனால் ஒரு மஹா இதிகாசத்தை மிகமிக சுந்தரமாக, கவிதை எழிலோடு படைத்து அன்றைய அறிஞர்களிடமும் அரசவைக் கவிஞர்களிடமும் ஆந்திரதேச பாஷைக்கு மதிப்பு கிடைக்கச் செய்த மகநீயர் நன்னய கவி.
அவருடைய செய்யுள் படைப்பு முறை, ஆயிரம் ஆண்டு தெலுங்கு இலக்கியத்திற்கு புதிய பாதை வகுத்தது. நன்னயாவிற்குப் பின் வந்த திக்கனா, எர்ரனா, போத்தனா, ஸ்ரீநாத கவி ஆகிய புலவர்கள் அனைவரும் சுதந்திரமாக படைப்பிலக்கியம் செய்தார்கள் என்றலும் நன்னயா காட்டிய வழியில் சென்றவர்களே.
‘ரிஷியைப் போன்ற நன்னயா, இரண்டாம் வால்மீகி’ என்ற கவி சாம்ராட் விஸ்வநாத சத்தியநாராயனாவின் சொற்கள் அக்ஷர சத்தியமானவை.
பாரதிய கலாச்சாரத்திக்கு மூலமான சமஸ்கிருத மொழியையும் தெலுங்கு மொழியையும் இணைத்து கவிதை படைத்த இவருடைய புத்திகூர்மை, தெலுங்கு மொழியை மிக உயர்ந்த இடத்தில் நிறுத்தியது.
“காசட பீசடே சதிவி காதலு த்ரவ்வு தெலுங்குவாரிகி” – ஏதோ கொஞ்சம் படித்து விட்டு கதை அளக்கும் தெலுங்குக்காரர்களுக்கு – மாஹகாவியத்தை சாட்சாத்காரம் செய்தவித்த மற்றுமொரு பிரம்மாவாக நன்னயாவைப் புகழ்ந்தார் கவி திக்கனா.
‘ஆந்த்ர கவித்வ விசாரதர், வித்யாதயிதுடு, மகிதாத்மர்’ ஆகிய நன்னய பட்டர், அன்போடும் தீர்க்கதரிசனத்தோடும் படைத்த தெலுங்கு மகாபாரத க்ருதிகள், அவருக்குப்பின் வந்த புலவர்களுக்கு வழிபாட்டுக்குரியதானது.
பாரத தேசத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் மூலமான வேதங்களையும் புராண, இதிகாசங்களையும் முழுமையாகப் பயின்றதோடு, சனாதன வேத வாழ்க்கை வாழ்ந்த ‘நித்திய சத்திய வசனர்’ நன்னயபட்டர்.
‘அவிரள ஜனஹோம தத்பரர், விபுல சப்தசாசனர், சம்ஹிதாப்யசர், ப்ரஹ்மாண்டாதி நானாபுராண விஞ்ஞான நிரதர், லோகஞர், உபய பாஷா காவிய ரசனாபிசோபிதர், சத்ப்ரதிபாபியோக்யர், சுஜனர்’ என்று ராஜராஜ நரேந்திரனால் புகழப்பட்டார் நன்னயா.
கதை கூறும் போது செய்யுட்சிற்பங்களை எவ்வாறு செதுக்குவது என்று கற்றுக் கொடுத்த திறமைசாலி நன்னயா. ‘பிரசன்ன கதாகவிதார்த்த யுக்தி, அக்ஷர ரம்யுதர், நானாருசிரார்த சூக்திநிதி’ யான நன்னயாவின் எழுத்தில் மகிழ்ந்து திளைத்த மேதைகள் மிகப்பலர்.
உணர்ச்சி பூர்வமாக மொழியைத் திறம்பட கையாண்டு தெலுங்கு சொற்களின் இனிமையோடு சம்ஸ்கிருத சொற்களின் மாதுர்யத்தை உசிதமாக இணைத்த நன்னயாவின் பாணி ரசிகர்களுக்கு விருந்தானது. ‘ஆந்திர சப்தசிந்தாமணி’ என்ற நூலை ‘பாஷா சாஸ்திர’மாகப் படைத்து, ‘விஸ்வஸ்ரேய: காவ்யம்’ – உலக நன்மைக்காகவே காவியம் படைக்கப்படுகிறது என்று விளக்கிக் கூறிய மகநீயர் நன்னயா.
இந்த சந்தர்பத்தில் இலக்கிய சங்கங்கள், பலகலைக் கழகங்கள், இரு தெலுங்கு மாநிலங்களிலும் சிறந்த சந்திப்பு மேடைகளை ஏற்படுத்தி அறிஞர்களைக் கொண்டு சொற்பொழிவுகளையும் படைப்புகளையும் வெளியிட்டு வருவதைப் பாராட்ட வேண்டும்.
இன்றைய இளையதலைமுறை நம்முடையதான இந்த வராலாற்றுப் பெருமையை அறிந்து கொள்ள வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வைபவம் கொண்ட பாரதிய கலாசாரத்தின் உள்ளூடாக பண்டைய ஆந்திர பண்பாட்டு வைபவம் எத்தனை ஒளி பொருந்தி பிரகாசிக்கிறது என்பதை இன்றைய தலைமுறை உணர வேண்டும். அவ்வாறு உணரும்படிச் செய்வது காலாசார அபிமானிகளின் கடமை.
மகா இதிகாசங்களை வெளியிடும் சக்தி தெலுங்கு மொழிக்கு உள்ளது என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்த கவி நன்னயாவின் நினைவு, இன்றைய உலக மயமாக்கும் வேகத்தில் தாய்மொழியை மறந்து வருவர்களிடம் அரும்ப வேண்டும். ஒருபுறம் ராஜா நரேந்திரன் போன்ற அரசர்களின் சரித்திரம், மறு புறம் புலவர்களின் வைபவம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெற்றிருந்த தெலுங்கு மொழியின் சிறப்பு போன்றவை ஒரு பெருமையான உணர்வையும், புதிய உற்சாகத்தையும் இன்றைய தலைமுறைக்கு ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
இந்த கண்ணோட்டத்தில் இந்த ‘சஹஸ்ராப்தி’ உற்சவங்கள் மேலும் பெருக வேண்டும் என்று விரும்புவோம்.
(தலையங்கம், ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ் செப்டம்பர், 2022)
***
(ஆந்திர மகாபாரதம் என்பது மூன்று புலவர்களால் பல நூற்றாண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட வியாச மகாபாரதத்தின் சுதந்திரமான மொழிபெயர்ப்பு.
பதினொன்றாம் நூற்றாண்டில் நன்னய பட்டர் ஆதி பர்வம், சபா பர்வம் மற்றும் ஆரண்ய பர்வத்தில் பாதியை எழுதினார். இரண்டரை பர்வங்கள் மட்டுமே எழுதினார். அதன் பிறகு அவர் இறந்து விட்டதாகத் தெரிகிறது.
13-ஆம் நூற்றாண்டில் திக்கனா என்ற கவிஞர், நன்னயா எழுதியதை அப்படியே வைத்துவிட்டு, நான்காவது பர்வத்தில் இருந்து இறுதி வரை மகாபாரதத்தை எழுதி முடித்தார்.
14ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஏர்ரனா என்ற கவிஞர், நன்னயா எழுதி பாதியில் வைத்திருந்த, முடிக்கப்படாத ஆரண்ய பர்வத்தை முழுமை செய்தார்.
அதனால் இந்த மூவரையும் ‘கவித்திரயம்’ என்று அழைப்பார்கள். இவ்வாறு இவர்கள் தெலுங்கு இலக்கியத்திற்கு செய்த முயற்சியை, சம்ஸ்கிருதத்திலேயே வந்துகொண்டிருந்த செய்யுட்களில் இருந்து மாறுபட்டு, தெலுங்கு செய்யுட்களால் இயற்றப்பட்ட இந்த மகாபாரதத்தை தெலுங்கு மொழி அறிஞர்களும் பொதுமக்களும் மிகவும் புகழ்ந்து போற்றி வரவேற்றார்கள். இன்றும் அவற்றை கொண்டாடுகிறார்கள்).