― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (பகுதி 25): விஷபக்ஷண நியாய:

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (பகுதி 25): விஷபக்ஷண நியாய:

- Advertisement -

தெலுங்கில்: பி.எஸ்  சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

விஷபக்ஷண நியாய:
விஷம் – உயிருக்கு ஆபத்தான பொருள். பக்ஷணம் – உண்பது.

“விஷத்தைக் குடித்து உயிரோடு இருப்பது போல” என்பது விஷபக்ஷண நியாயத்திற்கு பொருள்.

விஷத்தை குடித்து உயிரோடு இருக்க முடியுமா? விஷத்தை சிறிது சிறிதாக உட்கொள்ளத் தொடங்கி கிரமமாக அளவை அதிகரித்துக் கொண்டே போனால் அது அவனுக்கு பழக்கமாகிப் போய் எந்த விதத்திலும் ஆபத்தாகாது. அவ்வாறு தின்பவர்களுக்கு விஷம் கெடுதல் செய்யாமல் இருப்பதைக் குறிப்பதே விஷ பக்ஷண நியாயம்.

ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. விஷம் அருந்துபவருக்கு எந்தவிதமான நஷ்டமும் ஏற்படாமல் போனாலும், விஷத்திற்குப் பழக்கமான மனிதரோடு  தொடர்பு கொள்பவர்களுக்குத் தீங்கு நேரும்.  

அறிஞர்கள் இந்த விஷ பக்ஷண நியாயத்தை ஆறு விதமாகப் பிரித்துள்ளார்கள். அவை 1. மாத்சர்ய விஷபக்ஷண நியாயம், 2. லோப விஷபக்ஷண நியாயம் 3. காம விஷ பக்ஷண நியாயம் 4. காலுஷ்ய விஷபக்ஷண நியாயம் 5. போதை விஷபக்ஷண நியாயம் 6. த்வேஷ விஷபக்ஷண நியாயம்.

1. மாத்சர்ய விஷபக்ஷண நியாயம் – மாத்சர்யம் என்றால் அசூயை, பொறாமை.

பார்வையற்ற அரசனான திருதராஷ்டிரனும் அவன் மகன் துரியோதனனும்  மாத்சரியம் என்ற விஷமே வடிவானவர்கள். “எனக்கு அநியாயம் நேர்ந்து விட்டது. அரசனாக வேண்டிய நான் இவ்வாறு கிடக்கிறேன். பாண்டு அழகாக அரசப்  பதவியை ஆளுகிறான்” என்று எண்ணி அதையே தன் மனைவி காந்தாரியிடம்  கூறி தன் மாத்சரியத்தை வெளிப்படுத்துகிறான்.

காந்தாரிக்கு குந்தி மீது இருந்த அசூயை என்ற விஷம் முற்றிப்போய் தன் கர்ப்பத்திற்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டாள். கௌரவர்கள் பிறந்த காதை அனைவருக்கும் தெரிந்ததே. தாயின் பொறாமையும் தந்தையின் மாத்சர்யமும் சேர்ந்து பிறந்தான் துரியோதனன். சிறுவயதிலிருந்தே பாண்டவர்கள் மீது காரணம் இன்றிப் பகையை வளர்த்துக் கொண்டான். அல்ப விஷயத்திற்காக பீமனுக்கு விஷமளித்துக் கொல்ல முயற்சித்தான்.

திருதராஷ்டிரனும் கூட தன் விஷ அணைப்பினால் நசுக்கி பீமனைக் கொல்ல வேண்டும் என்று பெரு முயற்சி செய்தான் அல்லவா? இந்தக் கதை மாத்சர்ய விஷத்தால் தந்தை, மகன் இருவரும் அந்தத் தீய குணத்தின் வடிவமாக எவ்வாறு மாறினார்கள் என்பதைத் தெரிவிக்கிறது.

பொறாமை வடிவமான இவர்கள் 18 அக்ரோணி சேனைகளுக்கு அழிவை எடுத்து வந்தார்கள். இவர்களுடைய அசூயையால் தர்மவான்களான பாண்டவர்களும்  திரௌபதியும் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. நம் சினிமா எழுத்தாளர்கள் துரியோதனனில் உள்ள இந்த விஷ குணத்தை தன்மானமாக சித்திரிப்பார்கள்.

2. லோப விஷபக்ஷண நியாயம் – லோபம் என்றால் பேராசை.

பிறருடைய செல்வத்தையும் பொருட்களையும் தாம் அடைய வேண்டும் என்ற தீவிரமான பேராசையே லோபம்.

இவர்கள் திருட்டுத்தனத்திற்கும் ஊழலுக்கும் பழக்கப்பட்டுப் போவார்கள். மெதுவாக பேராசையின் வடிவமாகவே மாறிவிடுவார்கள். பேராசை என்ற விஷம் எப்படிப்பட்ட கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதை முளைக்கீரை திருடிய கதை விளக்குகிறது. இந்தக் கதை இதற்கு முன் உள்ள தலைமுறைக்கு மிகவும் பழக்கமானது.

ஒரு ஊரில் ஒரு தாய் அருமை பெருமையாக செல்லம் கொடுத்து வளர்த்த  மகன் சிறு வயதிலிருந்து சிறு சிறு திருட்டுகள் செய்து வந்தான். அடுத்தவர்  வயலிலிருந்து ஒரு நாள் முளைக்கீரையையும் காய்கறிகளையும் திருட்டுத்தனமாக பறித்து வந்து தாய்க்கு அளித்தான். எங்கிருந்து எடுத்து வந்தாய் என்று கேட்காமல் அவள் அதனை சமைத்துப் பரிமாறினாள். அவ்வாறு பேராசை என்ற லோப விஷம் சிறு சிறு அளவில் அந்தச் சிறுவனுக்கு சமையலோடு சேர்ந்து உட்புகுந்தது. காலக்கிரமத்தில் அது வழிப்பறி கொள்ளையாக வளர்ந்தது. எடுத்து வரும் தனத்தை எவ்வாறு சம்பாதித்தாய் என்று தாய் கேட்கவில்லை. அந்த விஷமே அவனுக்கு உணவானது. பேராசையின் முழு வடிவமாக மாறிய  அந்த மனிதன் பல கொலைகளையும் செய்தான்.

ஒரு கொலை வழக்கில் அவனுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவனை தூக்குக் கயிற்றில் ஏற்றும் முன்பு உன் கடைசி ஆசை என்ன? என்று கேட்டார்கள். என் தாயோடு பேச வேண்டும் என்றான் அந்தக் குற்றவாளி. அவனுடைய முதிய தாயை அழைத்து வந்தார்கள். பேசுவதற்காக தாய் அருகில் வந்த அவன் அவளுடைய காதைக் கடித்து விட்டான். குய்யோ முறையோ என்று தாய் அழுதாள். அரச வீரர்கள் அவனைப் பிடித்து பின்னால் இழுத்தார்கள். எதற்காக அவ்வாறு செய்தாய்? என்று கேட்டபோது அவன், “முளைக்கீரை திருடி வந்த போதே நான் செய்தது தவறு என்று என் தாய் ஏன் சொல்லவில்லை?” என்று கேட்டு அழுதான்.

விஷ பக்ஷ நியாயத்திற்கு உதாரணமாக அறிஞர்கள் இந்தக் கதையை எடுத்துக்காட்டுவார்கள். சிறுவயதில் பள்ளிகளில் ஏதோ பென்சில் திருடினவனை  பென்சில் திருட்டு தானே என்று அலட்சியப்படுத்தினால் பெரியவனாகிய பின் உலகில் எதைத்தான் திருட மாட்டான்? என்பது இந்த நியாயத்தில் உள்ள கருத்து.  ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ற பழமொழியே இந்த நியாயம் கூறும் செய்தி. சிறுவயதிலிருந்தே சரி செய்யாது போனதால் வரும் நஷ்டங்கள் ஆபத்தை விளைவிக்கும் என்ற செய்தியை அளிக்கிறது இந்த நியாயம்.

ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவி தன் செல்வாக்கை உபயோகித்து  பெரிய பெரிய மால்களில் புடவைகளும் நகைகளும் எடுத்துக் கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றி பெரிய வழக்கில் சிக்கி தொல்லைக்கு ஆளான செய்தி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும் இந்த வகையைச் சேர்ந்ததே.

3. காம விஷ பக்ஷண நியாயம்: ஆசை என்னும் விஷம்.

விஷபக்ஷணம் செய்தாலும் நாட்டு சேவைக்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணம் செய்த சிலர் பெயரில்லாமல் அனாமதேயமாகக் காற்றில் கலந்து விட்டார்கள். அவர்களே விஷக் கன்னிகள்.

எதிரி அரசர்களைக் கவரும் அஸ்திரங்கள் அவர்கள். நாட்டு நலனுக்காக தேசபக்தர்களான அவர்களின் பெற்றோர் செய்த தியாகத்தின் பலனே இந்த விஷக் கன்னிகள்.

ஒரு காலத்தில் அரசர்கள் அனைவரிடமும் இந்த ஆயுதங்கள் இருந்தன. கல்கி புராணத்திலும் கவுண்டில்யரின் அர்த்த சாஸ்திர நூலிலும் ஆயுர்வேதத்தைச் சேர்ந்த அகத தந்திரத்திலும் இந்த விஷக் கன்னிகளை உருவாக்கும்  செயல்முறைகள் பற்றியும் அரசர்கள் எவ்வாறு அவர்களிடம் இருந்து தம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் வர்ணிக்கப்பட்டுள்ளன.  

பிறந்தவுடனே பெண் குழந்தையை தேசமாதாவுக்கு அர்ப்பணிக்கும் விதமாக ஒரு  சிறு துளியை விடக் குறைந்த விஷத்தை நாக்கில் தடவுவார்கள். வயதாக வயதாக சிறிது சிறிதாக அதை அதிகரித்துக் கொண்டே வருவார்கள். மிக மிக ரகசியமாக இந்தப் பெண் குழந்தைகள் வளருவார்கள். வயதுக்கு வந்தபின் அவள் அரசாங்கத்தின் சொத்தாவாள். அவளுடைய தீண்டலோ அவளுடைய சேர்க்கையோ மிக மிக ஆபத்தானது. அந்த விஷக் கன்னிகையை இப்போதைய வார்த்தையில் கூற வேண்டும் என்றால் ஹனி டிராப் எனலாம். அவர்களைப்  பகை அரசனிடம் இரையாக வீசுவார்கள். அந்த வலையில் விழுந்த எதிரி அரசன் இறந்து போவான்.

விஷபக்ஷண நியாயத்தில் இது ஒரு விதம். சாணக்கியர், சத்ரு சம்ஹாரத்திற்கு ராட்சச ராஜனின் மீது விஷக்கன்னியைப் பிரயோகித்த வரலாறு அனைவரும் அறிந்ததே. வீரரான பருவத ராஜாவைக் கூட விஷக்கன்னி தன் அணைப்பால் கொல்ல முடிந்தது.

விஷக்கன்னியை மீண்டும் சாதாரணப் பெண்ணாக மாற்றுவது அசாத்தியம். ஆனால் அவளை உபயோகித்து எத்தனை பேரை வேண்டுமானாலும் கொல்ல முடியும்.

4. காலுஷ்ய விஷபக்ஷண நியாயம்: – காலுஷ்யம் என்றால் மாசு.

விஷ பக்ஷண நியாயத்தின் மற்றும் ஒரு கோணம் இது. நவீன யுகத்தில் நாம் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளின் இயல்பைத் தெரிவிக்கும் கோணம்.   நாம் மூச்சு இழுக்கும் பிராண வாயு, அருந்தும் நீர், உண்ணும் உணவு அனைத்தும் கலப்படமான விஷங்களே. வாகன மாசு, புகை, தூசி, தூளி போன்றவை நம் மேல் படிந்து உடலும் விஷமாக மாறுகிறது. கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்குக் கூட குறைந்த அளவு விஷப் பதார்த்தங்கள் உள்ளே செல்கின்றன என்றும் தாயின் பாலில் கூட ரசாயன பதார்த்தங்கள் உள்ளன என்றும் உலக ஆரோக்கியத்துறை பரிசோதனையில் கூறுகிறது. இந்த விஷபக்ஷணத்தால் அவர்களுடைய ஆரோக்கியத்தின் மீதும் ஆயுளின் மீதும் தீய தாக்குதல் ஏற்படுகிறது.

5. போதை விஷபக்ஷண நியாயம்: – தீய பழக்கங்களுக்கு அடிமையாதல் போதை.

கூடா நட்பு, திரைப்படங்கள் போன்றவற்றின் தாக்கத்தால் மாணவப் பருவத்தில் இருந்தே பார்ட்டி கொடுப்பது, பார்ட்டியில் கலந்து கொள்வது என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக தீமைகள் பழக்கமாகி அதுவே வழக்கமாகி மது, போதைப்பொருள் போன்றவற்றுக்கு அடிமையாகி, சமுதாயத்திற்கும் தேசத்திற்கும்  துரோகம் செய்வதற்கும் பின்வாங்காத நடத்தை உள்ளவர்களாக மாறுகிறார்கள். இவர்களும் இந்த நியாயத்திற்கு உதாரணங்களே.

6. த்வேஷ விஷபக்ஷண நியாயம் – துவேஷம் என்றால் வெறுப்பு.

லவ் ஜிஹாத் பெயரில் நடக்கும் காதல் கொலைகள் குறித்து பேசிய புகழ்பெற்ற பத்திரிகையாளர் தாரக் பதே தன் பிரசங்கத்தில், “மதரஸா என்ற பெயரில் நடத்தப்படுகின்ற சின்ன பிள்ளைகளின் பள்ளிகளில் இஸ்லாம் தவிர இதர மதங்களின் மீது மிகவும் கடினமான வெறுப்பை போதிக்கின்றார்கள்” என்று கூறினார். சிறிய வயதிலேயே பாரத சைன்யத்தின் மீதும் ஹிந்து ஊர்வலங்களின் மீதும் கல்லை எறிந்து தாக்குவதைப் புண்ணிய காரியமாக போதித்து வருகிறார்கள். என்றும் சிறுவயதிலிருந்தே வெறுப்போடு வளர்ந்தவர்கள் ஜிகாதிகளாக மாறுகிறார்கள் என்றும் கூறினார்.

வெறுப்பு என்றால் காரணமின்றி எவர் மீதாவது விரோதம் ஏற்படுத்திக் கொள்வது. துவேஷம் மிகவும் ஆபத்தானது. விருப்பம் இல்லாமல் போவது வேறு. வெறுப்பது வேறு. துவேஷத்திற்கு காரணம் எதுவும் அவசியம் இல்லை. அது ஒரு மனோவியாதி என்கிறார்கள் மானசீக மருத்து அறிஞர்கள். துவேஷம் என்னும் தீய குணம் பயத்தால் ஏற்படுவதாக விளக்குகிறார்கள்.

ஸ்ரீகிருஷ்ணன் மீது கம்ஸனுக்கு ஏற்பட்ட துவேஷமே கோகுலத்தில் பல குழந்தைகளை பலி வாங்கியதற்குக் காரணமானது. மனிதன் தீவிரவாதியாவதற்கு   முக்கிய காரணம் துவேஷமே.

ஸ்ரீராம நவமி ஊர்வலத்தின் மீது கல்லெறிவதற்குக் காரணம் என்னவாயிருக்கும், துவேஷத்தை தவிர? காபிர் என்ற சித்தாந்தம் பிரார்த்தனை இடங்களில்   கொடுக்கப்படும் ஒரு விஷம். வெறுப்பு என்னும் விஷம் அதிகமானாவர்களே பல்கலைக் கழகங்களில் ‘துக்கடே’ குழுக்களாக வடிவமைகிறார்கள் என்பதே  இந்த நியாயத்தின் உள்ளர்த்தம்.

இவ்விதமாக விஷம் தின்று, விஷ சொரூபமாக மாறி, விஷத்தையே கக்கி, சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பதையே விஷபக்ஷண நியாயம் என்கிறோம்.

விஷத்தில் பிறக்கும் புழு விஷத்திலேயே உழல்வது போல வாழ்கிறோம் என்று ஏளனமாக வர்ணிக்கிறது கீழ் உள்ள ஸ்லோகம்.

விப்ராஸ்மின் நகரே மஹான் கதயக: தாலத்ருமாணாங்கண:

கோ தக்ஷ:? பரவித்ததார ஹரணே ஸர்வோஉபி பௌரோ ஜன: !

கோ தாதா:? ரஜகோ ததாதி வசனம் ப்ராதர்க்ருஹீத்வா நிஸி

தத்கிம் ஜிவசி ஹே சகே! விஷக்ருமி ந்யாயேன ஜீவாம்யஹம் !!

கேள்வி – ஓ அந்தணரே! உங்கள் ஊரில் அனைவரை விடவும் உயர்ந்தவர் யார்?

பதில் – பனை மரம் உயர்ந்தது.

கேள்வி – உங்கள் ஊரில் சாமர்த்தியம் மிக்கவர் யார்?

பதில் – பிறருடைய சொத்துக்களையும் பிறருடைய மனைவிகளையும் அபகரிப்பதில் எங்கள் கிராமத்தார் அனைவரும் சாமர்த்தியம் மிக்கவரே!

கேள்வி – இங்கு கொடையாளிகள் உள்ளார்களா?

பதில் – (இல்லாமலென்ன?) காலையில் துணிகளைத் எடுத்துக்கொண்டு போய் மாலையில் திரும்பக் கொடுக்கும் வண்ணாரே இங்கு கொடையாளிகள்.

கேள்வி – அப்படியானால் நண்பனே! இப்படிப்பட்ட ஊரில் எவ்வாறு வசிக்கிறாய்?

பதில் – விஷக்கிருமி நியாயமாக வசிக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version