சென்னையில் பாஜக. பொதுக்கூட்டத்தில் பேசிய அமீத் ஷா, தன் பேச்சில், ‘Minor Irrigation’ என்றார். அதை ‘சிறு நீர்ப் பாசனம்’ என்று மொழிபெயர்ப்பாளர் ஹெச்.ராஜா கூறிவிட்டாராம்! ‘தமிழ் ஆர்வலர்கள்’ – ‘நான் தமில் அண்டா’- ‘முற்போக்கூஸ்’… எல்லாம் குதி குதி என்று குதிக்கிறார்கள் !
இதற்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்! ஈவேரா கொண்டுவந்த எழுத்துச் சீர்திருத்தம் ஓரளவு சரிதான். ‘ளை’- ‘னை’… என்பதையெல்லாம் மேலே கொம்பு சுழி போட்டு எழுதியது போய் எளிமைப் படுத்தப்பட்டது வரை சரி! அது வரைக்கும் ஓகே!
ஆனால் ‘தலைவர்’ என்ன சொன்னாலும் அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்கும் அடிமை புத்தி, உங்களை எங்கே கொண்டு வந்து நிறுத்தியது தெரியுமா ஈவேரா விசுவாசிகளே?!
தலைவர் -‘ஔ’- எழுத்து வேண்டாம் : அதை ‘அவ்’ என்று எழுதலாம் என்றார். (இதேபோல் -‘ஐ’- க்கு பதில் – ‘அய்’- அதாவது ஐயா வுக்கு பதிலாக ‘அய்யா’). இதில் நீங்களும் உங்கள் தலைவரும் விவரம் கெட்ட தனமாக -ஔ- வை நீக்கிவிட்டு -அவ்- ஆக்கினீர்களே (அவ்வை சண்முகம் சாலை!) அங்குதான் விதி விளையாடியது!
இப்போது நான் சில உதாரணங்கள் தருகிறேன்! ‘அந்த வழியில்’- அவ்வழியில்: (அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி)
‘அந்த விதமாக’- அவ்விதமாக: ‘அந்த வகையில்’- அவ்வகையில். இப்படியே ‘அந்த வண்ணம்’- ‘அவ்வண்ணம்’… இப்படியே பல சொற்கள் கூறலாம்! அந்த என்ற சுட்டுச்சொல் ‘அவ்’ என்று குறுகி வரும்!
அந்த வைப்பாட்டி – அவ்வைப்பாட்டி! ஆக ‘ஔ’ வை ஒழித்து, ‘ஔவைப்பாட்டி’ யையும் ‘அவ்வைப்பாட்டி’ ஆக்கியவர்கள் நீங்கள்!
அவ்வைப் பாட்டி – என்று பிரித்து எழுதினால் நீங்கள் சீர்திருத்தி அழைத்துக் குறிப்பிடும் ‘ஔவைப்பாட்டி’ வருவாள்: அவ்வைப்பாட்டி என்று சேர்த்து எழுதினால், கேடுகெட்ட அரசியலில், விதிவிலக்குகள் நீங்கலாக, ஊருக்கு ஊர் பரவலாகப் பெருகி உள்ள ஏதோ ஒரு தலைவரின் எவளோ ஒரு வைப்பாட்டிதான் வருவாள்!
உங்களுக்குதான் ‘சேர்ப்பதிலும்’- ‘பிரிப்பதிலும்’ நிறையக் குழப்பங்கள் உள்ளதே!
சொல்லப்போனால் உங்கள் திராவிடச் சிக்கல்களே, பிளவுகளே ‘சேர்ப்பதிலும்’- ‘பிரிப்பதிலும்’ உள்ள சிக்கல்கள்தானே!
தப்பாக வேறு எதையோ கற்பனை செய்ய வேண்டாம்! ‘ர்’ சேர்த்து ‘திராவிடர் கழகம்’ என்றார் ஈவேரா! அந்த ‘ர்’ ஐ பிரித்துவிட்டு ‘திராவிட முன்னேற்றக் கழகம்’- என்றார் அண்ணாதுரை. பிறகு கட்சி பிளந்த போது திமுகவில் எம்.ஜி.ஆர்., ‘அ’ சேர்த்தார், பிறகு இன்னொரு பிளவில் வைகோ ‘ம’ சேர்த்தார்…. இப்படி சேர்த்துவிடுவதிலும் பிரித்துவிடுவதிலும் கரை கண்டவர்கள்தானே நீங்கள்!
இப்படிப்பட்டவர்களுக்கு ‘சிறு நீரை’ப் பிரிக்கத் தெரியாமல் போனதுதான் அதிசயம். தமிழ் அற்புதமான மொழி – கூடினால் ஒரு பொருள்; பிரிந்தால் வேறு பொருள்! ‘சிறு நீர்ப்பாசனம்’- என்பது ஒன்றும் கேலிக்குரியதல்ல! அதை உங்கள் பாணியில் கூட்டிவிட்டுக் கூட்டு ஒலியாக ‘சிறுநீர்ப்பாசனம்’- என்று ஒலிக்கச் செய்தலே கேலிக்குரியது!
அது சரி! மொழியைச் சீர் திருத்துகிறேன் என்று நீங்கள் அடித்த அக்கப்போர் கொஞ்சமா, நஞ்சமா!! குடிக்கும் ‘காபியை’ – ‘கொட்டை வடிநீர்’ என்றது முதல் ‘செல்ஃபோனை’- அகவி, முண்டக்கூவி என்றெல்லாம் நீங்கள் படுத்திய பாடு சொல்லி மாளாது!
அதைவிட INITIAL எனப்படும் பெயர் முதலெழுத்தை ‘தலை எழுத்து’ என்றாக்கி, “இனி எல்லாரும் தமிழில்தான் அவரவர் தலை எழுத்தை எழுத வேண்டும்”- என்று நீங்கள் சாமியாடிய காலம் ஒன்று உண்டு!
மிக மிகக் கற்பனையான பெயர்கள் சிலவற்றைத் தருகிறேன் – ஆனால் அவை நிஜத்தில் உங்கள் மூடத்தனமான தனித் தமிழ்வெறி எவ்வளவு கேனத்தனமானது என்பதைப் புரியவைக்கும்!
பாலூர் விசுவநாதன் மகன் ராமசாமி பா. வி. ராமசாமி ஆனான்! வேலூர் சின்னச்சாமி மகள் கமலா வே. சி. கமலாவாகிச் சீரழிந்து போனாள்! கும்பகோணம் சுப்ரமணி மகன் மூர்த்தி கு. சு. மூர்த்தியாகிப் பெயர்ப்பலகை முதல் வருகைப் பதிவேடுவரை சகலத்தையும் நாறடித்தான்!
அந்த நாற்றத்தோடு ஒப்பிடுகையில் ஹெச்.ராஜா மொழிபெயர்ப்பில் ‘சிறு நீர்ப்பாசனம்’ ஒன்றும் நாறிவிடவில்லை!!
– முரளி சீதாராமன்