அதே ரெயிலில்,சில பெட்டிகள் தள்ளி இரண்டாம் வகுப்பில் ஆப்தேயும் ,நாதுராமும் இருந்தனர். அந்த கம்பார்ட்மெண்டில் ஒரு சில பயணிகளே இருந்தனர். ஜன்னல் ஓரமாய் ,எதிரெதிரே இருவரும் அமர்ந்துக் கொண்டனர். திகம்பர் பாட்கே,மாறுவேடத்தில் பயணித்தார்.
ஆனால் ஆப்தேயும்,நாதுராமும் எந்த வித கவலையோ,அச்சமோ இல்லாமல்,தங்கள் அடையாளத்தை மறைக்காமல் இருந்தனர். அப்போது,அந்த கம்பார்ட்மெண்டில் ஒரு அழகிய பெண் இங்கும் அங்குமாய் அலைந்துக் கொண்டிருந்தார்.அந்த பெண்மணி ஜன்னல் ஓர இருக்கையை தேடி அலைவது ஆப்தேயிற்கு புரிந்து விட்டது.
ஆப்தே எழுந்து தன் இருக்கையை அந்த பெண்மணிக்கு அளித்து விட்டு எதிர்புறம்,நாதுராம் அருகே அமர்ந்துக் கொண்டார். ரெயில் புறப்பட்டவுடன்,அந்த பெண்மணியிடம் பேச்சு கொடுத்தார் ஆப்தே. அந்த பெண்மணி பிரபல சினிமா நடிகை பம்பாதானே என்று கேட்டார் ஆப்தே.
’’ ஆம் அதுதான் என் சினிமா பெயர் ‘’ என்று பதிலளித்தார் பம்பா. தொடர்ந்து பம்பாவுடன் பேசியப்படியே பயணித்தார் ஆப்தே. நாதுராம் தன் வழக்கமான சுபாவத்துடன் மெளனமான அமர்ந்திருந்தார்.
ரெயில் பம்பாய் புறநகர் பகுதியான தாதரை அடைந்தவுடன்,அங்கே இறங்குவதற்கு தயாரானார்கள் ஆப்தேயும்,நாதுராமும். பம்பாவும் அங்கே இறங்குவதைக் கண்ட ஆப்தே,பம்பாவை அவருடைய இருப்பிடத்தில் கொண்டு விடவா என்று கேட்டார்.
ஆனால் பம்பாவை அழைத்துச் செல்ல அவருடைய அண்ணன் அங்கு வந்திருந்தார். தான் சிவாஜி பார்க் அருகில் வசிப்பதாகவும்,சாவர்க்கரின் இல்லமான சாவர்க்கர் சாதனுக்கு அடுத்த வீடுதான் தன் வீடு என்றும்,ஒரு வேளை அங்கு எங்காவது போக வேண்டியிருந்தால் ,அவர்களை அங்கு இறக்கி விடுவதாக பம்பா கூறினார்.
ஆப்தேயும்,நாதுராமும் பம்பாவின் காரிலேயே பயணித்தனர். பம்பாவுடன் பயணிப்பதற்கு ஆப்தேதான் காரணம் என்று கூறவும் வேண்டுமா !
உண்மையில் கூற வேண்டுமானால்,அவர்கள் போக வேண்டிய ஹிந்து மஹா சபா அலுவலகம்,சாவர்க்கர் இல்லத்திலிருந்து அரை மைல் தொலைவில் இருந்தது. ஆனால் தேவையே இல்லாமல் பம்பாவுடன் பயணித்தார் ஆப்தே.உடன் நாதுராமும்.
பம்பா,அவர்களை சாவர்க்கர் வீட்டு வாசலில் இறக்கி விட்டுச் சென்றார்.ஆனால் அவர்கள் சாவர்க்கர் வீட்டிற்குள் நுழைந்தார்களா இல்லையா என்று கவனிக்கவில்லை.
இந்த பயணத்தின் காரணமாக,தனக்கு எதிராக ஒரு சாட்சியை உருவாக்கினார் ஆப்தே என்றே கூற வேண்டும். அது மட்டுமில்லாது,சாவர்க்கருக்கு எதிராக சாட்சியம் உருவாகவும் காரணமானார்.
ஆப்தேயும்,நாதுராமும் என்ன திட்டமிடுகிறார்கள் என்பதே சாவர்க்கருக்கு தெரியாது. ஆனால் காந்தி கொலை வழக்கு விசாரணையின் போது சாட்சியாக விசாரிக்கப்பட்ட அந்த நடிகை பம்பா, ஒரு தடாலடி நபரையும்,அவருடன் அதிகம் பேசாத ஒருவரையும்,சாவர்க்கர் வீட்டு வாசலில் இறக்கி விட்டதாக வாக்குமூலம் அளித்தார்.
இந்த சாட்சியம்,காந்தி கொலைக்கான சதித்திட்டத்தின் மூளையே சாவர்க்கர்தான் எனும் போலீஸின் வழக்கிற்கு வலுச் சேர்த்தது. நடிகை பம்பாவுடனான இந்த கார் பயணத்தின் காரணமாக,தாங்கள் பாட்கேயை சந்திப்பதாகச் சொல்லி இருந்த ஹிந்து மஹா சபாவை அடைவதற்கு இரவு 8.30 மணி ஆகி விட்டது.
நடிகை பம்பாவுடனான எதிர்பாரா சந்திப்பை பற்றியும்,தங்களை சாவர்க்கர் வீட்டிற்கு அருகே பம்பா இறக்கி விட்டது பற்றியும், ஆப்தே ,திகம்பர் பாட்கே மற்றும் சங்கர் கிஷ்டய்யாவிடமும் கூறியதின் காரணமாக அவர்களுக்கும் அந்த சந்திப்பை பற்றி தெரிந்து போனது.
அதுவும்,காந்தி கொலை வழக்கு விசாரணையின் போது ஆப்தேயிற்கும்,நாதுராமிற்கும் எதிராகப் போனது.
( தொடரும் )
#காந்தி கொலையும் பின்னணியும்
- எழுத்து: யா.சு.கண்ணன்