― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 90): வெடித்த குண்டுகளுடன் பிடிபட்டவர்!

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 90): வெடித்த குண்டுகளுடன் பிடிபட்டவர்!

- Advertisement -

ஆக காந்தியை கொலை செய்வது என்று தீர்மானத்திற்கு வந்து அதைச் செயல்படுத்தவும் தீர்மானித்த நபர்களின் எண்ணிக்கை 7. மூன்று ஜோடிகள், ஆப்தே/நாதுராம், கார்கரே/மதன்லால் பஹ்வா, பாட்கே/சங்கர் கிஷ்டய்யா. இவர்களிலிருந்து தனித்து நின்றவர் கோபால் கோட்ஸே. இவர் பூனாவிலே தன் ‘ வேலை விடுப்பிற்காக ‘ காத்துக் கொண்டிருந்தார்.

மற்ற ஆறு பேரும், அந்த புலேஸ்வரர் கோயில் வளாகத்தில், சிறிது நேரம் ஒன்றாக இருந்து விட்டு கலைந்து சென்றனர். பாட்கே பூனாவிற்குச் சென்று விட்டு, தன் ‘ வீட்டு வேலைகளை ‘ முடித்து விட்டு, 17ந் தேதி காலையில் பம்பாயில் தங்களை சந்திக்க வேண்டும் என்று முடிவாயிற்று.

அந்த நேரத்தில், வேறொரு ரிவால்வர் பெறுவதற்கான முயற்சி தோல்வி அடைந்த நிலையில்…. கோபால் கோட்ஸே தன் ரிவால்வரோடு டெல்லிக்கு வர முடியுமா என்று தெரியாத நிலையில்….

நாதுராம்,பூனாவிற்கு சென்று, குறைந்த பட்சம் கோபால் கோட்ஸேயின் ரிவால்வரை யாவது பெற்று வர வேண்டும் என்று தீர்மானித்தார். மதன்லால் பஹ்வாவும், கார்கரேயும், 15ஆம் தேதி மாலையில் டெல்லிக்கு புறப்பட இருந்த பஞ்சாப் மெயிலில், விக்டோரியா ரயில் நிலையிலிருந்து பயணிப்பது என்று முதலில் தீர்மானித்தனர்.

ஆனால், கடைசி நிமிடத்தில் அதில் பயணிக்கவில்லை. டாக்டர் ஜெயினை காண மதன்லால் பஹ்வா புறப்பட்டுச் சென்றார். அவருக்கு தன் காதலி ஷெவந்தியிடமிருந்து ஏதாவது கடிதம் வந்திருக்கிறதா என்று தெரிந்துக் கொள்ள ஆவல்.

ஒரு கடிதமும் வரவில்லை. டாக்டர் ஜெயினுக்கு தான் கொடுக்க வேண்டிய பண பாக்கியை மதன்லால் கொடுத்தார். ஆனால் தேவையே இல்லாமல்,தான் டெல்லிக்கு செல்வதாகவும்,அங்கே தன் நண்பர்களோடு சேர்ந்து ஒரு தலைவரை கொல்லப் போவதாகவும் டாக்டர் ஜெயினிடம் பீற்றிக் கொண்டார் பஹ்வா.

பின்னாளில் காந்தி கொலை வழக்கின் போது வாக்குமூலம் அளித்த டாக்டர் ஜெயின், தான் மதன்லாலிடம் அந்த தலைவரின் பெயரை கூறும்படி வற்புறுத்தியதாகவும், மதன் லால் காந்தியின் பெயரை கூறியதாகவும், உடனே தான் மதன்லாலிடம் ‘ குழந்தைத் தனமாக நடந்துக் கொள்ள வேண்டாம் ‘ என்று கண்டித்ததாகவும் கூறினார்.

மதன்லாலிடம் தான் நீண்ட நேரம் பேசியதாகவும், மதன்லால் கூறியது போல் எதையும் செய்து விட வேண்டாம் என்று அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார். மதன்லால் பஹ்வாவிற்கு தான் கூறிய அறிவுரை காரணமாக, டாக்டர் ஜெயின் தனக்கு பல வழிகளில் உதவியிருந்த காரணத்தால் அவருடைய பேச்சிற்கு தான் கட்டுப்படுவதாக பஹ்வா தெரிவித்ததாக டாக்டர் ஜெயின் கூறினார்.

பஹ்வா தன்னுடைய பேச்சைக் கேட்காவிட்டால், அவனுடைய வாழ்க்கையே நாசமாகிவிடும் என்று தான் அறிவுறுத்தியதாகவும் அவர் தன் வாக்குமூலத்தில் தெரிவித்தார். ஆனால் டாக்டர் ஜெயின், தனக்கு மதன்லால் பஹ்வா கூறிய இந்த முக்கிய தகவலை, ஏனோ அரசு அதிகாரிகளிடம், குறைந்த பட்சம் ஆறு நாட்களுக்கு முன்னதாகவாவது தெரிவிக்கவில்லை.

அதன் பின் பம்பாய் அரசில் அமைச்சராக இருந்த ஒருவரிடம், தன் பெயரை போலீஸிடம் தெரிவித்து விட வேண்டாம் எனும் வேண்டுகோளுடன், பஹ்வா தன்னிடம் கூறியதை தெரிவித்தார். அதுவும் எழுத்து பூர்வமாக கொடுக்கவில்லை.

மதன்லால் பஹ்வா, உண்மையிலேயே டாக்டர் ஜெயினிடம் தங்களின் திட்டம் தொடர்பாக எவ்வளவு விவரங்களைத் தெரிவித்தார், எந்த தேதியில் தெரிவித்தார் என்பதையெல்லாம் டாக்டர் ஜெயினால் விவரிக்க இயலவில்லை.

இது தொடர்பான டாக்டர் ஜெயினின் ஞாபக சக்தி குறைவாகவே இருந்தது. மேலும், பஹ்வா தன்னிடம் கூறியதை அந்த மந்திரியிடம் கூறிய போது,காலம் கடந்து விட்டிருந்தது.

மதன்லால் பஹ்வா, காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தின் போது குண்டு ஒன்றை வெடிக்கச் செய்து, தன் கால் சட்டைப்பையில் ஒரு கையெறி குண்டுடன் கையும் களவுமாக பிடிப்பட்டு விட்டு இருந்தார்.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version