ஜனவரி மாதம் 17ந் தேதி மாலை 8.30 மணியளவில் டெல்லி வந்திறங்கிய ஆப்தேயும்,நாதுராமும் CONNAUGHT PLACEலிருந்த மெரினா ஹோட்டலில் அறை எண் 40ல் தங்கினர்.
புது டெல்லியிலிருந்த மெரினா ஹோட்டல் பம்பாயிலிருந்த இரண்டு SEA GREEN ஹோட்டல்களை போலவே ஒரு நடுத்தர ஹோட்டல்.
மேற்கத்திய உணவு வகைகள் கிடைக்கப்பெற்ற இந்த ஹோட்டலில் பெரும்பாலும் இந்தியர்களே வந்து தங்குவது வழக்கம்.
ஹோட்டல் ரிஜிஸ்டரில்,ஆப்தேயும் நாதுராமும் தங்கள் பெயர்களை,M.தேஷ்பாண்டே மற்றும் S.தேஷ்பாண்டே என்று பதிவிட்டனர்.
இந்த பெயர்களில் எது ஆப்தேயை குறிக்கும்,எது நாதுராமை குறிக்கும் என்பது கடைசி வரை தெளிவாகவில்லை.
இரவு உணவை முடித்துக் கொண்டு இருவரும் ஹிந்து மஹா சபா பவனுக்கு சென்றனர்.
அங்கே கார்கரே அவர்களுக்காக காத்திருந்தார்.
சிறிது நேரம் கார்கரேயுடன் பேசி விட்டு அவர்கள் இருவரும் ஹோட்டலுக்கு திரும்பினர்.
அடுத்த நாள் காலையில்,கார்கரே ஆப்தேயையும்,நாதுராமையும் சந்தித்தார்.
மூவரும் ஒன்றாய் காலை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு ஒரு ‘டோங்கா’வில் காந்தி தங்கியிருந்த பிர்லா ஹவுஸிற்கு சென்றனர்.
அமெரிக்காவில் ராக்ஃபெல்ல்லர் எப்படியோ,ஜப்பானில் மிட்ஸுபிஷிஸ் எப்படியோ ,அப்படித்தான் பிர்லா இந்தியாவில்.
அதிகாரம்,செல்வாக்கு,செல்வம் ஆகியவற்றின் அடையாளம் பிர்லா.
டெல்லியிலிருந்த பிர்லா ஹவுஸ்,பிர்லா குடும்பத்தின் தலைவரான கான்ஷ்யாம் தாஸ் பிர்லாவின் இல்லம்.
இன்று பிர்லா ஹவுஸ் ஒரு நினைவிடம் ஆகி விட்டது,அது அமைந்திருக்கும் ALBUQUERQUE சாலை காந்தியின் நினைவு தினமான ஜனவரி 30ந் தேதியை குறிக்கும் விதமாக தீஸ் ஜனவரி மார்க் ஆகி விட்டது.
காந்தியின் மாலை 5 மணி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு யார் வேண்டுமானாலும் தங்குத்தடையின்றி பிர்லா ஹவுஸ் வளாகத்திற்குள் நுழைந்து வர முடியுமென்றாலும்,மற்ற நேரங்களில் பிரதான கேட்டில் காவலுக்கிருந்த செக்யூரிட்டியை கடந்து உள்ளே நுழைவது எளிதல்ல.
ஆனால் அந்த நுழைவாயில் வழியாக நுழைந்துத்தான்,அந்த பிர்லா தோட்டத்தின் அமைப்பு,மற்றும் பிரார்த்தனை கூட்டம் நடக்கக் கூடிய இடம் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமென்று அவசியம் இல்லை.
வீட்டின் இருபுறமும்,பின்புறமும்,SERVICE LANES அமைந்திருந்தன.
இது தவிர,
பின்புறம் அமைந்திருந்த ஏராளமான வேலைக்காரர்களுக்கான விடுதிகள் மற்றும் GARAGES களுக்கு செல்வதற்கு தனி வழி இருந்தது.
பிர்லா தோட்டத்தின் பெரும் பகுதியை இந்த SERVICE LANES களிலிருந்தும்,பிரதான சாலையிலிருந்தும் பார்க்க முடியும்.
அந்த அதிகம் உயரமில்லாத மதில் சுவர்களுக்கு அப்பால்,
காலை வேளைகளில் காந்தி ஒரு மூங்கில் நாற்காலியில்,தோளில் ஒரு டவல் போட்டிருந்தபடி,குனிந்து பேப்பர் படிப்பதையோ அல்லது தன்னுடைய செயலாளருக்கு ஏதாவது குறிப்புகள் கொடுப்பதையோ பார்க்க முடியும்.
( தொடரும் )
எழுத்து யா.சு. கண்ணன்