அகஸ்டா வெஸ்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டின் மிக்கேல், அப்போதைய காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு கமிஷன் தொகை கொடுக்கப்பட்டது என்றெல்லாம் கூறினார். இதனால், காங்கிரஸாருக்கு கிறிஸ்டின் மைக்கேலைக் காப்பாற்ற வேண்டிய கடும் பொறுப்பு வந்து சேர்ந்துள்ளது.
தற்போது இந்தியாவின் பிடியில் சிக்கி விசாரணைக்குள் இருந்து வரும் கிறிஸ்டின் மைக்கேல், ரஃபேல் நிறுவனத்துக்கு எதிரான போட்டியாளரான யூரோஃபைட்டர் நிறுவனத்துடன் தொடர்பில் இருந்தார். அப்போதைய காங்கிரஸ் அரசு போர்விமானம் வாங்கும் விவகாரத்தில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வாங்குவதில் இடைத்தரகு செய்தது போல், யூரோபைட்டர் நிறுவனத்துக்காகவும் இடைத்தரகு செய்தார். ஆனால், அந்த டீலிங்கை மீறி, ரஃபேல் நிறுவனம் இந்த ஆர்டரைப் பெற்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், இப்போது ரஃபேல் நிறுவனத்தை பழி தீர்க்கவும், அது பெற்ற ஒப்பந்தத்தை முறிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தக் காரணத்தாலேயே, ராகுல் காந்தி தாம் ரஃபேல் காந்தி ஆகி, காங்கிரஸாரையும் இந்தப் பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார் என்கிறார்கள்.
முன்னதாக இந்தியா கொண்டுவரப் பட்ட மிக்கேலிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணையின் போது, அகஸ்டா வெஸ்ட்கோஸ்ட் பேரத்தில் ‘திருமதி காந்தி’ மற்றும் ‘இத்தாலி பெண்ணின் மகன்’ ஆகிய பெயர்களை அவர் கூறியதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
அதாவது, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்த ஊழல் வழக்கில், கிறிஸ்டின் மிக்கேலிடம் நடத்திய விசாரணையில் சோனியா, ராகுல் ஆகியோர் பெயரை அவர் குறிப்பிட்டதாக கடந்த வாரம் அமலாக்கத்துறை பகிரங்கமாகத் தெரிவித்தது.
குடியரசுத் தலைவர் துணை குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட அரசின் உயர்பதவி வகிப்பவர்களுக்கு 12 ஹெலிகாப்டர் வாங்க இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், ரூ.3,600 கோடி மதிப்பில் ஊழல் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இதனிடையே 2014ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது. இருப்பினும் இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டின் மிக்கேல் என்ற இடைத்தரகர் ரூ.225 கோடி மதிப்பிலான தொகையை லஞ்சமாகப் பெற்றதாகத் தெரியவந்தது. இவரைத் தவிர இத்தாலியைச் சேர்ந்த குய்டோ ஹாஸ்கே மற்றும் கர்லோ கெரோஸா ஆகியோரும் இடைத்தரகர்களாக செயல்பட்டது தெரியவந்தது.
மிக்கேல் இந்த ஊழல் குறித்த செய்தி வெளியாகி, ஊழல் அம்பலமானதும் துபாய்க்கு பறந்தோடிவிட்டார். இதை அடுத்து மிக்கேலை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரிய இந்திய அரசின் வேண்டுகோளுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு சம்மதம் தெரிவித்ததையடுத்து டிசம்பர் 4ஆம் தேதி மைக்கேல் துபாயிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டார்.
தில்லி பாட்டியலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்கப்பட்ட அவரிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் விசாரணை நடத்தப் பட்டது. அப்போது, மைக்கேலிடம் நடத்திய விசாரணையின் போது, ‘திருமதி காந்தி’ மற்றும் ‘இத்தாலி பெண்ணின் மகன்’ போன்ற பெயர்களை அவர் கூறியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, ரஃபேல் நிறுவனத்தின் போட்டியாளரான யூரோஃபைட்டர்ஸ் நிறுவனத்துக்காக கிறிஸ்டின் மிக்கேல் தரகு வேலை பார்த்தது தெரியவந்தது. கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் ரஃபேல் விவகாரத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, எதிர்க்கட்சியினர் பேப்பரில் ராக்கெட் செய்து பறக்க விட்டபோது, இவை எல்லாம் யூரோஃபைட்டர்ஸை நினைவு படுத்துகிறது என்று அருண் ஜேட்லி கூறினார்.
கடந்த 2011ல் டஸல்ட் ரஃபேலுக்கும் யூரோஃபைட்டர் டைஃபூனுக்கும் நடந்த போட்டியில், ரஃபேல் வென்றது. இந்தப் போட்டியில், யூரோஃபைட்டருக்காக கிறிஸ்டின் மிக்கேல் இடைத் தரகு வேலை பார்த்ததால், இதிலும் காங்கிரஸாருக்கு பெரும் தொகை கைமாறியிருக்கலாம் என்றும், அதனால்தான் காங்கிரஸார் ரஃபேல் விவகாரத்தில் இவ்வளவுக்கு துடிப்புடன் பேசி வருகிறார்கள் என்றும் தலைநகர் வட்டாரங்கள் சொல்லிச் சிரிக்கின்றன.