அந்தமானை பாதுகாப்பு கோட்டையாக மாற்றிவருகிறது இந்தியா! அங்கே புதிய ஐஎன்எஸ் கோஹாசா தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு பலத்தை அதிகப்படுத்தும் நோக்கோடு அந்தமானில் மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துகிறது இந்தியா. குறிப்பாக மோடியின் அந்தமான் பயணத்துக்குப் பின்னர் பணிகள் பல வேகமெடுத்துள்ளன.
தற்போது அந்தமானில் புதிய விமானத்தளம் தயாராகி வருகிறது. இந்த தளம் சிறிய அளவிலான போக்குவரத்து விமானங்கள் தரையிறங்கும் அளவுக்கு தயாராகி வருகிறது. 1000 கிமீ என பரந்துள்ள அந்தமான் தீவுப் பகுதியில் கூடுதல் தரையிறங்கு தளமாகவும் இராணுவ விமானிகள் ஆபரேட்டிங தளமாகவும் இந்த புதிய தளம் செயல்படும்.
ஐஎன்எஸ் ஷிவ்பூர் எனப்படும் இந்த தளம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது இப்போது, ஐஎன்எஸ் கோஹாசா என பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. போர்ட் பிளேர், கார் நிகோபார் மற்றும் கடற்படையின் ஐஎன்எஸ் பாஸ் தளங்களுடன் கூடுதலாக இந்த புதிய தளமும் செயல்பட உள்ளது.
அந்தமான் நிகோபார் கமாண்ட்டின் சீப் வைஸ் அட்மிரல் பிம்லா வெர்மா வரும் ஜனவரி 24ல் இந்தப் புதிய தளத்தை திறக்க உள்ளார். அண்மைக் காலமாக இந்தியா அந்தமானில் தனது பாதுகாப்புக் கரங்களை வலுப்படுத்தி வருகிறது. மலாக்கா நீரிணைக்கு மிக அருகே அமைந்துள்ளதால் அதன் அமைவிடம் முக்கியத்துவம் பெறுகிறது. 70 சதவீத வர்த்தகக் கப்பல்கள் செல்லும் வழியாக இருப்பதால் இங்கு நமது ஆதிக்கத்தை செலுத்துவது முக்கியமானதாக அமைகிறது. இதனைப் புரிந்து கொண்ட மோடியின் மத்திய அரசு, இங்கே முப்படைகளும் முக்கியத்துவம் பெறும் வகையில் செயல்பாடுகளை தீவிரப் படுத்தியுள்ளது.
இப்போது, இந்தியாவின் ஒரே முப்படை நடவடிக்கை கட்டளையகம் அந்தமானில்தான் உள்ளது. முப்படை வீரர்களும் ஒரு கடற்படை அதிகாரிக்கு கீழே இயங்குவர். கடற்படை தவிர கடலோர காவல்படை, விமானப்படை மற்றும் ராணுவமும் தனது தனித்த இருப்பை இங்கே கொண்டுள்ளது!