தமிழக ஊடகங்களை மருத்துவர் ராமதாஸ் விமர்சனம் செய்தார். உடனே ஊடகங்கள் என தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் கும்பல் – ‘ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களை விமர்சிக்கலாமா’ என்று கண்டனம் தெரிவித்தது.
‘ஜனநாயகத்தின் நான்காவது தூணாக (Fourth Estate) தமிழ்நாட்டின் ஊடகங்கள் இருப்பதாக’ கூறுவது ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான பொய் பிரச்சாரம் ஆகும். இங்கு அவ்வாறான ஊடகம் எதுவும் இல்லை.
தமிழ்நாட்டில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என்று கூறிக்கொள்பவை பெரும்பாலானவை, போலிச் செய்திகளை பரப்பும் தொழிற்சாலைகளாகவும் (fake news industry), வெறுப்பு பிரச்சாரத்தை (hate propaganda) மேற்கொள்ளும் இனவெறி கும்பலாகவுமே இருக்கின்றன. தமிழ்நாட்டின் ஊடகங்கள் பத்திரிகை தர்மத்தை பின்பற்றவில்லை. மாறாக, கொடுங்கோலன் ஹிட்லர் உருவாக்கிய கோயபல்ஸ் பிரச்சாரத்தை பின்பற்றுகின்றன என்பதுதான் உண்மை.
இவற்றை, ‘ஜனநாயகத்தின் நான்காவது தூண்’ என்று அழைப்பது நீதி, நேர்மை, ஜனநாயகம், மனித உரிமைகள் உள்ளிட்ட கருத்துக்களை இழிவு செய்யும் செயலாகும். உலகெங்கும் ஊடக அறத்தை கட்டிக்காப்பதற்காக உயிர்கொடுக்கும் உண்மையான ஊடகவியலாளர்களின் தியாகத்தை இழிவு செய்யும் செயலாகும்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றால் என்ன?
ஜனநாயகத்தின் அடிப்படை ‘அதிகாரப்பகிர்வு’ ஆகும் (Separation of powers). சட்டம் இயற்ற சட்டமன்றம் (Legislature), அரசு நிருவாகத்திற்கு நிருவாகத்துறை (Executive), சட்டத்தை நிலைநாட்ட நீதித்துறை (Judiciary) ஆகிய மூன்றும் ஜனநாயகத்தின் மூன்று தூண்கள் ஆகும். இவற்றுக்கு இணையாக நான்காவது தூண் (Fourth Estate) என்று அழைக்கப்படுவது செய்தி ஊடகம் (News Media) ஆகும். இந்த நான்கு தூண்களும் ஒன்றை சார்ந்து மற்றொன்று இயங்கக் கூடாது.
ஜனநாயகத்தின் முதல் மூன்று தூண்களுடன் ‘நேரடியாகவோ – மறைமுகமாகவோ’ ஊடகங்கள் பயன்சார்ந்த தொடர்பில் இருக்கக் கூடாது. குறிப்பாக – அரசியல் கட்சிகளுடன் ஊடகங்களுக்கு பயன்சார்ந்த தொடர்பு இருப்பது அடிப்படை ஊடக நெறிகளுக்கு எதிரானதாகும். அதே போன்று தொழில்நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் ஊடகங்களுக்கு பயன்சார்ந்த தொடர்பு இருப்பதும் ‘ஆதாய முரண்’ (conflict of interest) ஆகும்.
அதாவது, அரசியல் அமைப்புகள், நீதித்துறை, நிர்வாகத்துறை, தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் கடமை ஊடகங்களுக்கு உண்டு. தாம் கண்காணிக்க வேண்டிய நிறுவனங்களுடன் ஆதாய உறவில் ஊடகங்கள் இருக்குமானால், அது வேலியே பயிரை மேயும் செயலாக முடியும் என்பதால் – உலகளாவிய ஊடக நெறிகள் இத்தகைய உறவுகளை தடை செய்கின்றன.
இதை இன்னும் விரிவாக புரிந்துகொள்ள வேண்டுமானால் – ஜனநாயகத்தின் முதல் மூன்று தூண்களின் உறவுகளை கவனியுங்கள். அரசியல் (சட்டமன்றம்), அரசு நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்றும் ஆதாய உறவில் இயங்குவது இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். ஒரு அரசியல் கட்சியில் இருப்பவர் மாவட்ட ஆட்சியராக இருக்க முடியாது. ஒரு நீதிபதி அரசியல் கட்சி தலைவராக இருக்க முடியாது. இந்த மூன்றும் தனித்தனியாக இருந்தால் மட்டுமே ஜனநாயகம் நீடிக்கும். இல்லாவிட்டால் நாடு சின்னாபின்னம் ஆகும்!
இதே பட்டியலில் நான்காவது தூணாக இருக்க வேண்டியது ஊடகம் ஆகும். ஊடகம் என்கிற ஒரு கண்காணிப்பு கருவி இல்லாவிட்டால் அரசியல், அரசு நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்றிலும் நடக்கும் முறைகேடுகள் வெளி உலகிற்கு தெரியாமல் போய், நாடு கேடடையும் என்பதால் தான் – ஊடகங்கள் நான்காவது தூணாக மதிக்கப்படுகின்றன. அதனால் தான் உலகின் முன்னேறிய ஜனநாயக நாடுகளில் அரசியல் கட்சிகளும் தொழில்நிறுவனங்களும் ஊடகங்களை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அதே போன்று ஒரே ஊடக நிறுவனத்திடம் அனைத்து ஊடகங்களும் குவிக்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊடகங்களின் உண்மை நிலை என்ன?
வாய்ப்புக்கேடாக தமிழ்நாட்டில் ஜனநாயகத்தின் காவல் அரணாக ஊடகங்கள் இல்லை. இங்கு திருடர்களே போலீசாராக வேடம் கட்டுகிறார்கள். எந்த அரசியல் கட்சிகளையும், எந்த தொழில் நிறுவனங்களையும் ஊடகங்கள் கண்காணிக்க வேண்டுமோ, அதே அரசியல் கட்சிகளும் அதே தொழில் நிறுவனங்களும் தான் இங்கு ஊடகங்களை நடத்துகின்றன.
இங்கே எல்லா அரசியல் கட்சிகள் சார்ந்தும் பொது ஊடகங்கள் இருக்கின்றன. கட்சிகளுக்கு அப்பாற்பட்டதாகக் காட்டிக்கொள்ள முயலும் பெரும்பாலான ஊடகங்கள் திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதைவிட மோசமாக, கல்விக் கொள்ளையர்கள், ஏரிக் கொள்ளையர்கள், மணல் கொள்ளையர்கள், சாராய அதிபர்கள் எல்லாம் நேரடியாகவே ஊடகங்களை நடத்துகிறார்கள்.
வேலிகள் அப்பட்டமாக பயிரை மேய்கின்றன. இவையெல்லாம் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையே ஆகும். அதே போன்று ஊடகங்கள் அனைத்தும் அரசியல் கட்சிகளுடனும் தொழில் நிறுவனங்களுடனும் ஆதாய உறவில் இருப்பதும் மிகப்பெரிய ஜனநாயகக் கேடு ஆகும் (பல ஊடகவியலாளர்கள் மறுமகனிடம் தனி ஊதியம் பெறுகிறார்கள்).
மொத்தத்தில், தமிழ்நாட்டில் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகங்கள் இல்லை. அவ்வாறு தம்மைத் தாமே ‘ஜனநாயகத்தின் நான்காவது தூண்’ என்று ஊடகங்கள் அழைத்துக் கொள்வது வெட்கக் கேடானது. மயிரிழையளவும் நேர்மையற்ற அயோக்கியத்தனமான வாதம் அதுவாகும்.
தமிழ்நாட்டில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என்று கூறிக்கொள்பவை உண்மையில் போலிச் செய்திகளை பரப்பும் தொழிற்சாலைகளாகவும் (fake news industry), வெறுப்பு பிரச்சாரத்தை (hate propaganda) மேற்கொள்ளும் இனவெறி கும்பலாகவுமே இருக்கின்றன.
தமிழ்நாட்டின் ஊடகங்கள் பத்திரிகை தர்மத்தை பின்பற்றவில்லை. மாறாக, கொடுங்கோலன் ஹிட்லர் உருவாக்கிய கோயபல்ஸ் பிரச்சாரத்தை பின்பற்றுகின்றன.
இந்த உண்மையை அனைவரும் உணர வேண்டும். ஜனநாயகத்தையும் நாட்டையும் காப்பாற்ற ஊடக அதர்மத்தை எதிர்த்து, வெறுப்பு ஊடகங்களை எதிர்த்து போராட முன்வர வேண்டும்.
(குறிப்பு: எல்லா ஊடகங்களும் ஒவ்வொரு கட்சியின், தொழில் நிறுவனத்தின் பிரச்சார பீரங்கியாக இருப்பதால் தான் நாமும் தனி ஊடகத்தை நடத்தும் தேவை எழுகிறது. அது முழு தளவில் முடியாமல் போனாலும், ஓரளவுக்கு தற்காப்புக்காக நடத்தப்படுகிறது)
– இர.அருள் (பாமக.,)