மானியமில்லாத சிலிண்டர்கள் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் தினந்தோறும் 30 லட்சம் சிலிண்டர்களை விற்பனை செய்யும் இண்டேன் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ மானியமில்லாத சிலிண்டரின் விலை சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட விலைகள் தொடர்பாக அந்நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு:
”தில்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.144.5 உயர்த்தப்பட்டு ரூ.858.5 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.149 உயர்த்தப்பட்டு ரூ.896 ஆகவும், மும்பையில் ரூ.145 உயர்த்தப்பட்டு ரூ.829.5 ஆகவும், சென்னையில் ரூ.147 உயர்த்தப்பட்டு ரூ.881 ஆகவும் உள்ளது. இந்த விலை உயர்வானது, இன்று (பிப்.12) முதல் நடைமுறைக்கு வருகிறது”. இவ்வாறு இண்டேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் ஒவ்வொரு மாதமும் சர்வதேச விலை நிலவரத்தைப் பொறுத்து, சிலிண்டர் விலையில் மாற்றம் செய்வார்கள்.
அதன் அடிப்படையில், மானியமில்லாத சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.