நமது பாரத பாரம்பரிய கலாசாரத்தில், பலவிதமான கலைகளையும், தொழில்களையும், உறவுகளையும் இயற்கை வளங்களையும், அன்றாட வாழ்க்கை முறையிலும், பண்டிகை நாட்களிலும் , சிறப்பித்துப் போற்றுவது வழக்கம் !
கோவில் திருவிழாக்கள், விரத வழிபாடுகளிலும் நம் பண்பாட்டுக் களஞ்சியங்களைச் சிறப்பித்து மகிழ்வோம் ! ஆனாலும், இன்று சுண்டல் தினம், இன்று மருதாணி தினம் எனப் பெயரிட்டதில்லை !
இன்றோ, உலக அளவில், சில தினங்கள் அனுசரிக்கப்படுகின்றன. தேசிய அளவிலும் சில தினங்கள் அனுசரிக்கப்படுகின்றன.
காலத்தின் மாற்றத்துக்கு ஏற்பவும், சில கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைப்பதற்காகவும் , சில சிறப்பு தினங்களை அனுசரிப்பதில் தவறொன்றுமில்லை ! சில சிறப்பு தினங்கள் சர்வதேச அளவில் ஒரு நாளிலும் இந்திய அளவில் வேறு ஒரு நாளிலும் அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச ஆசிரியர் தினம் அக்டோபர் ஐந்தாம் நாள் கொண்டாடப் படுகிறது ! நம் நாட்டில் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் செப்டம்பர் ஐந்தாம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக அளவில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோர் நாள் ஆகஸ்ட் இருபத்தொன்றாம் நாள் அனுசரிக்கப்படுகிறது. நம் நாட்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையான தினமாகிய மே இருபத்தொன்றாம் நாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்நாளில், பயங்கரவாதத்தை முளையிலேயே கிள்ளி ஏறியும் அரசின் முயற்சிகளுக்கு ஏகோபித்த ஆதரவு தருவது குடிமக்களின் கடமை. தொலைத்தொடர்பு சாதனங்களையும், சமூக வலைதளங்களையும் , பயங்கரவாத பிரசாரம் செய்யும் தளமாக பயன்படுத்தும் செயல்களை ஊக்குவித்தல் கூடாது, மாறாக, அத்தகைய செய்திகளை, தள நிலன்களை முடக்க வேண்டும்.
இன்று, மே இருபத்தொன்றாம் நாள் சர்வதேச கலாச்சார பன்முக தினம். ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 2001 ஆம் ஆண்டு நடந்த பொதுக் குழுவில் ஒவ்வொரு வருடமும் மே இருபத்தொன்றாம் நாளில் உலக கலாச்சார பன்முகத்தன்மை வளர்ச்சி நாளாக அனுசரிக்க தீர்மானம் இயற்றியது.
ஐக்கிய நாடுகளின் கல்வி , அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு ( யுனெஸ்கோ ) உலக கலாச்சார பன்முக வளர்ச்சி தினத்தன்று, பல்வேறு நாடுகளின் கலாச்சாரத்தை சிறப்பித்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்கிறது.
பல்வேறு நாடுகளின் , இனங்களின் கலாச்சாரம் சிதையாமலும், அனைத்து கலாச்சாரத்தையும் ஏற்று மதிக்கும் மனப்பாங்கு வளரவும் இந்நிகழ்ச்சிகள் உதவுகின்றன.
யுனெஸ்கோவின் பராம்பரிய சின்னங்கள் பட்டியலில் , தற்காலிக பட்டியலில், காஞ்சிபுரத்தின் கோவில்கள் இடம் பெற்றுள்ளது என்ற அண்மைச் செய்தி மகிழ்ச்சியைத் தரும் அதே வேளையில், முன்னேற்றம், பகுத்தறிவு, நாகரீகம் என்ற போர்வையில் , நம் கலாச்சார குறீயிடுகளையும் , கலைகளையும் மறவாமல் காத்துப் போன்ற வேண்டிய கடமை ஒவ்வோர் இந்தியனுக்கும் உள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
கலாசார பன்முகத்தன்மையில் , “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற உன்னதமான தத்துவத்தை கடைப்பிடிக்க அனைத்து தரப்பினரும் உத்வேகம் கொள்ளுதல் வேண்டும் !
- கமலா முரளி