

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சுடும் மண்ணால் ஆன முத்திரை,சங்கு வளையல்கள்,செப்பு காசு கண்டறியப்பட்டுள்ளது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் உள்ள வைப்பாற்று கரையில் விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குட்பட்ட வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த அகழாய்வில் முன்னதாக சுடுமண்ணால் ஆன பகடைக்காய்,தக்களி, ஆட்டக்காய்கள்,முத்துமணிகள்,சங்கு வளையல்கள்,பெண் உருவம்,காளை உருவம்,கோடாரி,சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள், தங்க அணிகலன்கள்,பொம்மமை உருவம் கண்டறியப்பட்டுள்ளது.இதுவரை இந்த பகுதியில் சுமார் 15 குழிகள் தோண்டபட்டுள்ள நிலையில் வியாழக்கிழமை சுடும் மண்ணால் ஆன முத்திரை,சங்கு வளையல்கள்,ஆண்,பெண் உருவம் பொறித்த செப்பு காசு ஆகியவைகள் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் வாணிப தொடர்பு வைத்துள்ளது,சங்குகளால் ஆன அழகு பொருட்களையும் பயன்படுத்தியதாகவும் மேலும் இம்மாத இறுதி வரை இந்த அகழாய்வு நடைபெறும் எனவும் தெரியவருவதாக தொல்லியல்துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

