கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம்.
நீர் கடுப்ப எனும் நீர்சுருக்கு உள்ளவர்களுக்கு சிறுநீர் போகும்போது வலி ஏற்படும் அல்லது அதிகமாகப் போக வேண்டும் என்றும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும்.
அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறுநீர் வெளியேறும். லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும். குழந்தைகள் தன்னை அறியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். நோய் அதிகமாகும்போது சிலருக்கு பயங்கர குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும்.
கோடைகாலத்தில் நீர் சரியாக பருகாத காரணத்தால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாகும். இதனால் சிறுநீரகத்தில் செயல்பாட்டால் உப்பு கலந்த கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் கொஞ்சம், கொஞ்சமாக படிந்து அது கல்லாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.
இந்த பிரச்சினை வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச் சத்துள்ள பானங்களை குடிப்பதுதான்.
அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும்.
மருந்துகள்
ஆயுர்வேதத்தில் மூத்திரத்தைக் கபத்தின் அம்சமாகக் கருதுவார்கள். மூத்திர அழற்சி என்பது சாம மூத்திரம் எனப்படும். இங்கு ஆமத் தன்மையுடைய கபம் சிறுநீரைத் தாக்கும். அதனால் கசப்பு, துவர்ப்புச் சுவையுடைய மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
நெல்லிக்காய் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை இளநீரில் சேர்த்துச் சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு இளநீர் ஆகாது.
நெருஞ்சி முள், தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகியவற்றைத் தண்ணீரில் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி ஒரு பாட்டிலில் நிறைத்து அடிக்கடி குடித்து வந்தால் பழுப்பணுக்கள் வெளியேறும்.
முதல் நாள் இரவு தண்ணீரில் உளுந்தை ஊற வைத்து மறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும் குடிக்கச் சிறுநீர் எரிச்சல், சுருக்கு நீங்கும்.
பரங்கி விதை 4-8 வரை எடுத்துக் கஷாயம் வைத்துச் சாப்பிடச் சிறுநீரக அழற்சி தணியும்.
மாதுளம் பழத்தின் மணிகளின் சாற்றை உறிஞ்சிவிட்டு விதையையும் மென்று சாப்பிடுவது நீர்க்கடுப்பைக் குறைக்கும்.
வாழைத் தண்டின் நீரைப் பருக நீர்ச் சுருக்கு, நீர் கல்லடைப்பு, சிறுநீரக அழற்சி, எலும்புருக்கி ஆகியவற்றிலிருந்து குணம் கிடைக்கும்.
கீரை வகைகளில் பசலைக் கீரை நீர் சுருக்கு, நீர்க் கடுப்பு நீங்க மிகவும் நல்லது. அது போலவே முளைக்கீரை, தண்டுக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, புதினா போன்றவை நீர்க்கடுப்பை நீக்கக் கூடியவை.
சிறுநீர் எரிச்சல் நீங்க சீரகத்தையும், கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிடுதல் நல்ல பயன் தரும்.
விளாமிச்சை அல்லது வெட்டிவேரை முடித்துக் கட்டி போட்டு நீர்ப் பானைகளில் ஊற வைக்கவும். இத்தண்ணீரைப் பருக உடல் எரிச்சல், சிறுநீர் எரிச்சல் நீங்கும்.
மோர் சிறந்த புரோபயாடிக் உணவு. அதில் பாஸ்பரஸ், கால்சியம், ரைபோஃப்ளேவின்,ஆகியவைகளைக் கொண்டுள்ளது. உடலுக்கு எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து, சிறு நீர் குழாயில் அல்லது பாதையில் ஏற்பட்ட தொற்றுக்களை அழிக்கிறது.
போதிய இடைவேளைகளில் மோரில் இஞ்சி மல்லி தழை போட்டு குடித்துக் கொண்டு வந்தால், ஓரிரு நாட்களில் முன்னேற்றம் காணலாம்.
சிறு நீர் தொற்றிற்கு ஆப்பிள் சைடர் வினிகர் மிகச் சிறந்த மருந்து ஆகும். இது கிருமிகளுக்கு எதிராக செயல்புரிகிறது. உடலுக்கு வலிமையும் தருகிறது.
சிறு நீரகத்தில் அமில் காரத் தன்மையை சமன் செய்கிறது. ஒரு டீஸ் பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேனையும் சேர்த்து தினமும் குடித்தால், சிறு நீர் தொற்று குணமாகும்
கேரட் சிறு நீர்குழாயில் உண்டாகும் பேக்டீரியாக்களை அழித்து வெளியேற்றுகிறது. கேரட்டில் விட்டமின் ஏ உள்ளதால், அது, தொற்றினால் ஏற்படும் வலியைக் குறைக்கும். தினமும் கேரட்டை ஜூஸாகவோ, அல்லது பச்சையாகவோ சாப்பிட்டால், எரிச்சலிலிருந்து விடுபடலாம்.
இஞ்சி எந்தவிதமான தொற்றினையும் சரிபடுத்தும் சிறந்த ஆற்றல் கொண்டது. அது சிறு நீர்குழாயின் தங்கும் பேக்டீரியாக்களை அழிப்பதோடு, நச்சுக்களையும் அகற்றுகிறது.
இஞ்சியை தேநீரில் கலந்து குடிக்கலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் இஞ்சியைத் தட்டி கொதிக்க வைத்து ஆறியவுடன் பருகினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். ஒரு நாளைக்கு ஒரு தடவை குடித்தால் போதும் . அதிகமாக குடிக்கும்போது அசிடிட்டி உருவாகும்.
அன்னாசிப் பழத்தின் தோலைநீக்கிய பிறகு அதை பொடி பொடியாக நறுக்கி, அரைத்து சாறு பிழிந்து, அந்த அன்னாசிப்பழச் சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.
நன்னாரி வேர், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வெந்தயம், மிளகு, சோம்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக இடித்து தண்ணீரில் இட்டு நன்கு காய்ச்சி கசாயம் போல செய்து பருகி வந்தால் சிறுநீர் சம்பந்தப்பட்ட அணைத்து கோளாறுகளும் குறையும்.
தாமரை பூவின் இதழ்கள் மற்றும் சிவப்பு நிற ரோஜா இதழ்கள் இரண்டையும் தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்.
பனங்கற்கண்டை நன்கு பொடியாக்கி பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் சுருக்கு குறையும் என்று கூறப்படுகிறது.
சுத்தமான பெர்ரி பழங்களை எடுத்து சாறு பிழிந்து தேவையான அளவு நீர் விட்டு தினமும் காலை, மாலை குடித்து வந்தால் சிறுநீர் சம்பந்தப்பட்ட எல்லா கோளாறுகள் குறையும்.
வெந்நீரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதில் கற்கண்டை கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.
சந்தனம், பசும் வெண்ணெய் ஆகியவற்றை சிறிதளவு எடுத்து முக்கள் டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.