― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுகண்கள் சிவந்து போகிறதா? காரணமும் தீர்வும்...!

கண்கள் சிவந்து போகிறதா? காரணமும் தீர்வும்…!

- Advertisement -

கண்கள் மிகவும் மென்மையானவை, கண்களை சுற்றி 12 தசைகள் இயங்குகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் கூட கண்நோய் வருகிறது.

இக்காரணத்தினால் கண்கள் கனமாக தோன்றுவதுடன் விரைவில் சோர்வடையும். பார்வை மங்குவதற்கும் வாய்ப்புள்ளது.

ஓவியம், எம்பிராய்டரி போன்ற நுட்பமான வேலை செய்பவர்களுக்கு அஸ்தனோபியா என்ற தொந்தரவு வரும். தொடர்ந்து தொலைக்காட்சி, சினிமா பார்த்தால் கண்கள் சோர்வடையும், கண்களில் வலி இருக்கும், இமைகள் கனமாக இருக்கும், தலைவலியும் வரும்.

மேலும் தொடர்ந்து படிக்கும் போது கண் மங்கலாக தோன்றும். நீண்ட நேரம் இரவில் விழித்து தொலைக்காட்சி பார்ப்பதாலும் கண் பாதிப்பு ஏற்படும்.

இதனால் கண்ணின் கருவிழி மற்றும் ஜவ்வு, கண் இமைகளின் உட்பகுதி விளிம்பு ஆகியவற்றில் சிலநோய் அறிகுறிகள் தென்படும்.

கண் சிவத்தல், கண்ணில் தூசு விழுந்தது போன்ற உறுத்தல், இமைகள் வீங்குதல், கண் கூசுதல், கண்களில் நீர் வடிதல் போன்றவை ஏற்படலாம்.

சிலருக்கு கண்கள் எப்போதுமே சிவப்பாக காணப்படும். மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு பொதுவாக ரத்தக் குழாய்கள் விரிவடையும்.

அதே போன்று கண்ணின் வெண்விழி ஜவ்விலும் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து சிவப்பாக தோன்றும். ரத்தத்தில் ஆல்கஹால் அளவு குறைந்தால் கண்கள் வெண்மை நிறத்துக்கு மாறிவிடும்.

மதுப்பழக்கம் இல்லாத சிலருக்கும் ரத்தக்குழாய் தடிமனால் கண்கள் சிவப்பாக தோன்றலாம். இதனை குளிர்க்கண்ணாடி அணிந்து சமாளிக்கலாம்.

கண் சிவந்து வலியும் இருந்தால் கண்ணில் புண் அல்லது கண் நீர் அழுத்தம் காரணமாக இருக்கலாம். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும்.

வெண்விழியில் உள்ள ஜவ்வில் வைரஸ், பாக்டீரியா தொற்று, அலர்ஜி மற்றும் கண்கள் உலர்ந்து போதல், ரசாயன பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை, தூசு விழுதல் ஆகிய காரணங்களாலும் கண்கள் வீங்கி சிவப்பாக மாற வாய்ப்புள்ளது.

எனவே கண்ணில் சிறிய பிரச்னை இருந்தாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். சுயமருத்துவம் செய்வது தவறாகும்.

இருசக்கர வாகனத்தில் கண்ணாடி இல்லாமல் செல்லுதல், கணணி திரையை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருத்தல், கண்நோய் மற்றும் டென்ஷன் காரணமாகவும் கண்ணில் நீர்வடியும்.

இதில் இரண்டு வகை உண்டு. கண் உறுத்தல், புண், அடிபடுதல், மனச்சோர்வு ஆகியவற்றால் ஏற்படுவது ஒருவகை. இன்னொரு காரணம் எபிபோரா. கண்ணீர் வெளியேறும் பாதைகளில் உள்ள அடைப்புகளினால் கண்ணில் நீர்வடியும்.

இது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். உடனடி சிகிச்சையின் மூலம் பார்வை இழத்தல் உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கின்றனர் கண் மருத்துவ நிபுணர்கள்.

குறிப்பிட்ட இடைவெளியில் கண் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் பிரச்னைகளை துவக்கத்தில் கண்டறிந்து சரி செய்யலாம்.

நாள்பட்ட சர்க்கரை மற்றும் மிகை ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் நோயை கட்டுக்குள் வைப்பது அவசியம்.

கண்ணில் ஏற்படும் நோய் தொற்று அறிகுறிகளை உடனே அறிவதும் முக்கியம். திடீர் பார்வையிழப்பு, தெளிவற்ற பார்வை, கண்களில் ஒளி வீசுதல், கறுப்புப் புள்ளிகளின் தோற்றம் போன்றவை கண் அழுத்த நோய் அல்லது மூளை பாதிப்பின் விளைவாக இருக்க வாய்ப்புள்ளது.

சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்களில் இருந்து கண்களை பாதுகாக்க கண்ணாடி அணியலாம். வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.

சரியான கண்ணாடியை அணிவதன் மூலம் பார்வை திறனை சரி செய்து கொள்ளலாம். குறைந்த வெளிச்சத்தில் படிப்பதை தவிர்க்கவும்.

கண்ணில் நீர் வடிந்தால், கண்களை கசக்கக் கூடாது. கண்களை மூடிய நிலையில் 10 நிமிடத்துக்கு சூடான ஒத்தடம் கொடுக்கலாம்.

சிவந்த கண்கள் பிரச்னை உள்ளவர்கள் வெந்நீரில் துணியை நனைத்து பிழிந்து ஒத்தடம் கொடுக்கலாம்.

கண்களில் செயற்கை அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

தலையணை உறையை தினமும் மாற்றவும். இது போன்ற நடைமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் கண் நோயால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம்.

சுத்தமான பன்னீர் சருமத்துக்கு குளிர்ச்சியையும் அரிப்பையும் அடக்குவது போன்று அது கண்களுக்கும் நன்மை செய்யும். இது கண்களில் உண்டாகும் ஒவ்வாமை காரணமாக உண்டாகும் சிவப்பை குறைக்க செய்கிறது. கண்கள் வீக்கம் மற்றும் கருவளையங்களை கூட நீக்கி கண்களுக்கு குளுமைதரக்கூடியது பன்னீர். பன்னீரை சுத்தமான நீருடன் கலந்து முகத்தை கழுவி எடுக்கலாம்.

இரண்டு காட்டன் பஞ்சுகளை எடுத்து ரோஸ் வாட்டரில் நனைத்து கண்களின் மீது வைத்து எடுக்கலாம். நாள் ஒன்றுக்கு மூன்று முறை இதை வைத்து எடுக்கலாம். விரைவாகவே கண் எரிச்சலும், சிவந்த நிறமும் மறையக்கூடும்.

கொத்துமல்லி தழையை ஃப்ரெஷ்ஷாக இருப்பவற்றை எடுத்து சுத்தம் செய்து நன்றாக அலசி எடுக்கவும். மண் தூசு இருக்க கூடாது. கொத்துமல்லி தழைகளை சிறிது நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் போல் ஆக்கவும். இதை கண்களை சுற்றீ பேக் போடுங்கள். இது கண் எரிச்சலை குணப்படுத்தும். கண் சிவத்தலை குணப்படுத்தும். கவனம் பேஸ்ட் கண்களுக்குள் சென்றுவிட கூடாது.

மழை அல்லது பனி போன்ற காய்ச்சல் பரவும் பருவகாலங்களில் அடினோ வைரஸ் மூலமாக பரவக்கூடியது கண் வலி. மெட்ராஸ் ஐ என்றும் இதை அழைப்பார்கள். வெள்ளை விழியில் அதிகமான நீர் சுரப்பு, கண்ணில் கசடுகள் சேர்தல், வலி இவற்றுடன் ஆரம்பித்திருக்கும்.
‘அவனுக்குக் கண் வலி இருக்கு. அவனைப் பார்த்தால் உனக்கும் வந்துவிடும்’, ‘கண் வலி இருந்தால் கருப்பு கண்ணாடி போட்டுக்கொள்’ என்று சிலர்
கூறுவதைக் கேட்டிருப்போம்.

ஒருவரின் கண்களைப் பார்க்கும் போது கண் வலி வந்துவிடுமா என்று கேட்டால், மருத்துவரீதியாக அப்படி இல்லை என்பதே பதில். அப்படி தொற்றுவதாக இருந்தாலும் பெரும் காற்று அடித்து அவரது கண்களில் இருந்து பல வைரஸ்கள் பறந்து வந்து வேண்டுமானால் அருகில் இருப்பவர்களை அடைந்தால் வரலாம். ஆனால், இந்தக் கிருமிகள் தொடுவதன் மூலம் பரவும் ஆற்றல் கொண்டவை.

கண்வலி வந்த நபர் ஒருவரும் நீங்களும் ஒரே மேஜை அல்லது ஒரே பேருந்தின் ஒரே இருக்கையை பயன்படுத்துகிறீர்கள். அப்போது அவர் கண்களில் வழியும் நீரை கைகளால் துடைத்துவிட்டு சீட்டைக் கைகளால் பிடிக்கிறார். அதே இடத்தில் உங்கள் கைபட்டு பின் எதேச்சையாக உங்கள் கண்களையும் நீங்கள் தொட்டு விடுகிறீர்கள். இந்தச் சூழலில் உங்களுக்குக் கண் வலி வர வாய்ப்பு அதிகம். இதேபோல் வீட்டில் ஒரு நபருக்குக் கண் வலி இருந்தால் அவர் பயன்படுத்திய துண்டு, போர்வை, கைகுட்டை இவற்றின் மூலமாகவும் அருகில் படுத்திருக்கும்போது பிறருக்கும் வந்துவிடும்.

கண் வலி வந்துவிட்டால் கண்டிப்பாக மூன்று முதல் ஏழு நாட்களுக்கு இருக்கும். அறிகுறிகளைக் குறைக்க மருத்துவ உதவி தேவை. சில சமயங்களில் வீரியமிக்க கிருமியாகவோ எதிர்ப்பாற்றல் குறைவாகவோ இருக்கும் சமயங்களில் கருவிழியையும் இந்த வைரஸ் தொற்று தாக்கியிருக்கும். இத்தகைய சூழ்நிலையில் அதிக கவனம் தேவை. இத்தகைய கண் வலி குறிப்பிட்ட கால அளவில் தானாகவே சரியாகிவிடும்.

உப்பு கிருமிநாசினி தன்மைக் கொண்ட ஒரு பொருள். இது கண்கள் சிவந்து போவதைத் தடுக்க சிறந்த முறையில் உதவுகிறது. இந்த தீர்வை தயாரிக்க உங்களுக்கு தேவை தண்ணீர் மற்றும் உப்பு மட்டுமே. ஒரு கப் சுத்தீகரிக்கப்பட்ட நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக கொதிக்க வைத்து, அதில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த உப்பு கொதிக்கும் நீரில் நன்றாக கரையட்டும். அந்த நீரை ஆற விடுங்கள். பின்பு இந்த நீரை பாதிக்கப்பட்ட உங்கள் கண்களில் இரண்டு சொட்டு விட்டுக் கொள்ளுங்கள். ஒரு நாளில் பல முறை இதனை செய்து வருவதால் கண்கள் சிவந்து போவது குறையத் தொடங்கும்.

கண்கள் சிவந்து போவதைத் தடுக்க ஒரு மிகச் சிறந்த மற்றும் எளிய வழி உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை மெல்லிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதனை உங்கள் கண்களின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். 15-20 நிமிடம் அப்படியே இருக்கட்டும். பின்பு அதனை எடுத்து விடுங்கள். ஒரு நாளில் பல முறை இதனை முயற்சித்துக் கொண்டே இருங்கள்.

உடலில் உள்ள பக்டீரியாவைக் கொல்லும் திறன் வாய்ந்தது ப்ரோ பயோடிக். யோகர்ட் ஒரு சிறந்த ப்ரோ பயோடிக் உணவாகும். சிவந்து இருக்கும் கண்களில் யோகர்ட் தடவுவதால் நல்ல நிவாரணம் கிடைக்கிறது. இரண்டு சிறிய காட்டன் பந்துகளை எடுத்து யோகர்ட்டில் முக்கி எடுத்துக் கொள்ளவும். அந்த யோகர்ட் பந்தை உங்கள் கண்களின் மேல் வைக்கவும். 15 நிமிடம் கழித்து அதனை கண்களில் இருந்து நீக்கிவிட்டு கண்களைக் கழுவவும்.

துளசி முழுக்க முழுக்க அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒரு மூலிகை ஆகும். இதற்கு வைரஸ், பக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்த்து போராடும் வலிமை உள்ளது. ஆகவே கண்களில் உள்ள தொற்றைப் போக்குவதில் நல்ல பலன் அளிக்கிறது. துளசியை பயன்படுத்துவதற்கு முன் அதனை 15 நிமிடம் நீரில் கொதிக்க வைக்கவும். துளசி கொதிக்க வைத்த நீரை பஞ்சில் நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம். பிறகு கண்களைக் கழுவிக் கொள்ளலாம்.

கற்றாழையில் அமோடின் மற்றும் ஆலோயன் போன்ற கூறுகள் அதிக அளவில் உள்ளன. இவை கிருமி எதிர்ப்பு மற்றும் பக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டவை ஆகும். உங்கள் கண்கள் மற்றும் கண் இமையைச் சுற்றி கற்றாழை ஜெல் தடவலாம்.

மஞ்சளுக்கு குணப்படுத்தும் தன்மை உள்ளது. மற்றும் பக்டீரியா எதிர்ப்பு தன்மையும் இதற்கு உண்டு. இதனால் உங்கள் கண்கள் விரைவில் குணமாகிறது. ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதிக்கும் நீரில் இரண்டு ஸ்பூன் மஞ்சள் சேர்க்கவும். இந்த நீரில் பஞ்சை நனைத்து உங்கள் கண்களில் ஒற்றி எடுக்கலாம்.

சருமத்தில் உண்டாகும் எரிச்சலைப் போக்கும் தன்மை வேப்பெண்ணெய்க்கு உண்டு. மேலும் வேப்பெண்ணெய்யில் பக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உண்டு. இரவு உறங்கச் செல்வதற்கு முன், வேப்பெண்ணெய் எடுத்து பாதிக்கப்பட்ட கண்களை சுற்றி தடவிக் கொள்ளவும்.

கண்கள் சிவந்து போவதைப் போக்குவதற்கு சிறந்த தீர்வு பாதிக்கப்பட்ட கண்களில் கூழ் வெள்ளியை தடவுவது. கூழ் வெள்ளியைத் தடவுவதால் கண்களில் தொற்று பாதிக்கப்பட்ட அணுக்கள் அழிக்கப்படுகிறது.

சுத்தமான தேன், சோம்பு விதைகள் மற்றும் கலேண்டுலா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கண்களை சுற்றி தடவுவதால் கண்களுக்கு இதமான உணர்வு கிடைக்கிறது. மேலும் கண்களின் சிவப்பு விரைந்து மறைகிறது.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கண்களில் உண்டாகும் சிவப்பு நிறத்தைப் போக்க பல தலைமுறையாக பின்பற்றி வரும் ஒரு தீர்வு தாய்ப்பால். தாய்பாலில் கிருமி எதிர்ப்பு மற்றும் பக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இவை தொற்றை சிறந்த முறையில் போக்குவதாக நிருபிக்கப்பட்டுள்ளது. ஒரு சொட்டு தாய்ப்பாலை கண்களில் விடுவதால் கண் சிவப்பு எளிதில் மறைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version