― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுகுடிநீரில் உங்கள் கவனம் எவ்வளவு தூரம் உள்ளது?

குடிநீரில் உங்கள் கவனம் எவ்வளவு தூரம் உள்ளது?

- Advertisement -
water 1

உடலின் செல்கள் இயங்குவதற்கு நீர்ச்சத்து தேவை. ஆகவே, போதுமான நீர் அருந்துவது ஆரோக்கியமாக வாழ்வதற்கு அவசியம். தண்ணீர் குடிப்பது இன்றியமையாதது என்பது அநேகருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், குடிப்பதற்கு சிறந்த நீர் எது என்பதில்தான் குழப்பம் இருக்கிறது.

சாதாரணமாக கிடைக்கும் குழாய் தண்ணீர், பியூரிஃபைடு வாட்டர் எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீர், டிஸ்டில்டு வாட்டர் எனப்படும், ஆய்வக முறையில் சுத்திகரிக்கப்படும் வாலை வடிநீர் ஆகியவற்றுள் எதை அருந்துவது ஏற்றது?

உலக நாடுகளில் குடிநீர்
மேலை நாடுகளும் குடிநீரும்
பல்வேறு மேற்கத்திய நாடுகளில், சுத்திகரிக்கப்பட்ட நீரே பொது உபயோகத்திற்கு குடிநீராக வழங்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம், உலகமெங்கும் 210 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில்லை என்று தெரிவித்துள்ளது. சர்வதேச தரம் மற்றும் அந்தந்த நாட்டின் அரசு வகுத்துள்ள வழிமுறைகள்படி உலக நாடுகளில் குடிநீரின் தரம் வேறுபடுகிறது.

உதாரணமாக, அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை, குடிநீரை குறித்து 90-க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது. ஆனால், இந்த குறைந்தபட்ச கட்டுப்பாடுகளை தவிர்த்து, அந்நாட்டின் மாநிலங்கள் ஒவ்வொன்றும் குடிநீர் பாதுகாப்பு சட்டத்தின்படி தமக்குத் தேவையான அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள முடியும்.

corporation water

குழாய் தண்ணீர்
அரசின் கட்டுப்பாடுகள்படி கிருமி நாசினிகள் சேர்க்கப்பட்டு விநியோகிக்கப்படும் குழாய் தண்ணீர் பாதுகாப்பானதுதான் என்றாலும், இயற்கை மூலங்கள் மற்றும் மனிதர்களின் செயல்பாடுகளால் அது மாசுபடுகிறது.

வளரும் நாடுகளும் குடிநீரும்
தண்ணீர் மாசடையும் பிரச்னை இருக்கும் நாடுகளில், குறிப்பாக, சுகாதார குறைவு நிறைந்த வளரும் நாடுகளில் பாட்டில் குடிநீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அருந்துவது நல்லது.

பொது குடிநீர் விநியோகத்திற்கென சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்கும் நாடுகளில் பல்வேறு படிநிலைகளில் நீர் சுத்திகரிக்கப்படுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட நீர்
நீரிலுள்ள எதிர்மின்சுமை கொண்ட வேதித்துகள்களை நீக்கும்படி, நேர்மின்சுமை கொண்ட வேதி துகள்கள் சேர்க்கப்படுகின்றன. நேர்மின்சுமை கொண்ட வேதி துகள்கள், எதிர்மின்சுமை கொண்ட வேதி துகள்களோடு இணைந்து பெரிய துகள்களாக மாறுகின்றன. இப்படி பெரிதான துகள்கள், நீரின் அடியில் படிவுகளாக தங்குகின்றன.

வீழ்படிவின் மேலே இருக்கும் நீர், மணல், கரி மற்றும் சரளைக்கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட வடிகட்டும் அமைப்பு வழியாக கடத்தப்படுகிறது. இந்த செயல்பாட்டில் தூசு, பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் எஞ்சியுள்ள வேதிப்பொருட்கள் நீக்கப்படுகின்றன. இந்த வடிகட்டல் செயல்பாடு நிகழும்போதே குளோரின் போன்ற கிருமிநாசினிகள் நீருடன் கலக்கப்படுகின்றன. முந்தைய செயல்பாடுகளில் நீக்கப்படாமலிருக்கும் பாக்டீரியாக்களும், வைரஸ்களும் கிருமிநாசினிகள் மூலம் நீக்கப்படுகின்றன.

minaral water

சுத்திகரிப்பு கருவிகள்
கரி மற்றும் யூவி என்னும் புறஊதா கதிர் பயன்படுத்துவது என பல்வேறு வகை சுத்திகரிக்கும் கருவிகள் உள்ளன. பெரும்பாலும் இவை அதிக அளவிலான நீரை சுத்தப்படுத்துவதற்கு உபயோகிக்கப்படுகின்றன. இதன் மூலமாக, பொது விநியோக குடிநீர் சுத்திகரிக்கப்படுவதால், அவை பயன்படுத்த ஏற்றது. நீரின் சுத்தத்தை குறித்து சந்தேகம் எழுந்தால் வீட்டில் அதற்கான கருவியை வைத்தோ, தரத்தை பரிசோதிக்கும் முகமையை கொண்டோ பரிசோதிக்கலாம்.

அந்தந்த நாட்டின் நிலத்தின் தன்மை மற்றும் கிடைக்கும் நீரின் தரத்தை பொறுத்து நீரை சுத்திகரிக்கும் முறைகளும் மாறும்.

விளைவுகள்
சுத்திகரிக்கப்பட்ட பொது குடிநீரை வழங்குவதற்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தாலும், அதிலும் உடல்நலத்தை பாதிக்கக்கூடிய சில மாசுகள் காணப்படுகின்றன. ஈயம், தாமிரம் போன்ற கன உலோகங்கள் உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடியன. வயிற்று உபாதையிலிருந்து நெடுநாள் உபயோகத்தில் மூளை பாதிப்பு வரை ஏற்படுத்தக்கூடியவை.

சுத்திகரிக்கப்பட்ட நீர்
பல இடங்களில் வழங்கப்படும் குழாய் தண்ணீர், குடிப்பதற்கு பாதுகாப்பானதாக காணப்பட்டாலும், அவற்றிலும் சில மாசுகள் இருக்கக்கூடும்.

ஃபியூரிபையர் பயன்படுத்தலாமா?…
நிலத்தடி நீர் அல்லது குழாய் தண்ணீரில் சேர்ந்துள்ள வேதிப்பொருட்கள், ஏனைய மாசுகள் வடிகட்டப்பட்டு அல்லது நீக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட நீர் பெறப்படுகிறது. சுத்திகரித்தல் மூலமாக, நீரிலுள்ள பல்வேறு பாக்டீரியாக்கள், பாசிகள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் மற்றும் தாமிரம், ஈயம் போன்ற உலோக சத்துகள், வேதி மாசுகள் ஆகியவை அகற்றப்படுகின்றன.

வணிக ரீதியாக மட்டுமின்றி வீடுகளிலும் பல்வேறு முறைகளில் நீர் சுத்திகரிக்கப்படுகிறது. ஆகவே, வீடுகளில் குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், மாசடைந்த தண்ணீரால் எளிதாக பாதிக்கப்படுபவர்கள் வாட்டர் ஃபியூரிபையர் வாங்கி உபயோகிக்கலாம்.

பாட்டில் வாட்டர்
நாம் வாங்கிக் குடிக்கும் பாட்டில் குடிநீர் மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவிகள் மூலம் கிடைக்கும் குடிநீர் ஆகியவை மேம்பட்ட சுத்திகரிப்பை பெற்றவை. பயன்படுத்தும் முறையை பொறுத்து இவை வேதி மாசுகள், உலோக மாசுகள் ஆகியவை நீக்கப்பட்டவையாக இருக்கும்.

bottle water

பல்வேறு காரணங்களால் விரும்பத்தகாத சுவையில் அல்லது உவர்நீராக இருக்கும் தண்ணீர், சுத்திகரிக்கப்படும்போது, குடிப்பதற்கு விரும்பத்தக்க சுவையுடையதாக மாறுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட நீர் பல்வேறு நன்மைகளை கொண்டிருந்தாலும், அதில் சில குறைபாடுகளும் உள்ளன.

புற்றுநோய் அபாயம்
கரியை வடிப்பானாக பயன்படுத்தும் கருவிகள் மூலம் சுத்திகரிப்பு நிகழும்போது, பொது விநியோக முறையில் நீரில் சேர்க்கப்படும் கிருமி நாசினியான குளோரின் நீக்கப்படுகிறது. குளோரின் சேர்க்கப்பட்ட நீரை பயன்படுத்துவது மலக்குடல் புற்றுநோய் உள்ளிட்ட சில குறிப்பிட்ட புற்றுநோய்களுக்கு காரணியாக அமைகிறது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பற்சிதைவு
பற்சிதைவை தடுக்கும்படியாக, சில நாடுகளில் பொது விநியோகத்திற்கான குடிநீரில் ஃப்ளோரைடு சேர்க்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் பற்சிதைவை இது தடுத்தாலும் அதிகப்படியான ஃப்ளோரைடு மூளை மற்றும் நரம்பு செல்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடியது.

காலப்போக்கில் இது கற்றல் மற்றும் ஞாபக சக்தி குறைபாடுகளை உருவாக்கும். ஆனாலும், குடிநீரில் சேர்க்கப்படும் ஃப்ளோரைடு பாதுகாப்பானது மட்டுமல்ல, குடிநீர் மூலமாக மட்டுமே ஃப்ளோரைடை பெற்றுக்கொள்ளக்கூடிய குழந்தைகளுக்கு, பற்சிதைவை தடுப்பதற்கு நல்ல வழியாகும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ஃப்ளோரைடு சேர்க்கப்பட்ட நீரைப் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆனால், சுத்திகரிக்கப்பட்ட நீரை பருகுகிறவர்கள், சுத்திகரிப்பான்,

தண்ணீரிலிருந்து ஃப்ளோரைடை நீக்கி விடும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

சுத்திகரிப்பு முறை
ஃபியூரிஃபையர்களும் பராமரிப்பும்
தண்ணீர் சுத்திகரிப்பான்களை ஒழுங்காகப் பராமரிக்க வேண்டும். தொடர்ந்த பராமரிப்பு இல்லாவிட்டால், ஃபில்டர்கள் என்னும் வடிப்பான்களில் மாசு படிந்து அவை தண்ணீரிலும் சேர்ந்துவிடும். வீட்டில் நாம் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் சுத்திகரிக்கும் கருவிகள், ஃபில்ட்ரேஷன் என்னும் வடிகட்டுதல், ஆர்ஓ என்னும் எதிர் சவ்வூடு பரவல், யூவி என்னும் புறஊதா கதிர் முறை ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு வகையை சார்ந்தவையாக இருக்கும்.

minaral water 1

ஃபில்ட்ரேஷன் முறையில் தேவையற்ற அசுத்தங்கள் வடிகட்டப்படுகின்றன. பெரும்பாலான கரி வடிகட்டிகள் இவ்வகையை சேர்ந்தவையே. ஆர்ஓ முறையில் அரைகடத்தியான சவ்வு அசுத்தங்களை நீக்குகிறது. புறஊதா கதிர் முறையில், அக்கதிர் பாய்ச்சப்பட்டு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள், வைரஸ்கள் கொல்லப்படுகின்றன. இவற்றின் வகையை பொறுத்து விலையும் மாறுபடும்.

அரசு தர முத்திரை
எவ்வகை சுத்திகரிக்கும் கருவியானாலும் அது அரசின் தர முத்திரை பெற்றிருக்கிறதா என்று கவனித்து வாங்கவும். சுத்திகரிக்கும் கருவியோடு வழங்கப்படும் பராமரிப்பு வழிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். ஃபில்டர்களை குறித்த இடைவெளியில் மாற்ற வேண்டும்.

சுத்திகரிக்கப்படும்போது பல மாசுகள் அகற்றப்பட்டாலும் சில குறிப்பிட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் வேதிப்பொருட்கள் நீரில் தங்கி விடுகிறது.

ஃபியூரிபிகேஷன் சிஸ்டம் என்னும் சுத்திகரிப்பானை வீட்டில் பொருத்துவதும், பாட்டில் தண்ணீரை வாங்கிக் குடிப்பதும் செலவு நிறைந்தவை. தண்ணீரை குடித்து விட்டு பாட்டிலை தூர வீசுவது, பயன்படுத்திய ஃபில்டர்களை வீசுவது என்று கழிவுப்பொருட்களும் அதிகமாகும்.

டிஸ்டில்டு வாட்டர் சிறந்ததா?
டிஸ்டில்டு வாட்டர் என்பதும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரின் ஒரு வகையே. அசுத்தங்களை நீக்கும் வண்ணம் வாலை வடித்தல் என்னும் முறையில் இது சுத்திகரிக்கப்படுகிறது. அதாவது, நீரை கொதிக்க வைத்து வரும் நீராவியை குளிரச்செய்வதன் மூலம் மீண்டும் நீர் பெறப்படுகிறது.

பாக்டீரியாக்கள், வைரஸ்கள், புரோட்டோஸோவாக்கள், ஈயம், சல்பேட் போன்ற வேதிப்பொருட்கள் ஆகியவை நீரிலிருந்து நீக்கப்படுகின்றன. இது போன்று அதிக சுத்தப்படுத்தப்படுவதால், இம்முறையில் பெறப்படும் தண்ணீர், பெரும்பாலும் மருத்துவம் மற்றும் ஆய்வக பணிகளுக்கென்றே பயன்படுத்தப்படுகிறது. மற்ற வகை நீரைப் போன்று குடிநீராக அனைவரும் பயன்படுத்துவதில்லையென்றாலும், அதின் சுத்தத்தின் அளவு கருதி சிலர் குடிநீராகவும் பயன்படுத்துகின்றனர்.

water 2

மற்ற வகையில் சுத்திகரிக்கப்படும் நீர், சுத்திகரிக்கும் அமைப்பு வகுக்கும் நெறிகளுக்கேற்ப, இடத்தின் தன்மைக்கேற்பவே சுத்தமாக இருக்கும். ஆனால், வாலை வடிநீர் மற்ற வகையை விட சுத்தமானது.

நோய் எதிர்ப்பு ஆற்றல்
நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்கள் பருக ஏற்றது டிஸ்டில்டு வாட்டர். உணவு, நீர் ஆகியவற்றின் மூலமாக கூட பாதிக்கப்படக்கூடிய நோயாளிகள் மற்றும் எச்.ஐ.வி தொற்றுள்ள எய்ட்ஸ் நோயாளிகள், சில வகை புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வாலைவடிநீரால் பயன்பெறலாம்.

வாலை வடித்தல் முறையில் குளோரினும் நீக்கப்பட்டு விடும். இது தண்ணீரின் சுவையை அதிகரிக்கும். ஆனால், குளோரின் உங்கள் உடலில் சேர வாய்ப்பிருக்காது.

டிஸ்டில்டு வாட்டர் சுத்தமானதாக இருக்கலாம்; ஆனால், அதுவே ஆரோக்கியமானது என்று கூற இயலாது.

இம்முறையில் அசுத்தங்களுடன், நீரில் இருக்கும் உடலுக்குத் தேவையான இயற்கை கனிமங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளும் நீக்கப்பட்டு விடுகின்றன. கால்சியம், மெக்னீசியம் போன்ற நன்மை தரக்கூடிய கனிமங்கள் நீக்கப்படுகின்றன.

இம்முறையில் நீரிலுள்ள 99.9% கனிமங்கள் நீக்கப்பட்டு விடுகின்றன. நீர், நம் உடலுக்கு தேவையான கனிமங்களை தரும் மூலப்பொருள் அல்ல என்றாலும், அதன் மூலம் கிடைக்கும் சில சத்துகள் குறைவது ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.

தண்ணீரின் தரம்
மற்ற சுத்திகரிப்பு முறையை போன்றே டிஸ்டிலேஷனும் நீரிலிருந்து ஃப்ளோரைடுகளை நீக்குவதால், பற்சிதைவு வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ஆகவே, இந்நீரைப் பருகுவோர் பற்பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

நாம் பயன்படுத்தும் தண்ணீரில் துத்தநாகம், நைட்ரேட், இரும்பு, காப்பர், சல்ஃபைட் போன்ற தனிம தாதுக்கள் இருக்கும். இதையே டிடிஎஸ் (Total dissolved solids) என்று குறிப்பிடுவார்கள். குடிநீர் பாட்டிலில் 20 வரையிலும், மெட்ரோ நீரில் 60 வரையிலும் டிடிஎஸ் இருக்க வாய்ப்புள்ளது.

தண்ணீரில் இருக்கும் அதிகப்படியான தாதுக்களைப் பிரித்தெடுக்கும் சாதனங்கள் இயற்கை தாதுக்களையும் சேர்த்து பிரித்துவிடுகின்றன. அதனால் தாதுக்களே இல்லாத நீரால் சிறுநீரகம் தன்னுடைய வேலையை இழக்கிறது.

தண்ணீர் சுத்திகரிப்பின் போது மாசுக்கள் அகற்றப்படலாம். மாறாக இயற்கை உப்புக்களும் சேர்ந்து வடிகட்டப்படுவதால் தண்ணீர் வெறுமனே நீராகிறது.

தண்ணீரில் தாது உப்புகள் இல்லாத பட்சத்தில் நீரானது சரியாக சுத்திகரிக்கப்படாவிட்டால் அதில் நச்சுத்தன்மையுள்ள கனிமங்கள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும்.

இதைத் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு சரும நோய்கள், கால்சியம் குறைபாடு, எலும்புகள் பலவீனம் என்ற ஆரோக்கிய குறைபாடு உண்டாகிறது. மேலும் சுகாதாரமற்ற நீரால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு, ஹெபடைட்டிஸ் போன்ற நோய்களும் வருகின்றன.

மினரல் வாட்டர் கேன்களை ஆறுமாதங்கள் மட்டுமே பயன்படுத்த தகுதிவாய்ந்தவை. ஆனால் குடிசைத் தொழில் போல் கேன் வாட்டரில் ஈடுபட்டிருக்கும் போலி நிறுவனங்கள் அழுக்கடைந்த கேன்களிலேயே மீண்டும் தண்ணீர் நிரப்பி கொண்டு வருகின்றன. அப்படி வரும் கேனை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்.

நகரங்களில் கார்ப்பரேஷன் வாட்டரைப் பெறமுடியாதவர்கள் தவிர்க்க முடியாத சூழலில் ஐஎஸை முத்திரை கொண்ட நீரை பயன்படுத்தலாம். ஆனால் வாங்கும் போது தயாரிப்பு தேதி பார்த்து வாங்குங்கள்.

கேன் வாட்டர் வாங்குவதாக இருந்தாலும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும். ஆரோக்கியம் என்பது உண்ணும் உணவில் மட்டுமல்ல. குடிக்கும் நீரிலும் உண்டு.

சுத்தமான தண்ணீரை அருந்துவது உடல்நலத்திற்கு நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version