― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுஉடலில் உள்ள வம்பை ஓட்டிவிடும் தும்பை!

உடலில் உள்ள வம்பை ஓட்டிவிடும் தும்பை!

- Advertisement -
thumbhai poo

தும்பை ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். 50 சென்றிமீட்டர் வரை உயரமாக வளரும் இதன் இலையும் பூவும் மருத்துவக் குணமுடையன. தும்பை நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத் தாவரமாகும்;

இது ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. வெள்ளை நிறப் பூக்களுடன் சிறிய செடிகளாகக் கேட்பாரின்றி விளைந்து கிடக்கும் .

தும்பைச் செடி வகைகள்
தும்பையில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித் தும்பை என்று பல வகைகளுண்டு.

மருத்துவ பயன்கள்
தும்பையை ஆயுர்வேதத்தில் இதனை துரோன புஸ்பி என்று சொல்வோம். குணமாக்கும் நோய்களில் -விஷம ஜ்வரம்.அக்னி மாந்த்யம் என்னும் பசி இன்மைக்கு ,காமாலை என்னும் மஞ்சள் காமாலைக்கு பக்ஷாகாதம் என்னும் பக்கவாதத்திற்கு ,ப்ரமேஹம் என்னும் சர்க்கரை நோய்க்கு ,விஷ ரோகங்களுக்கு ,மூல நோய்க்கும் நல்ல பலனை தரும் . காரணம் தெரியாத அரிப்பு அதனுடன் மறைந்து விடும் தடிப்புக்கும் நல்ல பலனை தரும்

மஞ்சள் காமாலைக்கு -இந்த தும்பை பூவில் செய்யும் கண் மை நல்ல பலன் தரும்.

தும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் அரைத்து சுத்தமான எண்ணெயில் கலந்து காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ்வடிதல் குணமாகும்.

தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூசினால் பூரான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும்.

தும்பை இலைச்சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர்க்கோவை குணமாகும். பாம்புக்கடிகளுக்கும் தும்பையும் மிளகும் சேர்த்து முதலுதவியாக அளிக்கலாம்.

தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுப்புக் கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குளித்துவரச் சிரங்கு , சொறி , நமச்சல்போகும்.தும்பை இலைச் சாறை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் நீரோ, கபால நீரோ, மண்டைக்குத்தலோ, மண்டையிடியோ குணமாகும்.

தும்பையிலைச் சாறு 25 மில்லியளவு பாம்பு தீண்டியவருக்குக் கொடுக்க இரண்டு மூன்று முறை பேதியாகும். கபத்துடன் வாந்தியாகும்.

குளிர்ந்த உடல் சூடு அடையும். புதுப்பானையில் பச்சரிசி, பாசிப்பயறு பொங்கி உப்பில்லாமல் சாப்பிட வேண்டும். ஒருநாள் முழுவதும் பாம்பு தீண்டியவரைத் தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் உப்பில்லாமல் பொங்கல் செய்து கொடுக்க நஞ்சு இறங்கும். மயங்கிய நிலையில் இருந்தால் சாற்றினை நசியமிடலாம். நசியத்தில் தெளியவில்லையென்றால் இறப்பது உறுதி.

நச்சு முறிவில் தும்பை தனித்த ஒரு இடம் பெறுகிறது.தும்பை இலை, கீழா நெல்லி இலை இரண்டையும் சம அளவாக எடுத்து அரைத்துச் சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும்.

thumbhai

தும்பைச் சாறும், வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாள் தர ஆசனப் புண் குணமாகும். தும்பைச் செடியை அரைத்துத் தேமல் உள்ள இடத்தில் பூசி வரத் தேமல் குணமாகும்.

தும்பைப் பூ, நந்தியாவட்டப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறும்; கண் பார்வை தெளிவடையும்.

கழுதைத் தும்பை எனும் கவிழ் தும்பை மூலிகையால் அரையாப்புக் கட்டி, வாத நோய், ரத்தமும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு அத்தனையும் நீங்கும் என்கிறார் ஒரு சித்தர்.

அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து உள்ளுக்கத் தர விக்கல் நீங்கும்.

தும்பை இலையையும், மிளகையும் அறைத்து உள்ளுக்குக் கொடுத்து, வெளியிலும் பூச விஷம் இறங்கும்.

தும்பை இலையையும் தேள் கொடுக்கு இலையையும் அரைத்துத் தரத் தேள் கடி விஷம் நீங்கும்.

தும்பை வேரையும், மருக்காரை வேரையும் அரைத்து உடலில் பூசிக் குளிக்க விஷம் இறங்கும்.

தும்பைப் பூவையும், ஆடுதீண்டாப் பாலை விதையையும் அரைத்துக் கொடுத்துப் பசும் பால் பருகிவர ஆண்மை அதிகரிக்கும்.

தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத் தனித்தனியே ஆறவைத்து உலர்த்திச் சூரணம் செய்து கொடுத்து வர இதயப் பலவீனம் நீங்கும்.

சுரத்திற்குப் பின் ஏற்பட்ட சோர்வு தீரும். பசி அதிகரிக்கும். காமாலை குணமாகும். பித்த மயக்கம், வாந்தி குணமாகும் தும்பை வேர், தைவேளை இலை, ஈர வெங்காயம் மூன்றையும் அரைத்து வைத்துக் கட்டப் பவுத்திரம் குணமாகும்.

காய்ச்சலுக்கும் தும்பைப்பூ நல்ல மருந்தாகிறது. தும்பைப்பூவுடன் சம அளவு மிளகு சேர்த்து மையாக அரைத்து சிறுசிறு உருண்டைகளாக்கி நிழலில் காய வைத்துக்கொள்ளுங்கள். நிலவேம்பு கஷாயத்தில் இந்த உருண்டையில் ஒன்றை எடுத்து கலந்து உள்ளுக்கு சாப்பிட்டால், காய்ச்சல் உடனே நிற்கும். இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் காலகட்டத்தில் மட்டும் உணவில் உப்பு, புளி, அசைவ உணவுகள் சேர்க்கக் கூடாது.

டைஃபாய்டு காய்ச்சல் வரும்போது கண்வலி, தலைவலி போன்ற பிரச்னைகளும் பின்தொடர்ந்து வரும். அப்போது 10 தும்பைப்பூக்களை தாய்ப்பாலில் ஊறவைத்து, அதை மெல்லிய துணியால் நனைத்து நெற்றி மற்றும் கன்னப்பொட்டில் பற்று போடவும். கூடவே கண்களில் இரண்டு சொட்டு விட்டால் கண்வலி, தலைவலி சரியாவதுடன் கண்களுக்கு ஒளி கிடைக்கும்.

தும்பைப்பூவின் சாறு 2 சொட்டு, வேலிப்பருத்தி (உத்தாமணி) சாறு 2 சொட்டு, மிளகுத்தூள் 2 சிட்டிகை, தேன் சேர்த்து குழைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள், மாந்தம், பேதி எல்லாம் சரியாகும்.

தும்பைப்பூவை சுமார் 50 கிராம் அளவில் சேர்த்து இரண்டு ஆழாக்கு நல்லெண்ணெயில் போட்டு தைலமாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இந்தத் தைலத்தை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் ஒற்றைத் தலைவலி, தலைபாரம், தலை நீரேற்றம், மூக்கடைப்பு ஆகியன நீங்கும்.

மூக்கடைப்பு – மூக்கில் சதை நீங்க

உலர்ந்த தும்பைப் பூ 50 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், ஓமம், பூண்டு, சித்தரத்தை ஆகியவை தலா 10 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும்

அனைத்தையும் நன்றாக இடித்து, கால் லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொள்ளவும். மூக்கடைப்பு தோன்றும்போது இந்த எண்ணெயில் 2 துளிகள் மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும். மூக்கில் சதை வளர்ந்திருந்தாலும் மறையும்.

நாவறட்சி ஏற்பட்டு, அதிக தாகம் இருக்கும்போது, தும்பையின் பூக்களை, தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது தேன் சேர்த்துப் பானமாகப் பருக, வறட்சி குறைந்து நா மலரும்.

இதன் இலைகள் மற்றும் பூக்களை உலர்த்தி வைத்துக்கொண்டு, தேனில் குழைத்துச் சாப்பிட, நாட்பட்ட இரைப்பு நோயின் தீவிரம் விரைவில் குறையும்

பூச்சாறு ஐந்து துளியை உலர்ந்த பேரீச்சம் பழத்துடன் கலந்து சுவைக்க, உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைப்பதுடன், நுரையீரல் பாதையில் சிறைப்பட்டிருக்கும் கோழையும் வெளியேறும். தும்பைச் செடியை உலர்த்திச் சூரணமாக்கி, நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துப் பாலில் கலந்து சாப்பிட்டு வர, ரத்தச் சோகை குணமாகும்.

நல்லெண்ணெய்யில் தும்பைப் பூ மற்றும் சிறிது மிளகுத் தூள், ஓமம் சேர்த்துக் காய்ச்சி, வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய்க் குளியல் செய்து வர, எவ்விதமான நோயும் உங்கள் உடலுக்குள் எட்டிப் பார்க்காது.

டான்சில்ஸ்’ எனப்படும் தொண்டைச் சதை வளர்ச்சியை தடுத்து விடும் தன்மை இதற்கு உண்டு. தும்பையின் தளிர் இலைகளைப் பறித்து நன்கு நீர் விட்டு அலசி அதனுடன் பாசிப் பருப்பு கலந்து வேக வைத்து, பின்னர் புளிக் கரைசலை ஊற்றி சிறிது நேரம் கழித்து தாளித்துக் கடைந்து சாப்பிட்டால் தொண்டைச் சதை வளர்ச்சி தடுக்கப்படும்.

கருப்பை கட்டி கரைய:-
20 தும்பை பூ உடன் 5 கிராம் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும்..
குறட்டை குணமாக:-

50 மில்லி நல்லெண்ணெய்
50 எண்ணிக்கை தும்பை பூ
இரண்டையும் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி தினமும் மூக்கில் 3 சொட்டுகள் 21 நாளைக்கு இட்டு வர குணமாகும்.
மூக்கில் சதை வளர்ச்சி, தொண்டையில் சதை வளர்ச்சி, காசக் கழலைகள், குடலில் ஏற்படும் கட்டி, வீக்கம் குணமாக:-
100 மில்லி தேன்
50 எண்ணிக்கை தும்பை பூ
50 நித்திய கல்யாணி பூ
இரண்டையும் தேனில் ஊர வைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி விதம் சாப்பிட குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version