உடல் உஷ்ணம் தணிந்து வயிற்றுப்பூச்சி அழிய
300 கிராம் முள்ளங்கிக்கீரையை எடுத்துக்கொள்ளவேண்டும். அதை சுத்தமான தண்ணீரில் அலசி சிறிய சிறிய துண்டுகளாகக் கத்தியால் நறுக்கவேண்டும்.
நறுக்கிய கீரையுடன் 200 கிராம் தேங்காய்த்துருவலையும், சிறிதளவு உப்பையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு அடுப்பில் வைக்கவேண்டும். லேசான தீயில் வேகவைக்கவேண்டும்.
வேக வைத்தபின் கைப்பிடி அளவு எடுத்து பசுவின்பாலுடன் உண்டுவர உடலின் உஷ்ணம் தணிந்து வயிற்றிலுள்ள பூச்சிகள் யாவும் அழிந்துவெளியேவரும்.
வயிற்று உளைச்சல்
துளசி இலைச் சாறுடன் கடையில் விற்கும் மாசிக்காயை வாங்கி அரைத்து நெல்லிக்காய் அளவு காலையும், மாலையும் உண்டுவர வயிற்று உளைச்சல் குணமாகும்.
குடல் புழு வெளியேற
ஐந்து கிராம் கருஞ்சீரகத்தைப் பொடி செய்து வினிகர் எனப்படும் புளித்த காடி நீருடன் கலந்து வெறும் வயிற்றில் அருந்திவர பேதி ஆகும். குடல் புழுக்கள் வெளியேறும்.
மிளகு ரசம் வைத்து சாப்பிட்டாலும் பேதியாகி குடல் புழுக்கள்
வெளியேறிவிடும்.,
சீரணம் ஆகாமை
புதினாக் கீரையைத் தண்ணீர் விட்டுக் காய்ச்சி கஷாயமாக்கி மூன்று நாட்கள் காலை, மாலை அருந்திவர நல்ல செரிமானம் உண்டாகும்.
சரும நோய்கள்
இலுப்பமரத்தின் இலைகளைப் பறித்து நன்றாக அரைத்து உடல் முழுவதும் தேய்க்க வேண்டும். அதிக நேரம் ஊறவிட வேண்டும். நன்றாக அரைமணிநேரம் ஊறிய பின்னர் பாசிப்பயறு மாவைத் தேய்த்து குளித்திட்டால் சரும நோய்கள் வராமல் தடுக்கலாம். சொறி, சிரங்கு, படை போன்றவை ஒருபோதும் வராது. தழும்புகள் மறையும், அரிப்பு உண்டாகாது. உடல் பொலிவுற்று விளங்கும்.
கருந்தேமல்
உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் சோப்புத் துண்டு ஒன்றையும், ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலைகளையும் அம்மியில் வைத்து நன்றாக அரைக்க வேண்டும். பின்னர் இந்தக் களிம்பை கருந்தேமல் மீது தடவி வர முற்றிலும் குணமாகும்.