டெங்குவிற்கு காரணம் சுகாதாரத்துறை அல்ல! டெங்குவிற்குக் காரணம் கொசுக்கடி. கொசுக்கடிக்கு காரணம் கொசு உற்பத்தி . தண்ணீர், நன்னீர் தேங்கி நிற்பது கொசு உற்பத்திக்குக் காரணமாகும்.
தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவது, மீண்டும் தேங்காமல் இருக்கச் செய்வது யார் பொறுப்பு? சுகாதாரத்துறையின் பொறுப்பா? இல்லை! இல்லை!!
சர்கார் படத்தில் டெங்குவைத் தடுக்க வேண்டிய பொறுப்பு பொதுப்பணித் துறையின் வேலை என்கிறார் நாயகன். அதை மறுத்து நெட்டிசன்கள் டெங்குவைத் தடுப்பது சுகாதாரத்துறையின் வேலை என்று சமூக வலைத் தளத்தில் எழுதுகிறார்கள்.
ஏற்கனவே சமூகத்தில் பொதுப்புத்தியில் அப்படித்தான் பதிந்துள்ளது. கொசு உற்பத்தியைத் தடுப்பது உண்மையிலேயே உள்ளாட்சி அமைப்புகள் செய்ய வேண்டிய வேலை. தண்ணீர் தேங்கி நிற்பது, டயர்கள் பானைகள் தொட்டிகள் நெகிழிப்பைகள், கப்புகள் இவற்றில் தேங்கும் நன்னீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் கொசுக்களை அழிப்பதும், உற்பத்தியாகாமல் தடுப்பதும் உள்ளாட்சி அமைப்புகளின் வேலை.
அது போலவே சாக்கடை போன்ற தூய்மையற்ற நீரில் உருவாகும் பிற கொசுக்களை( இவை மலேரியா, யானைக்கால் நோயை பரப்புபவை) உற்பத்தியாகாமல் தடுக்க வேண்டியதும் உள்ளாட்சி அமைப்புகள் வேலை தான். அதுபோல சுத்தமான குடிநீர் வழங்கி தண்ணீர் மூலமாக பரவுகின்ற நோய்களை பரவாமல் தடுக்கும் பொறுப்பும் உள்ளாட்சி அமைப்புகளின் வேலைதான்.
எல்லா நாடுகளிலும், நம் தமிழ்நாடு உட்பட இது தான் செயல்முறை. ஆனால், கொசு ஒழிப்புப் பணியில் 100 விழுக்காடு சுகாதாரத்துறை இழுத்து விடப்பட்டுள்ளது.
கெடுவாய்ப்பாக டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவதற்கு காரணமான பழி சுகாதாரத் துறையின் மீது ஒட்டுமொத்தமாக விழுகின்றது. டாக்டர்கள் சமூகப் பொது புத்தியில் வில்லன்கள் ஆக்கப்படுகின்றனர்.
உள்ளாட்சி அமைப்புகள் தான் இதற்கு முழுப் பொறுப்பு ஏற்று செயல்பட வேண்டும்.
கொசுக்களை ஒழிக்கும் பணிக்கு தடுப்பு மருத்துவத் துறை டெக்னிக்கல் வழிமுறைகளை சொல்லிக் கொடுக்கும். ஆனால் களத்தில் பணிகளைச் செய்ய வேண்டிய ஆள்பலம் , நிதி ஆதாரம் எல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கே உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளை முடுக்கி விடாமல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் ஊருக்கு நான்கு மஸ்தூர்களை ( தினக்கூலிப் பணியாளர்) அனுப்பி வேலை செய்ய வைத்தால் கொசு இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் ஒழியாது.
டெங்குவும் ஒழியாது.
பல துறைகள் இணைந்து செயல்பட வேண்டிய கொசு ஒழிப்பு பணியை டெங்கு ஒழிப்புப் பணியினை, (பழியினையும்) ஒட்டுமொத்த மாக சுகாதாரத்துறையின் மீது திணிப்பது உண்மையிலேயே டெங்குவை ஒழிக்க உதவாது.
Sugavanam: Msg shared by Dr. Kamatchi
©Voice of Govt. Doctors, Tamil Nadu