டெல்லியில் நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பல கடுமையான உத்தரவுகளை அமைச்சர்களுக்கு பிறப்பித்தார்.
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில், அவர் பேசியதாவது: மத்திய அமைச்சர்கள் காலை 9.30 மணிக்குள் தங்கள் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்றும் அவரது உத்தரவுக்கு காத்திருக்காமல், தங்கள் பணிகளை தொடங்க வேண்டும் எனவும் அமைச்சகங்களில் உள்ள உயரதிகாரிகளுடன் மட்டும் ஆலோசனை நடத்தாமல், அனைத்து நிலையிலும் உள்ள அதிகாரிகளுடனும் ஆலோசிக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் அவர், துடிப்பான அதிகாரிகளுக்கு உத்வேகம் அளித்து, அவர்களுக்கு உதவ வேண்டும். அமைச்சகங்களில் ஆலோசனை அளிக்கும் பணிகளில், உறவினர்களையோ அல்லது தங்களுக்கு வேண்டப்பட்டவர்களையோ மத்திய அமைச்சர்கள் நியமிக்கக்கூடாது. திறமையானவர்களையே அப்பதவியில் நிர்ணயிக்க வேண்டும். ஊடகங்களில் பேட்டி அளிக்கும் மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் திட்டங்கள், குறித்து உண்மைகளை மட்டுமே பேச வேண்டும்.
தேவையில்லாத கருத்துகளை கூறக்கூடாது. பொதுமக்களிடமும் அதை கடைபிடிக்க வேண்டும். மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் இடையே சிறப்பான ஒத்துழைப்பு இருப்பது மிகவும் அவசியம். இதனால் நிர்வாக திறனை மேம்படுத்தவும், நிர்வாகத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.