நீண்ட நாட்கள் நடந்த தர்மயுத்தத்தில் முதல் முதலாக தர்மத்தின் பக்கம் தீர்ப்பு கிடைத்துள்ளது… என்று ப.சிதம்பரம் கைது குறித்து, பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
மத்திய முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான 74 வயது ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா நிதி முறைகேடு வழக்கில் 15 நால் நீதிமன்றக் காவலில் சிறை வைக்க அனுப்பப் பட்டுள்ளார்.
தொடக்கம் முதலே, எனக்கு திஹார் சிறையை வழங்கி விடாதீர்கள், நான் அமலாக்கத்துறை விசாரணைக்குச் செல்கிறேன் என்றெல்லாம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மண்டியிட்டுப் பார்த்தார். உச்ச நீதிமன்றம் சென்று முறையிட்டால் நடக்கும் என்று கதவைத் தட்டினார். ஆனால் உச்ச நீதிமன்றம் கீழமை நீதிமன்றத்துக்கே மீண்டும் விரட்டிவிட்டது.
இந்நிலையில், கீழமை நீதிமன்றம், அவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுப்பி வைக்காமல், நீதிமன்றக் காவலில் திஹார் சிறைக்கே அனுப்பி வைத்தது.
பல முறை அவருக்கு சிபிஐ நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வழங்கப் பட்டு, அது மீண்டும் மீண்டும் நீட்டிக்கப் பட்டு வந்தது. இடையில் மகன் கார்த்தி சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவந்து, தேர்தலில் போட்டியிட்டு, சிவகங்கை தொகுதியில் எம்.பி.,யும் ஆகிவிட்டார்.
இந்நிலையில், இன்றைய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹெச்.ராஜா, தர்மயுத்தத்தில் முதல் முதலாக தர்மத்தின் பக்கம் தீர்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.