தட்சிணா கன்னட மாவட்ட துணை ஆணையர் எஸ்.சசிகாந்த் செந்தில் வெள்ளிக்கிழமை இந்திய நிர்வாக சேவையில் இருந்து விலகியதாக ஊடக செய்தி தெரிவிக்கிறது.
அவர் ஜூன் 2017 முதல் இந்த பதவியில் பணியாற்றினார்! மேலும் மாவட்டத்தின் செயலூக்கம் மிகுந்த துணை ஆணையர்களில் ஒருவராக பாராட்டப்பட்டார்.
தனது ராஜினாமா கடிதத்தில், அவர் தனது முடிவு தனிப்பட்ட முடிவு என்றும், தனது முடிவு எவருடனும் அல்லது எந்தவொரு நிகழ்விலும் எந்த வகையிலும் தொடர்பு கொண்டதில்லை என்றும் கூறினார்.
“பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயகத்தின் அடிப்படை கட்டுமானம் சமரசத்துக்கு உள்ளாக்கப் படும் போது, ஓர் அரசு ஊழியராக தொடர்வது தனது பார்வையில் நெறிமுறையற்றது” என்று தோன்றுவதாக அவர் கூறியுள்ளார்.
“வரவிருக்கும் நாட்கள் கடினமான சவால்களை அளிக்கும் என்பதையும், அனைவருக்கும் வாழ்க்கையை சிறந்ததாக்குவதில் எனது பணியைத் தொடர ஐ.ஏ.எஸ் பணிக்கு வெளியே நான் சிறப்பாக செயலாற்றுவேன் என்பதையும் நான் உறுதியாக உணர்கிறேன்” என்று செந்தில் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.
40 வயதான இவர் 2009 ஆம் ஆண்டு கர்நாடக கேடரின் ஐஏஎஸ் அதிகாரி . யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தமிழ்நாடு பிரிவில் முதலிடம் பிடித்தவர்! அகில இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ரீஜினல் இஞ்சினிரிங் கல்லூரியில் முதல் பிரிவில் பி.இ (எலெக்ட்ரானிக்ஸ்) படிப்பில் தேர்ச்சி பெற்றார்.
செந்தில் 2009 மற்றும் 2012 க்கு இடையில் பல்லாரியில் உதவி ஆணையராக பணியாற்றினார், மேலும் ஷிவ்மோகா ஜில்லா பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை இரண்டு முறை வகித்தார். சித்ரதுர்கா மற்றும் ரைச்சூர் மாவட்டங்களின் துணை ஆணையராகவும், நவம்பர் 2016 முதல் சுரங்க மற்றும் புவியியல் துறையின் இயக்குநராகவும் இருந்தார்.
ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த மாதம் ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் பணியில் இருந்து விலகியிருந்தார். இருப்பினும், அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
கோபிநாதன் அது குறித்து கூறியிருந்த போது, ஜம்மு-காஷ்மீர் நிலைமையால் நான் உண்மையில் கலக்கமடைந்துள்ளேன்! என்று தெரிவித்திருந்தார். “நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யாராவது என்னிடம் கேட்டால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்று முழு மாநிலத்திற்கும் தடையை அறிவித்து, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியபோது, நான் எனது வேலையை ராஜினாமா செய்தேன் என்று குறைந்தபட்சம் என்னால் பதிலளிக்க முடியும்,” என்று அவர் அப்போது கூறினார்.
ஆனால் கண்ணன் கோபிநாதன் மீது, ஜம்மு காஷ்மீர் விவகாரம் எழுப்பப் படுவதற்கு முன்பே, துறை ரீதியாக விளக்கம் கேட்டு அவரது தவறுகளுக்காக நோட்டீஸ் அனுப்பப் பட்டதும், அதற்காகவே அவரது ராஜினாமா நிறுத்தி வைத்திருப்பதும் வெளிப்பட்ட போது, கண்ணன் கோபிநாதன் மீது சந்தேக நிழல் படர்ந்தது.
இப்போது இன்னொரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக செந்தில் திகழ்கிறார். இவர் குறித்த முழு விவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை!