உணர்ச்சி மிக்க கட்டங்களில் இதுவும் ஒன்று, கலங்கி நின்ற இஸ்ரோ தலைவரை அணைத்து ஆறுதல் படுத்திய பிரதமர்.
சந்திராயன் 2 வுடன் விஞ்ஞானிகளின் தொடர்பு விடுபட்டதும் பிரதமரின் உரை நடந்ததைத் தொடர்ந்து, காரை நோக்கி கிளம்பிச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது இஸ்ரோ தலைவர் சிவன் வாசல் வரை வந்து பிரதமரை வழியனுப்பினார். பிரதமர் கிளம்பப் போகும் நேரத்தில் உற்சாகம் இழந்த, முகத்தோடு கண்ணீர் மல்க மோடியிடம் சிவன் ஏதோ ஒன்றை தெரிவித்தார்.
இதைக் கேட்டதும் மோடி அப்படியே தனது கைகளால், சிவனின், தலையை தனது தோளில் சாய்த்தபடி அவரை கட்டி அணைத்துக் கொண்டார். இதன்பிறகு அவரது முதுகில் சுமார் 30 வினாடிகளுக்கும் மேலாக தடவி கொடுத்தார் மோடி.
அப்போது சிவன் தான் அணிந்திருந்த தனது மூக்குக் கண்ணாடியை கழற்றி கையில் வைத்துக் கொண்டார். அவரது முகத்தில் பெரும் உணர்ச்சிப் பெருக்கு காணப்பட்டது. மோடி முகத்தில் லேசான இறுக்கம் அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்து சென்றது. இருப்பினும், அவர் மனது உடைந்ததாக தெரியவில்லை. ஒருவித பெருமிதத்தோடு மோடி சிவனுக்கு ஆறுதல் வழங்கினார்.
சிவன் முதுகில் தடவிக் கொடுத்த பிறகு, சிறிது நேரம், முதுகை தட்டிக் கொடுத்தார் மோடி. இதன் பிறகு பிரதமர் அங்கிருந்து விடைபெற்றார். இந்த நிகழ்வு அங்கு சுற்றி இருந்தவர்களை ஒரு நிமிடம் உருக வைத்து விட்டது என்றுதான் கூற வேண்டும். இஸ்ரோ தலைவருக்கு பிரதமர் வழங்கிய ஆறுதல் பாராட்டுகளை பெற்றுள்ளது.
என்னதான் விண்ணையே ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளாக இருந்தாலும், அவர்களும் உணர்ச்சிகள் மிகுந்த மனிதர்கள்தான் என்பதை இஸ்ரோ தலைவர் உடைந்து உருகியது எடுத்துக் காட்டியது. அதிலும் ஒரு நாளா இரு நாளா, 11 ஆண்டு மிஷன் இது.
மேலும், தொடர்ச்சியாக பல மாதங்களாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தூக்கத்தை தொலைத்து, பணியாற்றியுள்ளனர். ஆனால், கடைசி நிமிடத்தில், இந்த மிஷனில் ஏற்பட்ட தடை, விஞ்ஞானிகளை ரொம்பவே மனகலக்கத்திற்கு ஆளாக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில், பிரதமரின் உரை, அவர்களுக்கு ஒரு ஆற்றல் தரும் பானமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இஸ்ரோ சிவனை ஆறுதல் படுத்திய பிரதமர் மோடி: காணொளி