தென் இந்தியாவின் சில பகுதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று தெற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் எஸ்.கே. சைனி தெரிவித்துள்ளார்.
குஜராத் சர் கிரீக் பகுதியில் இந்தியா – பாக். எல்லையில், கேட்பாரற்று கிடந்த படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ள அவர், பயங்கரவாத செயல்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சர் கிரீக் பகுதியில் கடல் வழியே பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதை அடுத்து தென் இந்தியாவில் அலர்ட்டாக இருக்கும்படி உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ராணுவ தென்பகுதி லெப்டினன்ட் ஜெனரல் கமாண்டர் எஸ்.கே. சைனி குறிப்பிடுகையில்,
சர் கிரீக் ஒட்டிய கடல் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் படகுகள் சில கண்டறியப் பட்டன. இவற்றில் இருந்து யாரேனும் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளனரா என ஆராயப்பட்டு வருகிறது. ராணுவம் முழு அளவில் எதனையும் எதிர்கொள்ள தயராக உள்ளது. இதில் சதி ஏதேனும் இருந்தால் அது முறியடிக்கப்படும் என்றார்.
இந்தியர்கள் எவருக்கும் மும்பை தாக்குதல் அவ்வளவு எளிதில் மறந்து விடக் கூடியதல்ல. கடந்த 2008 செப்.26ம் தேதி, மும்பையில் நடந்த தாக்குதல் போல் ஏதும் நடக்கக் கூடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது!
படகில் இருந்து வந்தவர்கள் அரபிக்கடல் வழியாக நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. இதை அடுத்து குஜராத், மகாராஷ்ட்டிரம், ஆந்திரம், கர்நாடாகம், தமிழகம், கேரளம் ஆகிய பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது.