
மாநிலங்களவை உறுப்பினரான ப.சிதம்பரத்தை அடுத்து, இப்போது மக்களவை உறுப்பினர் ஆக உள்ள கனிமொழியும், ஆ.ராசாவும் வசமாகச் சிக்குகின்றனர். 2ஜி வழக்கு விஸ்வரூபம் எடுக்கிறது, அதுவும் ப.சிதம்பரத்தை தண்டித்த நீதிபதியின் கையில்!
2 ஜி தொடர்பான அத்தனை வழக்குகளையும் சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி இடமிருந்து, ஐஎன்எஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்விற்கு மாற்றி தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தில்லி பாட்டியாலா ஹவுஸ் – சிபிஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ஓ.பி.சைனி விசாரித்து வந்த 2ஜி வழக்கில், பல்வேறு திருப்பங்களும், உறுதிப் படுத்த இயலாத வகையில் சிபிஐ.,க்கு பின்னடைவும் ஏற்படுத்தப் பட்டது. இந்த வழக்கில், நிரூபிக்கத் தகுந்த வாதத்துக்காக தாம் இத்தனை நாள் காத்திருந்ததாகவும், சிபிஐ.,யினால் தமக்கு நம்புவதற்குரிய வகையில் எதையும் சமர்ப்பிக்க இயலவில்லை என்றும் கூறி, சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அளித்து 2ஜி வழக்கில் இருந்து அனைவரையும் விடுவிப்பதாக தெரிவித்தார் ஓ.பி.சைனி.
ஆனால், சிபிஐ., தரப்பு மேல் முறையீடு செய்யும் என்று கூறி வந்தது. தொடர்ந்து தில்லி உயர் நீதிமன்றம் இன்று இந்த வழக்கு குறித்த விசாரணையை தற்போதைய சிபிஐ., நீதிபதி அஜய் குமார் குஹார் வசம் ஒப்படைப்பதாகக் கூறியது.
முன்னர் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா குறித்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த போதெல்லாம், அவருக்கு சிபிஐ கைது செய்து விசாரிப்பதில் இருந்து வாய்தா அளித்து, முன் ஜாமீன் வழங்கி, நீட்டித்தும் வந்ததார் நீதிபதி ஓ.பி.சைனி.
இந்நிலையில், அந்த வழக்கு ஓ.பி.சைனியிடம் இருந்து அஜய் குமார் குஹார் வசம் வந்த போது, திடீரென அவருக்கு முன் ஜாமீன் மறுக்கப் பட்டதுடன், இது போன்ற கொள்ளைக்கூட்டத் தலைவர்களுக்கெல்லாம் முன் ஜாமீன் வழங்குவது மிகத் தவறு என்ற ரீதியில் கருத்தும் தெரிவித்து, தற்போது ப.சிதம்பரம் திஹார் சிறையில் காலம் தள்ளுவதற்குக் காரணமாக அமைந்தார் நீதிபதி அஜய் குமார் குஹார்..
மேலும், கர்நாடக காங்கிரஸில் பெரும் செல்வாக்கும் செல்வ வளமும் பெற்றவராகத் திகழும் டி.கே.சிவகுமாரின் ஊழல்களைத் தகுந்த வகையில் விசாரிக்க நீதிபதி அஜய் குமார் குஹார் சாட்டையைச் சுழற்றியுள்ளார். அதனாலேயே அவரும் சிபிஐயின் வசம் சிக்கியுள்ளார்.
தற்போது, தில்லி உயர் நீதிமன்றம் அதே போல் ஓ.பி.சைனியிடம் இருந்து வழக்கை அஜய் குமார் குஹாருக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம், இந்த வழக்கை நேர்மையான முறையில் மீண்டும் தூசு தட்டி அஜய் குமார் குஹார் விசாரிப்பார் என்று தெரிகிறது.
இந்தச் செய்தி கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. நீதிபதி ஓ.பி. சைனி இம்மாத இறுதியில் ஓய்வுபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
BREAKING: 2G spectrum cases pending in the court of Special CBI judge OP Saini have been transferred to Special CBI judge Ajay Kumar Kuhar – the same judge who is currently hearing ongoing cases against P. Chidambaram and DK Shivakumar.