ஆர்டிசி போராட்டம் குறித்து தெலங்காணா அரசு முக்கியமான முடிவு எடுத்துள்ளது. தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு ஆர்டிசி.,யின் செயல் இயக்குனர்களுடன் சேர்ந்து ஆர்டிசி மேலாண் இயக்குனர் ஒரு கமிட்டியை நியமித்துள்ளார். இந்தக் கமிட்டி அளிக்கும் அறிக்கையின் படி மாநில உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
ஆர்டிசி.,யை அரசாங்கத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொழிலாளர் சங்கங்கள் தமக்குத்தாமே விட்டுக்கொடுக்கும் பட்சத்தில், அந்த அடிப்படையில் தொழிலாளர்களின் பிற கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதல்வர் கேசிஆர் முடிவு எடுத்துள்ளதாக அக்.22 செவ்வாய்க்கிழமை நேற்று இரவு ஊடகங்களுக்கு வெளியிட்ட ஓர் அறிவிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாலைப் போக்குவரத்துக் கழகம் – ஆர்டிசி., போராட்டம் குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளதன் அடிப்படையில் முதல்வர் கேசிஆர் பிரகதி பவனில் போக்குவரத்துத் துறை அமைச்சர் புவ்வாட அஜய்குமார் மற்றும் உயர் அதிகாரிகளோடு கலந்து பேச்சு நடத்தினார்.
ஆர்டிசி.,யை அரசோடு இணைப்பதாக அறிவித்தால்தான் பேச்சுவார்த்தைக்கு உடன் படுவோம் என்று தொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் முதலில் அறிவித்திருந்தார்கள். அதுவே தங்களின் முதல் கோரிக்கை என்று கூட கூறினார்கள். ஆனால் நீதிமன்ற விசாரணையின் போது ஆர்டிசியை அரசோடு இணைப்பது குறித்து பிடிவாதம் பிடிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்கள்.
தொழிலாளர் சங்கங்களின் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் பிரகாஷ் ரெட்டி கூட ஆர்டிசியை அரசோடு இணைக்கும் கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று தொழிலாளர்கள் எப்போதும் கூறவில்லை என்றார்.
எனவே, அரசோடு இணைக்கும் கோரிக்கை ஒன்று மட்டுமே முக்கியம் அல்ல என்றும் அவர் வாதிட்டார். அதனால் தொழிலாளர்கள் இணைப்பு கோரிக்கையை விட்டு விட்டதாகத் தெரிகிறது என்று அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது.
உயர் நீதிமன்ற முதன்மை நீதிபதி உத்தரவில் கூட அதே விஷயத்தைப் பற்றி குறிப்பிட்டு உள்ளார் என்று முதல்வர் கேசிஆர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். தொழிலாளர்கள் எடுத்துக்கொண்ட கோரிக்கைகளில் 21 அம்சங்களை பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளதாக அவர் கூறினார்.
நீதிமன்ற உத்தரவின்படி அந்தக் கோரிக்கைகளை பரிசீலிப்போம். அதற்காக ஆய்வு மேற் கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆர்டிசி., மேலாண் இயக்குனராக உள்ள போக்குவரத்து துறை முக்கிய செயலர் சுனில் சர்மா, முதல்வர் கேசிஆர் உத்தரவுப்படி ஆறு அதிகாரிகளைக் கொண்ட கமிட்டியை நியமித்துள்ளார். நீதிமன்றம் குறிப்பிட்ட அந்த 21 அம்சங்களை இந்த கமிட்டி பரிசீலித்து ஓரிரு நாட்களில் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.