கடன்களுக்கான வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நாட்டின் முன்னணி வங்கிகள் குறைத்துள்ளன.
புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக நேற்று முன் தினம் உரையாற்றிய பிரதமர் மோடி வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு எதிரொலியாக நாட்டின் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.9 சதவீதம் குறைத்துள்ளது.
அதன்படி ஒரு வருட கால கடன்களுக்கான வட்டி விகிதம் 8.9 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைந்துள்ளது. மற்ற கால வரைமுறை அளவிலான கடன்களுக்கான வட்டிகளும் 0.9 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளன. யூனியன் பேங்க் ஆப் இந்தியா 0.65 சதவீதம் அளவிற்கு வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. ஐடிபிஐ வங்கி மூன்று
வருட கால நிர்ணய கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.4 சதவீத அளவிற்கு குறைத்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவையும் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகை பெருமளவு அதிகரித்ததையடுத்து, இந்த வட்டிக் குறைப்பு அறிவிப்பை வங்கிகள் வெளியிட்டுள்ளன. இந்த அறிவிப்பையடுத்து வீட்டுக்கடன், கார் கடன் போன்றவற்றுக்கான வட்டி விகிதம் கணிசமான அளவு குறையும்.