குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் அந்தப் புயலுக்கு மஹா என்று பெயரிடப் படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் தெற்குப் பகுதி, டெல்டா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பட்சத்தில் அதற்கு மஹா என்று பெயர் சூட்டப்படும். ஓமன் நாட்டின் சார்பில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் புயலால் தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. வடகிழக்குப் பருவமழையைப் பொருத்த வரை இந்த மாதம் 20 செ.மீ., பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 14 சதவீதம் அதிகம் என்றார்.