இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் மூலமாக மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடிப்படை பணிகள் நிறைவுபெற்று, அடுத்தகட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன என இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் சிவன் கூறியுள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மகேந்திரகிரியில் உள்ள திரவ எரிபொருள் நிரப்பும் மையத்தில் நாடு முழுவதுமுள்ள அந்த துறை சார்ந்த விஞ்ஞானிகள் அலுவலர்கள் கலந்துகொண்ட விளையாட்டு போட்டி நடைபெறுகிறது.
இந்த விளையாட்டுப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் பெங்களூர் செல்லும் வழியில் தூத்துக்குடியில் விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “கடந்த ஜூலை மாதம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 2-ல் உள்ள விண்கலம் சிறப்பாக வேலை செய்து வருகிறது. அதனுடைய ஆர்பிட்டர் நல்ல முறையில் இயங்கிக் கொண்டுள்ளது. அதிலிருந்து கிடைக்கும் டேட்டாக்களை நாம் பயன்படுத்த தொடங்கி விட்டோம்.
தொடர்ந்து இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மூலமாக வரும் நவம்பர் மாதம் பிஎஸ்எல்வி ராக்கெட் ஒன்று ஏவப்பட உள்ளது. அதுமட்டுமன்றி தொடர்ந்து பல செயற்கைக் கோள்கள் ஏவப்பட உள்ளன.
தற்போது ராக்கெட்டுகள் கிரையோஜெனிக்,செமி கிரையோஜெனிக் இயந்திரங்கள் மூலம் செலுத்தப் படுகின்றன, வரும் காலங்களில் எலக்ட்ரிக் இயந்திரம் மற்றும் மீத்தேன் மூலமாக இயங்கக்கூடிய இயந்திரங்கள் கொண்டு ராக்கெட் செலுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.