யாரைக் கேட்டு கலாம் பெயரை மாற்றினீர்கள்? என்று கொதித்தெழுந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மாணவர்களுக்கான விருதுக்கு, மீண்டும் பழையபடி பெயரை மாற்ற ஆணையிட்டார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் அளித்து வந்த பிரதீபா புரஸ்கார் அவார்டை ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டி பெயரில் மாற்றியது ஆந்திரா அரசாங்கம்.
ஒவ்வொரு ஆண்டும் அப்துல் கலாம் பிறந்த நாளன்று இந்த விருதுகளை பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அளித்து வந்தனர். இந்தப் பெயரை மாற்றி விட்டதாக திங்களன்று அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் ஆந்திர அரசின் இந்த முடிவின் மீது அப்துல் கலாமை அவமதித்து விட்டதாக பலரும் விமர்சனம் செய்தனர். ஒய்எஸ்ஆர் உயர்ந்தவராக இருக்கலாம். ஆனால் கல்வி அமைப்பில் அரசியலுக்கு அப்பாற்பட்டு இளைஞர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளித்தவர் அப்துல் கவாம் என்று நாடெங்கிலும் இருந்து வந்த விமர்சனத்தால் ஜெகன் அதிகாரிகளிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினாராம்.
தன் பார்வைக்குக் கொண்டு வராமலேயே பெயரை மாற்றி விட்டதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இது குறித்து குறிப்பிட்டுள்ளார். உடனே பிரதீபா புரஸ்கார் பெயரை மாற்றிய அரசாணையை ரத்து செய்யக்கோரி உத்தரவிட்டார். பழையபடியே அப்துல்கலாம் பெயரே இந்த விருதுக்கு இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதே போல அரசு அளிக்கும் விருதுகளுக்கு நாட்டின் மிகச் சிறந்த தலைவர்களின் பெயர்களைக் கூட வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.