விமானத்தை நிறுத்தி எலியைப் பிடித்தனர். இதனால் விமானம் சுமார் பதினொன்றரை மணி நேர தாமதம் ஆனது. அவசர கதியில் விமானத்தில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்கள் இதனால் ஆத்திரம் அடைந்தனர்.
எலியால் ஏற்பட்ட தாமதம் இது. நடந்த இடம், ஹைதராபாத் ஷம்ஷாபாத் ஏர்போர்ட்!
விசாகப்பட்டினம் செல்லவேண்டிய இந்தியன் ஏர்லைன்ஸ் எஐ 952 விமானம் தயாராக இருந்தது. ஞாயிறு காலை 6 மணிக்கு கிளம்ப வேண்டும். முன்பாகவே செக்கிங் எல்லாம் முடித்து பயணிகள் காத்திருந்தனர்.
குறிப்பிட்ட நேரம் கடந்து போனாலும் அவர்களுக்கு அழைப்பு வரவில்லை. அதிகாரிகளிடம் இருந்து பேச்சு மூச்சே இல்லை. விமானம் தாமதம் ஆகும் என்ற செய்தி கூட மிகத் தாமதமாகவே வந்தது.
முதலில் காலை 8 மணிக்கு கிளம்பும் என்றார்கள். அந்த நேரமும் கடந்து போனது. மீண்டும் மதியம் 3 மணிக்கு கிளம்பும் என்றார்கள். அவ்வாறு ஒவ்வொரு முறை ஒவ்வொரு நேரம் சொன்னதால் பயணிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இறுதியாக சுமார் 11.30 மணி நேரம் தாமதமாக மாலை 5.30 மணிக்கு விமானம் காற்றில் பறந்தது. சரி தாமதத்திற்கு காரணம் என்ன? ஒரு எலி தான்!
அந்த விமானத்தில் ஒரு எலி நுழைந்ததை விமானப் பணியாளர் ஒருவர் காலையிலேயே பார்த்து விட்டார். ஏடிசி அதிகாரிகளுக்கு உடனே செய்தி பறந்தது. அவர்கள் எலியைப் பிடிக்கும் வரை விமானத்தைப் பறக்க அனுமதிக்கவில்லை.
இந்த ஒரு எலி களேபரத்தில், 250 பயணிகளில் சுமார் 50 பேர் பயணத்தை ரத்து செய்து சென்றுவிட்டார்கள். நெருங்கிய உறவினரின் இறுதிச் சடங்குக்கு செல்ல முடியாமல் போனதே… என்று ஒருவர், முக்கியமான தேர்வுக்கு ஆஜராக முடியாமல் போனதே… என்று மற்றொருவர்…
இவ்வாறு கவலைப் படுவதை பார்த்து அங்கிருந்த பிறர் மனம் வருந்தினர்.