“அம்மா…! அப்பா எங்களை கொல்றார், அம்மா !” பெற்ற குழந்தைகளுக்கு தந்தை செய்த சித்திரவதை குறித்து வெளியான தகவல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மேலும், வீடியோ எடுத்து வெளிநாட்டிலுள்ள மனைவிக்கு அனுப்பி பயமுறுத்தவும் செய்துள்ளார் அந்த நபர். எத்தனை கஷ்டங்கள் எதிர் வந்தாலும் கண்ணை இமை காப்பதுபோல் பிள்ளைகளை காக்கவேண்டிய தந்தையே கடமையை மறந்தார். தீய பழக்கங்களுக்கு அடிமை ஆனார்.
வேலை தேடி வெளிநாடு சென்று அங்கேயே பணிபுரிந்து கொண்டிருக்கும் மனைவி பணம் அனுப்பவில்லை என்று பிள்ளைகளை சித்திரவதை செய்து அந்தக் காட்சிகளை வீடியோ எடுத்து மனைவிக்கு அனுப்பினார் அந்த நபர்.
இந்தக் கொடுமை கிழக்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரம் மண்டலத்தில் நடந்தது .
‘உல்லம் பர்த்தி எலிஷா’வும் மகாலட்சுமியும் கணவன் மனைவியர். கீர்த்தி (8) , மம்மு (6) இவர்களின் மகள்கள். ஓர் ஆண்டுக்கு முன் மகாலட்சுமி வேலை நிமித்தமாக துபாய் சென்றார். அங்கிருந்து அவர் அனுப்பும் பணத்தைக் கொண்டு எலிஷா தீய பழக்கங்களுக்கு ஆளானார்.
அடிக்கடி பணம் கேட்டு மனைவியை தொந்தரவு செய்யத் தொடங்கினார். அவர் அனுப்பாததால் குழந்தைகளை சித்திரவதை செய்து, “அம்மா! அப்பாவுக்கு பணம் அனுப்பு… இல்லை என்றால் எங்களை கொன்று விடுவார், அம்மா!” என்று பேச வைத்து அவற்றை வாட்ஸ்அப் மூலம் மனைவிக்கு அனுப்பத் தொடங்கினார்.
எலிஷாவோடு கூட அவர் சகோதரியும் குழந்தைகளை கொடுமை செய்தாள். அந்த வீடியோக்களைப் பார்த்த மகாலட்சுமி தவித்துப் போனார். தன் உறவினர்களுக்கு அவற்றை அனுப்பி முறையிட்டார். அவை சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின.
இதை அடுத்து, நரசாபுரம் டிஎஸ்பி கே. நாகேஸ்வர ராவு தலைமையிலான போலீஸார் எலிஷாவை கைது செய்தனர் .
இந்தச் சம்பவம் பற்றி அறிய மாநில மகளிர், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ‘தானேடி’ வனிதா செவ்வாயன்று நரசாபுரம் சென்றார். தந்தையின் கைகளால் சித்ரவதைக்கு ஆளான சிறுமிகளை டிஎஸ்பி அலுவலகத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார் .
தொடர்ந்து, துபாயில் உள்ள மகாலட்சுமியோடு குழந்தைகளை வீடியோ மூலம் பேச வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தச் சம்பவம் மனித தன்மைக்கு களங்கம்! குழந்தைகளின் தந்தை, அவர் சகோதரி இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சிறுமிகளை ‘தணுக்கு’ வில் உள்ள ‘குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து பாதுகாப்பு அளிப்பதாக கூறினார். அவர்களைப் படிக்க வைக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என்றார்.